நீண்ட நெடிய பயணம் செல்ல, நீங்களும் நானும் எண்ணின், வேண்டுமளவு உணவு உண்ண, வெளியாளையே நாடுவோம். ஆண்டவரோ அந்தக் காட்டில், அன்றாடம் அவர் உணவிற்கு, தேன் இனிப்பின் மன்னா தந்தார். தெய்வத்தையே தேடுவோம்! (விடுதலைப் பயணம் 16).
செயல்பட வழியொன்று காணா நிலையில், செய்தியை இறையிடம் சொல்லுங்கள். புயலெனக் காற்று, பெருங்கடல் அலையில், புது வழி திறந்திடும், செல்லுங்கள். அயலினத்தார் நமை ஆண்டிட வருகையில், அவரே அமிழ்கிறார், சொல்லுங்கள். வெயிலோ, மழையோ, தெய்வம் தருகையில், விண்ணைப் பார்த்து, செல்லுங்கள்! (விடுதலைப் பயணம் 14).
வேறு வழியற்றதாலே விடுவித்தார். விட்ட பின் எகிப்தியர் ஒடுகிறார். ஆறு நூறு தேரிலே விரைந்தார்; அக்காடெங்கிலும் தேடுகிறார். பேறு நிறைந்த இசரயெல்லரோ, பெருங்கடல் முன்பு வாடுகிறார். யாருமுதவிட இயலா நிலையில், இறையே கடத்தி விடுகிறார்! (விடுதலைப் பயணம் 14).
எழுபது பேராய் எகிப்திற்கு வந்தோர், இருபது இலட்சமாய்க் கடக்கிறார். அழுவது தானே தம் நிலை என்றோர், ஆர்ப்பரித்தவராய் நடக்கிறார். விழுவது பார்வோன் வீம்பென்றறியார் விரும்பி இன்றும் கிடக்கிறார். தொழுவது இறையெனக் கீழ்ப்படிந்தார் தோல்வித் தடைகளை உடைக்கிறார்! (விடுதலைப் பயணம்:12).
அழிக்கும் தூதன் அனைத்தும் அழிக்க, அவன் கை படாது தப்பிட, பலிக்கும் இறை சொல் விடாது கேட்டு, பலி ஆடடித்தது இசரயெல். உலுக்கும் கூக்குரல் ஊர்களில் ஒலிக்க, ஓரின விடுதலை செப்பிட, இழுக்கும் நெஞ்சில் இரக்கம் தொட்டு இணைத்தால் நாமும் இசரயெல்! (விடுதலைப் பயணம்:12)
பத்தாம் துன்பம் பழி தீர்த்திடவே பார்வோன் உள்ளம் தளர்ந்தது. கத்தியும் கல்லும் தொடாமலேயே, காணா விடுதலை மலர்ந்தது. இத்தனை அடிமைகள் விடுதலையாக, இவர்களின் ஆயுதம் என்னவாம்? புத்தியுள்ளவர் அறிந்து கொள்வார் பொய் பேசாயிறை சொன்னதாம்! (விடுதலைப் பயணம்: 12).
ஒன்பது வகையில் துன்பினைக் கண்டும், உணர மறுத்த நைல் நாட்டார், இன்னொரு துன்பம் முதல் பேறழிக்க, இசரயெல் முன்னே துடிக்கிறார். தன்னல ஆணவத் தலைமை தோண்டும், தாழ் குழி வீழ்கிற அருள் கூட்டார், நன்னிலை அடைந்து நலமாய்ச் செழிக்க, நம்பினில் இறையே பிடிக்கிறார்! (விடுதலைப் பயணம்: 7:1 – 12:30).
ஒன்பது வகையில் துன்பினைக் கண்டும், உணர மறுத்த நைல் நாட்டார், இன்னொரு துன்பம் முதல் பேறழிக்க, இசரயெல் முன்னே துடிக்கிறார். தன்னல ஆணவத் தலைமை தோண்டும், தாழ் குழி வீழ்கிற அருள் கூட்டார், நன்னிலை அடைந்து நலமாய்ச் செழிக்க, நம்பினில் இறையே பிடிக்கிறார்! (விடுதலைப் பயணம்: 7:1 – 12:30).
உழவர் மீனவர் உழைப்பவர் கேட்டால், ஒன்றும் கொடாதவர் இந்நாட்டார். கிழவர் சொல்லியா அடிமையை விடுவார்? கேளா மனிதர் அந்நாட்டார். அழகிய கோபுரம் எழுப்பும் நாளில், அடிமையை யார் தான் விடுவிப்பார்? தொழுதிடு நண்பா, தெய்வம் செய்வார். தொடரும் துயரில் கெடு வைப்பார்! (விடுதலைப் பயணம் 5 & 6).
இருபது இலட்சம் அடிமைகள் வைத்து, எகிப்திய நாட்டில் தழைக்கிறவர், பொருளியல் இழப்பை நன்றாய்ப் புரிந்து, போக விடுவரோ? சொல்லுங்கள். அருமையில் அருமை விடுதலை என்று, அகவை எண்பதில் அழைக்கிறவர், ஒருவர் இருவர் என்பதும் தெரிந்து உயிர் எடாரோ? சொல்லுங்கள்! (விடுதலைப் பயணம் 4)