ஆல் விழுந்த காட்சி கண்டு,
அஞ்சி நின்ற மக்களிடம்,
நூல் இழையில் காத்திடும் நம்
நுண்மதியான் அருளுரைப்பேன்.
வால் இழந்த நாயினுக்கும்,
வாய் இனிக்க உணவளிக்கும்,
மால் இறைவன் வாக்கினுக்கு,
மடியாமல் பொருளுரைப்பேன்.
-கெர்சோம் செல்லையா.

The Truth Will Make You Free
ஆல் விழுந்த காட்சி கண்டு,
அஞ்சி நின்ற மக்களிடம்,
நூல் இழையில் காத்திடும் நம்
நுண்மதியான் அருளுரைப்பேன்.
வால் இழந்த நாயினுக்கும்,
வாய் இனிக்க உணவளிக்கும்,
மால் இறைவன் வாக்கினுக்கு,
மடியாமல் பொருளுரைப்பேன்.
-கெர்சோம் செல்லையா.

யார் மூத்தவர்?
பேரரே பாட்டர்க்கு மூத்தவரென்று,
பெருமையில் பேசும் ஆரியரே,
சேரரும் சோழரும் தோன்றிடு முன்பு,
சென்றவர் பாண்டிச் சீரியரே!
நீரதைத் தோண்டி நிலத்தைப் பிளப்பின்,
நேர்மை எதுவெனத் தெரிவீரே.
யாரெமை ஆண்டால் எமக்கொன்றுமில்லை
என்கிற தமிழரைப் புரிவீரே!
-கெர்சோம் செல்லையா.
வெள்ளை நிறத்தில்
கல்லறைகள்!
எள்ளை நட்டு
எண்ணையெடுப்பார்
இந்திய நாட்டில்
குறைந்திட்டார்.
கள்ள வழியில்
கலப்படம் செய்து
காசு சேர்ப்போர்
நிறைந்திட்டார்.
கொள்ளையிடுதல்
தவறு என்று
கூறி வாழ்வோர்
குறைந்திட்டார்.
வெள்ளை நிறத்துக்
கல்லறையினையும்
வீடு என்பார்
நிறைந்திட்டார்.
-கெர்சோம் செல்லையா.

வீணாக்காமல் உதவுவோம்!
பட்டினி என்றால் என்னவென்று,
பாட்டினில் சொன்னால், நாம் பாடோம்.
கட்டிட வேறு உடையற்றவரைக்
காண்பீர் என்றால், நாம் தேடோம்.
கொட்டிடும் உணவைக் கொடுப்பீரென்றால்,
கொஞ்சங் கூட நாம் கொடோம்.
விட்டிடுவோம் இந்த கெட்ட வாழ்க்கை;
வீணாக்காது உதவிடுவோம்.
-கெர்சோம் செல்லையா.

உழைப்போம், உயர்வோம்!
உழைப்பவர் இழப்பவராகி விட்டால்,
உயராதென்றும் ஒரு நாடு.
பிழைப்பவர் ஏற்க மறுத்து விட்டால்,
பெருமையின் முடிவு சுடுகாடு!
அழைத்தவர் உழைப்பை மதித்துவிட்டால்,
அதுதான் சிறந்த பண்பாடு.
தழைப்பவர் இனிமேல் யாரென்றால்,
தாழ்நிலை ஏழை எனப் பாடு!
-கெர்சோம் செல்லையா.

எண்ணும் மரியாள்!
இறைவாக்கு: லூக்கா 2:18-20.
18 மேய்ப்பராலே தங்களுக்குச் சொல்லப்பட்டதைக் கேட்ட யாவரும் அவைகளைக்குறித்து ஆச்சரியப்பட்டார்கள்.
19 மரியாளோ அந்தச் சங்கதிகளையெல்லாம் தன் இருதயத்திலே வைத்து, சிந்தனைபண்ணினாள்.
20 மேய்ப்பர்களும் தங்களுக்குச் சொல்லப்பட்டதின்படியே கேட்டு கண்ட எல்லாவற்றிற்காகவும் தேவனை மகிமைப்படுத்தி, துதித்துக்கொண்டு திரும்பிப் போனார்கள்.
இறைவாழ்வு:
பிஞ்சுக் குழந்தை மடியிலிருக்கப்
பேசும் மேய்ப்பர் சொல் கேட்டாள்.
அஞ்சும் நிலையில் அவளிருந்தாலும்,
அதனைப் பொருட்படுத்தாது விட்டாள்.
நெஞ்சில் நினைத்து வைத்தது எல்லாம்,
நேர்மையாளர் வாக்காகும்.
கெஞ்சிக் கேட்கும் நாமும் எண்வோம்;
கிறித்து வாக்கே வாழ்வாகும்!
ஆமென்.

