புதிய அரசுக்கு வாழ்த்துகள்!

எப்படி இருந்தார் என்றுநாம் பாரோம்;

இவர் பின்னாலே இருப்பவர் பாரோம்.

இப்பெரு நாட்டை ஆண்டிடும் பொறுப்பு,

இவருக் கீந்த இறை பார்ப்போம்.

நற்பணி செய்து நன்மை தாரோம்;

நாட்டை உயர்த்த நேர்மை தாரோம்;

அப்படி மட்டும் ஆள்வோம் என்றால்,

ஆசி, அருள், என்றுரைப்போம்!

-கெர்சோம் செல்லையா.

காடிக் கசப்பை வாங்கிய இயேசு,

கனியும் வாக்கு, முடிந்தது.

தேடிக் கொண்டு இப்புவி வந்த,

தெய்வப் பணியும் முடிந்தது.

மூடிக் கொண்டு அலகை செல்ல,

முடிக்கும் வாக்கு, முடிந்தது.

ஆடிக்கொண்டு அலைவோர் மீள,

அருளிய திட்டமும் முடிந்தது!

(யோவான் 19:30).

தன்பணி முடிக்கும் நேரம் நெருங்க,

தாகம் மிகுந்த அவர் கேட்டார்.

அன்னிலை  விருப்பு  உடல் மெய்க்கெனினும்

ஆய்வோர் இன்று மெய் கண்டார்.

இன்னில மைந்தர் உயிர் நீர் அருந்த, 

ஏங்கும் இயேசு நமைக் கேட்டார்.

நன்னீர் இல்லார் காடியே கொடுப்பார்;

நம்முட் கைப்பு பொய் கண்டார்! 

(யோவான் 19:28-29).

மூன்றாம் வாக்கை மொழிந்த பின்னர்,

மும்மணி நேரமும் காரிருள்.

சான்றோன் சுமக்கும் உலகின் பாவம், 

சான்று பகர்ந்திடும் பேரருள்.

ஏன்தான் இறையே ஏன்தான் இறையே,

என்று கேட்பதோ ஏக்கம்;

நான்காம் வாக்கில் நன்கு தெரியும், 

நம்வினை இருள் நீக்கம்!

(மத்தேயு 27:45-46)