அனுப்பும் ஆண்டவரே!

அனுப்பப்பட்டவர்!

இறைவாக்கு: யோவான் 13:20.

  1. நான் அனுப்புகிறவனை ஏற்றுக்கொள்ளுகிறவன் என்னை ஏற்றுக்கொள்ளுகிறான், என்னை ஏற்றுக்கொள்ளுகிறவன் என்னை அனுப்பினவரை ஏற்றுக்கொள்ளுகிறான் என்று, மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.

இறை வாழ்வு:

அழைக்கும் இறைவன் அனுப்பாதிருந்தும்,
அலைகிறார் பலபேர்; நன்றன்று.
பிழைப்பிற்கான வழியென நினைத்தும்,
பிரித்துச் செல்கிறார்; நன்றன்று.
உழைக்க அனுப்பும் இடத்தில் தூங்கும்,
இன்றைய அமைப்பும் நன்றன்று.
கழைக்கூத்தாடும் காட்சிகள் போதும்;
கனி கொடுப்பதே நன்றின்று!

ஆமென்.

-கெர்சோம் செல்லையா.

உடன் இருப்பவர்!

உடன் இருப்பவர்!

இறைவாக்கு: யோவான் 13:18-19.

  1. உங்களெல்லாரையுங்குறித்து நான் பேசவில்லை, நான் தெரிந்துகொண்டவர்களை அறிவேன்; ஆகிலும் வேதவாக்கியம் நிறைவேறத்தக்கதாக, என்னுடனே அப்பம் புசிக்கிறவன் என்மேல் தன் குதிகாலைத் தூக்கினான்.
  2. அது நடக்கும்போது நானே அவரென்று நீங்கள் விசுவாசிக்கும்பொருட்டு, இப்பொழுது அது நடப்பதற்கு முன்னமே அதை உங்களுக்குச் சொல்லுகிறேன்.

இறைவாழ்வு:

படை எடுத்து வருபவரை,
பகைவர் என்னலாம்.
உடனிருந்து கெடுப்பவரை,
என்ன சொல்லலாம்?
நடை காக்கும் நம்மிறையை,
நம்பிச் செல்லலாம்.
கடை விரிக்கும் கயவரினை,
கட்டச் சொல்லலாம்!

ஆமென்.

-கெர்சோம் செல்லையா.

பெரியோரை மதிப்போம்!

பெரியோரை மதிப்போம்!

இறைவாக்கு: யோவான் 13: 16-17.

  1. மெய்யாகவே மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், ஊழியக்காரன் தன் எஜமானிலும் பெரியவனல்ல, அனுப்பப்பட்டவன் தன்னை அனுப்பினவரிலும் பெரியவனல்ல.
  2. நீங்கள் இவைகளை அறிந்திருக்கிறபடியினால், இவைகளைச் செய்வீர்களானால், பாக்கியவான்களாயிருப்பீர்கள்.

இறை வாழ்வு:

வேலை கொடுத்த முதலாளியை நாம்
வேண்டா வெறுப்பில் பார்க்கிறோம்.
நூலை அறியா முட்டாள் என்றும்,
நெஞ்சுள் திட்டித் தீர்க்கிறோம்.
வாலை வைத்து, தலையையளக்கும்,
வழி முறையால்லே தோற்கிறோம்.
பாலை தாழ்ச்சி, சோலை மகிழ்ச்சி;
பார்த்தறிந்தோம், ஏற்கிறோம்!  

-ஆமென்.

-கெர்சோம் செல்லையா. 

மாதிரி யார்?

எனக்கு மாதிரி யார்?