மீட்பரைக் கண்டு நாம் உரைப்போமா?
இறைவாக்கு: லூக்கா 2:15-17.
15 தேவதூதர்கள் அவர்களை விட்டுப் பரலோகத்துக்குப் போனபின்பு, மேய்ப்பர்கள் ஒருவரையொருவர் நோக்கி: நாம் பெத்லகேம் ஊருக்குப் போய், நடந்ததாகக் கர்த்தரால் நமக்கு அறிவிக்கப்பட்ட இந்தக் காரியத்தைப் பார்ப்போம் வாருங்கள் என்று சொல்லி,
16 தீவிரமாய் வந்து, மரியாளையும், யோசேப்பையும், முன்னணையிலே கிடத்தியிருக்கிற பிள்ளையையும் கண்டார்கள்.
17 கண்டு, அந்தப் பிள்ளையைக் குறித்துத் தங்களுக்குச் சொல்லப்பட்ட சங்கதியைப் பிரசித்தம்பண்ணினார்கள்.
இறைவாழ்வு:
கேட்டவர் சென்று கண்டறிந்தார்;
கிறித்து பிறந்ததை நன்கறிந்தார்.
நோட்டம் விட்டவர் செல்லாமல்,
நொடிந்தோர் மகிழ நன்குரைத்தார்.
ஓட்டைப் பானை ஒழுகுதல்போல்,
ஒரு பயனில்லா நம் வாழ்வில்,
மீட்பரைக் கண்டு நாம் உரைப்போமா?
மேய்ப்பரின் வழியில் சிறப்போமா?
ஆமென்.

மண்ணில் அமைதி மலர்வதற்கென்று…
கிறித்துவின் வாக்கு: லூக்கா 2:13-14.
13 அந்தசஷணமே பரமசேனையின் திரள் அந்தத் தூதனுடனே தோன்றி:
14 உன்னதத்திலிருக்கிற தேவனுக்கு மகிமையும், பூமியிலே சமாதானமும், மனுஷர்மேல் பிரியமும் உண்டாவதாக என்று சொல்லி, தேவனைத் துதித்தார்கள்.
கிறித்துவில் வாழ்வு:
மண்ணில் அமைதி மலர்வதற்கென்று,
மனிதரை இணைக்கும் பணி செய்வோம்.
எண்ணம், பேச்சு, செயலில் இன்று,
இறைவன் அன்பால் அணி செய்வோம்.
விண்ணின் வேந்தன் மாட்சியடைய,
விரும்பும் நன்மையைத்தாம் செய்வோம்.
திண்ணம் ஒரு நாள் தீமை ஒழியும்;
தெய்வ அரசாய் நாம் உய்வோம்!
ஆமென்.

குறையில்லை!
கிறித்துவின் வாக்கு: லூக்கா 2 : 10 -12.
10 தேவதூதன் அவர்களை நோக்கி: பயப்படாதிருங்கள்; இதோ, எல்லா ஜனத்துக்கும் மிகுந்த சந்தோஷத்தை உண்டாக்கும் நற்செய்தியை உங்களுக்கு அறிவிக்கிறேன்.
11 இன்று கர்த்தராகிய கிறிஸ்து என்னும் இரட்சகர் உங்களுக்குத் தாவீதின் ஊரிலே பிறந்திருக்கிறார்.
12 பிள்ளையைத் துணிகளில் சுற்றி, முன்னணையிலே கிடத்தியிருக்கக் காண்பீர்கள்; இதுவே உங்களுக்கு அடையாளம் என்றான்.
கிறித்துவில் வாழ்வு:
எந்தத் திங்கள், எந்த ஆண்டு
எந்த நாளெனத் தெரியவில்லை.
என்றபோதும் இயேசு பிறப்பை,
எவரும் மறுக்க இயலவில்லை.
வந்து பிறந்த குழந்தை தந்த,
வாழ்வில் மகிழ்வு குறையவில்லை.
வாழ விரும்பின் இயேசுவைப் பாரும்,
வழியாம் அவரில் குறையுமில்லை!
ஆமென்.

