எத்தனை திரள் என்  தீவினை அறிவேன்;

எப்படி நான் இறை மீட்பு பெறுவேன்?

அத்தனை வழிகளும் முட்டிடும் சந்து;

அழுது, திரும்புது, என் மகிழ்வுந்து!

ஒத்தையொரு வழி பவுல் அறிவித்தார்;

இயேசு மீதுறும் பற்றென்றுரைத்தார்.

பித்தம் தெளிய நான் பற்றிக் கொண்டேன்.

பேரருளாலே, மீட்பும் கண்டேன்!

(உரோமர் 3)

முதற்பயனாகத் தன்னுயிர் ஈந்த,

மூப்பன் தேவான் முடிவிற்கு, 

எதற்கும் துணிந்த இளைஞன் பவுலே 

ஏது என்று வருகிறான்.

அதற்குப் பிறகு நடந்த நிகழ்வை,

ஆயும் மனிதர் விடிவிற்கு, 

புதர்க்குள் இருந்த புலியாய் அல்ல, 

புறாவாகித் தருகிறான்!

(திருத்தூதர் பணிகள் 8 & 9)

துன்பங்கள் ஏற்று அருட்பணி செய்தோர்,

தொலைவுப் பயணம் செல்கிறார்.

நன்னிலம் மட்டுமே கனி தரும் என்று, 

நாடுகள் திருந்தச் சொல்கிறார். 

அன்னியர் என்று இதுவரை வைதோர்,

அன்பில் புத்துரு கொள்கிறார்.

என்னிலமாயினும் இறைக்கு ஒன்று;

இயேசு அன்பாய் வெல்கிறார்!

(திருத்தூதர் பணிகள் 8)

உயிர்த்தார் இயேசு என்றே உரைத்து,

உயிரும் ஈந்தார் அந்நாளில்.

வயிற்றால் வாழ்ந்து, வஞ்சிப்போரே

வளருகின்றார் இந்நாளில்.

கயிற்றால் கட்டப் பட்டிருப்பாரை

கரை சேர்ப்பது எந்நாளில்? 

பயின்றார், மறந்தார் என்றில்லாமல், 

படைத்து, பணிகிற நன்னாளில்!

(திருத்தூதர் பணிகள் 5, 6 & 7)

புழு!

புழு!

மண்ணில் உழலும் புழுவைக் கண்டு, 

மனித பெருமை அகலக் கண்டேன்.

கண்ணில் காணும் அப்புழு உண்டு,

கால் நீட்டும் தவளையும் கண்டேன்.

அந்த தவளையை விழுங்கிக் கொண்டு,

அடி வாங்கும் பாம்பும் கண்டேன்.

இந்த பெருமை புகழ் தூள் துண்டு!

இவனை உண்ணும் புழு கண்டேன்!

-கெர்சோம் செல்லையா. 

ஒரு வீட்டவர் நாம் என்பது தெரிந்து,

ஒன்றாய் அடியர் உழைக்கிறார்.

மறு கடையாளரும் மைந்தனை அறிந்து,

மாட்சி அடைய  அழைக்கிறார்.

வறுமையில் எவரும் விழுவது தடுத்து,  

வளங்கள் ஒன்றாய் இணைக்கிறார். 

எருசலேம் நகரில் இப்படிக் கொடுத்து,

இயேசுவைக் கட்டி அணைக்கிறார்!

(திருத்தூதர் பணிகள் 2: 42-47).

ஒரு முட்டாளின் அறிவு!

முட்டாளாய் பிறந்து, முட்டாளாய் பறந்து,

முழு அறிஞனாக நான் நடிக்கிறேன்.

கெட்டாளாய் மலர்ந்து கெட்டாளாய் உலர்ந்து, 

கெடுப்பேன் எனத்தான் வெடிக்கிறேன்.

தொட்டாள்வேன் இன்று, தூய்மைக்கே என்று;

தொடங்கும் அறிவிறை பிடிக்கிறேன்.

மட்டாகா மகிழ்ச்சி, மடமையின் வீழ்ச்சி;

மண் தருமோ? உரை முடிக்கிறேன்!

–கெர்சோம் செல்லையா.

எழும்பி நின்ற அடியவர் நடுவே, 

இறை வாக்களித்தார் பேதுரு.

குழம்பி நின்றவர் தெளிவு பெறவே, 

கிறித்து நல்கிய புத்துரு.

அழுக்குணந்தவர் உளம் திருந்தவே, 

அளித்தார் அந்நாள் முழுக்கு. 

இழுக்கு துறந்தார் பத்து முன்னூறு;

இதுவே திரு அவை, விளக்கு!

(திருத்தூதர் பணிகள் 2).

அரேமிய மொழியைப் பேசும் அடியார், 

ஆவியில் நிறைந்து எழும்புகிறார். 

பிறமொழி பேசும் பெரும் வரம் பெற்று, 

புறத்தியாரையும் எழுப்புகிறார். 

ஒரேமொழி இணைக்கும் என்கிற கருத்தை, 

உடைத்து இறையே எழும்புகிறார். 

யார் யார், எம்மொழி என்னும் பிரிவினை,

இல்லாதாரையும் எழுப்புகிறார்!

(திருத்தூதர் பணிகள் 2).

பன்னிரு அடிகளும், பற்றுள்ளோர்களும், 

பாங்காய் இணைந்து வேண்டுகையில்,

சொன்ன தம் வாக்கை நிறைவேற்றிடவே,

தெய்வம் ஆவியர் ஆகிறார்.

அன்னிறை நாளும், ஐம்பதென்றிருக்க,

அவை பிறந்துத் தோன்றுகையில், 

என்னிலத்தோர்களும், இயேசுவில் ஒன்று,

என்று இறையும் ஏகிறார்!

(திருத்தூதர் பணிகள் 2.1-47)