இறைவாக்கு: யோவான் 13: 12-15.12. அவர்களுடைய கால்களை அவர் கழுவினபின்பு, தம்முடைய வஸ்திரங்களைத் தரித்துக்கொண்டு, திரும்ப உட்கார்ந்து, அவர்களை நோக்கி: நான் உங்களுக்குச் செய்ததை அறிந்திருக்கிறீர்களா?13. நீங்கள் என்னைப் போதகரென்றும், ஆண்டவரென்றும் சொல்லுகிறீர்கள். நீங்கள் சொல்லுகிறது சரியே, நான் அவர்தான்.14. ஆண்டவரும் போதகருமாகிய நானே உங்கள் கால்களைக் கழுவினதுண்டானால், நீங்களும் ஒருவருடைய கால்களை ஒருவர் கழுவக்கடவீர்கள்.15. நான் உங்களுக்குச் செய்ததுபோல நீங்களும் செய்யும்படி உங்களுக்கு மாதிரியைக் காண்பித்தேன்.

இறைவாழ்வு:

பாதிரியார் பலர் உண்டு;

பார்க்கிறோமே இன்று.

மாதிரி யார் யாருண்டு?

மறுபடி சொல் நின்று.

தீதளிப்பார் நிலை கண்டு,

திருப்பிடுவாரன்று.

தூதாகச் செயல் கொண்டு,

துணையிருப்பார் நன்று!

ஆமென்.

-கெர்சோம் செல்லையா!

All reactions:9Victor Raj, Bhavani Jeeja and 7 others

கயவனையும் கழுவுதல்!

கயமை அறிதல்!

இறைவாக்கு: யோவான் 13:11.

  1. தம்மைக் காட்டிக்கொடுக்கிறவனை அவர் அறிந்திருந்தபடியினால் நீங்களெல்லாரும் சுத்தமுள்ளவர்கள் அல்ல என்றார்.

இறைவாழ்வு:

என்னுடன் இருப்போன் உள்ளிலென்ன,
என்னறிவிற்குத் தெரியலையே.
தன்னுடன் வளர்க்கும் கேடு மறைத்து,
தாழ விழுந்து கிடப்பானே!
முன்னொரு நாளில் யூதாசுள்ளில்,
முளைத்த கயமை அறிந்தவரே,
அன்பால் அவனைக் கழுவிய உம்மை
அறிந்து, நானும் நடப்பேனே!

ஆமென்.

-கெர்சோம் செல்லையா.

நாளும் கழுவப்பட வேண்டும்!

நாளும் கழுவப்பட வேண்டும்!
இறைவாக்கு: யோவான் 13: 10.

  1. இயேசு அவனை நோக்கி: முழுகினவன் தன் கால்களைமாத்திரம் கழுவவேண்டியதாயிருக்கும், மற்றப்படி அவன் முழுவதும் சுத்தமாயிருக்கிறான்; நீங்களும் சுத்தமாயிருக்கிறீர்கள்; ஆகிலும் எல்லாரும் அல்ல என்றார்.

இறை வாழ்வு:

இம்மானுவேலரின் உதிரத்துள்,
இறங்கி, மூழ்கி எழுந்தாலும்,
நம்மால் தொடரும் தீவினைகள்,
நாளும் கழுவப்பட வேண்டும்.
தம்மால் இயலாதென்பவர்கள்,
தடுக்கி, தாழ விழுந்தாலும்,
அம்மாதிரியான அடியரையும்,
அன்பில் எழுப்பிட வேண்டும்!

ஆமென்.

-கெர்சோம் செல்லையா.

என்னைக் கழுவும்!

என்னைக் கழுவும்!
இறை வாக்கு: யோவான் 13:8-9.

  1. பேதுரு அவரை நோக்கி: நீர் ஒருக்காலும் என் கால்களைக் கழுவப்படாது என்றான். இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக: நான் உன்னைக் கழுவாவிட்டால் என்னிடத்தில் உனக்குப் பங்கில்லை என்றார்.
  2. அதற்குச் சீமோன் பேதுரு: ஆண்டவரே, என் கால்களைமாத்திரமல்ல, என் கைகளையும் என் தலையையும்கூட கழுவவேண்டும் என்றான்.

இறைவாழ்வு:

என்னைக் கழுவும், என்னைக் கழுவும்.
என் கறையகல, என்னைக் கழுவும்.
செந்நிறக் குருதி சிந்திய இறையே,
செம்மையாக்க, என்னைக் கழுவும்.
பன்முறை வழிகள் பலர் உரைத்தாலும்,
பாவியின் கறையோ நீங்கவில்லை.
உன்னருட் குருதி ஊற்றே தஞ்சம்.
உணர்ந்த எனது நெஞ்சைக் கழுவும்!

ஆமென்.

-கெர்சோம் செல்லையா. 

புரியவில்லையா?

புரியவில்லையா?

இறை வாக்கு: யோவான் 13: 6-7.

  1. அவர் சீமோன் பேதுருவினிடத்தில் வந்தபோது, அவன் அவரை நோக்கி: ஆண்டவரே, நீர் என் கால்களைக் கழுவலாமா என்றான்.
  2. இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக: நான் செய்கிறது இன்னதென்று இப்பொழுது நீ அறியாய், இனிமேல் அறிவாய் என்றார்.

இறை வாழ்வு:

எத்தனை எத்தனையோ நிகழ்வுகள்;
ஏன் வந்தன என அறியாதவைகள்.
அத்தனை அறிவையும் பெற்றவர்கள்,
யாரிங்கு உண்டு, சொல்லுங்கள்.
பித்தனைப் போன்று அலைபவர்கள்,
பிறகு யாரிடம் பெறுவார்கள்?
நித்தம் நடத்துவாரைப் பாருங்கள்.
நேர்மை, அதனுள் செல்லுங்கள்!

ஆமென்.

-கெர்சோம் செல்லையா.

தாழ்மை!

தாழ்மையின் அடையாளம்!

இறைவாக்கு: யோவான் 13: 2-5.

  1. சீமோனின் குமாரனாகிய யூதாஸ்காரியோத்து அவரைக் காட்டிக்கொடுக்கும்படி பிசாசானவன் அவன் இருதயத்தைத் தூண்டினபின்பு, அவர்கள் போஜனம்பண்ணிக்கொண்டிருக்கையில்;
  2. தம்முடைய கையில் பிதா எல்லாவற்றையும் ஒப்புக்கொடுத்தாரென்பதையும், தாம் தேவனிடத்திலிருந்து வந்ததையும், தேவனிடத்திற்குப் போகிறதையும் இயேசு அறிந்து;
  3. போஜனத்தை விட்டெழுந்து, வஸ்திரங்களைக் கழற்றிவைத்து, ஒரு சீலையை எடுத்து, அரையிலே கட்டிக்கொண்டு,
  4. பின்பு பாத்திரத்தில் தண்ணீர் வார்த்து, சீஷருடைய கால்களைக் கழுவவும், தாம் கட்டிக்கொண்டிருந்த சீலையினால் துடைக்கவும் தொடங்கினார்.

இறைவாழ்வு:

தாழ்மை என்ற சொல்லின் பொருளை,
தலைவர் இயேசு தருகின்றார்.
வாழ்வை வழங்கும் பணியில் சிறுமை
வந்தும் அன்பில் பெறுகின்றார்.
ஏழ்மை என்பது எண்ணில் அல்ல;
எண்ணம் என்று விளக்குகிறார்.
பாழாய்ப் போன நெஞ்சு கொடுப்போம்;
பண்பட இயேசு துலக்குகிறார்!

ஆமென்.

-கெர்சோம் செல்லையா.

முன்னுக்குப் பின்!

முன்னுக்குப் பின்!

நம்முன் வந்து நம்மைப் புகழ்ந்து,
நல்லவன் என்று வாழ்த்துகிறார்.
தம்மிரு கால்கள் திரும்பும் போது,
தவறாய் ஏசித் தாழ்த்துகிறார்.
இம்மாதிரியார்  இருப்பது கண்டு,
ஏன்  நெஞ்சே நீ கலங்குகிறாய்?
சும்மா என்று தூக்கியே போடு;
சுட்ட வாக்கால் துலங்கிடுவாய்!

-கெர்சோம் செல்லையா.