நாட்டம் கொண்டோர்…

நாட்டம் கொண்டோர் நாடி வருவார்

!நற்செய்தி: யோவான்: 6:37.37.

பிதாவானவர் எனக்குக் கொடுக்கிற யாவும் என்னிடத்தில் வரும், என்னிடத்தில் வருகிறவனை நான் புறம்பே தள்ளுவதில்லை.

நல்வழி:

கூட்டம் கூட்டி, நாட்டைக் கவரும்,

கொள்கை அல்ல கிறித்தவம்.

ஆட்டம் காட்டி ஆளை மயக்கும்,

அவலமும் அல்ல கிறித்தவம்.

வாட்டம் ஓட்டி, வாழ்வைக் காட்டும்,

வழி முறையே கிறித்தவம்.

நாட்டம் கொண்டோர் நாடி வருவர்;

நன்மை செய்வதே, கிறித்தவம்!

ஆமென்

.-கெர்சோம் செல்லையா.

என்றாலும் நம்பவில்லை!

நம்பவில்லை!
நற்செய்தி: யோவான் 6:36.

நல்வழி:


கண்டோரும் நம்பவில்லை, 

காணாரும் விரும்பவில்லை.

தண்டோரா போட்டுரைத்தும்,

தாய் நாட்டார் ஏற்கவில்லை.

என்றாலும் உரைக்கின்றோம்;

இறையன்பைத் திறக்கின்றோம்.

இன்றளவும் பயனில்லை.

எனினும் நாம் தோற்பதில்லை!


ஆமென்.


-கெர்சோம் செல்லையா.

உணவு, நீர்!

உயிருணவு!
நற்செய்தி: யோவான்: 6:35.  

நல்வாழ்வு:


மும்முறை வருகிற பசி விடாய்ப்பு,

முறையாய் என்னில் வருமுன்பு,

இம்முறை இல்லை என்றுரையாது,

இன்னீர் உணவு தருபவரே,

உம்மிடம் வந்தோர் ஒரு பொழுதாவது,

உணவிற்கலைந்து வருந்துவது,

நம்புதற்கரிது என்னும்படிக்கு,

நன்னீர் உணவு தருவீரே!

ஆமென்.


-கெர்சோம் செல்லையா.

விண்ணுணவு!

நல்வழி:


நன்னில உணவைப் பகிர்ந்து உண்டால்,

 நல் வாழ்வமையும், நாடும் மகிழும்.

பொன் பொருள் கொடாத பெருவாழ்வின்பம்,

புவியில் பெருகும், புன்னகை மலரும்.

இன்னிலத்தார்க்கு இவ்வறிவூட்ட,

இறையே வந்தார்; தன்னுயிர் ஈந்தார்.

அன்னார் உடலே அருவிருந்தாகும்;

அதுபோலளிப்போம், பெருவாழ்வாகும்!


ஆமென்.


-கெர்சோம் செல்லையா.

உணவிற்காக!

உணவிற்காக மட்டும்!


நற்செய்தி: யோவான்: 6:30-31.   

நல்வழி:


உணவு கிடைக்கும் என்பதற்காக, 

ஒருவர் இறையை நாடுவது, 

நினைவு தெரிந்த நாளிலிருந்து,

நிகழும் அவலம், உழைப்போமா?

கனவு கண்டு கையையும் கட்டி,

கடவுள் மேல் பழி போடுவது, 

தினவு அரிக்கும் திட உடலாகும்,

திருந்தி, இறையை அழைப்போமா?  


ஆமென்.


-கெர்சோம்  செல்லையா.

எதைச் செய்தல் இறைவிருப்பு?

எதைச் செய்தல் இறைவிருப்பு?


நற்செய்தி: யோவான் 6:28-29.  

நல்வழி:


எதைச் செய்தல், இறைவன் விருப்பு,

என்று எண்ணும் மனிதராவோம். 

அதைச் செய்யும், வல்லமை பெற்று,

ஆண்டவரருளில் நிறைந்திடுவோம்.

கதைப் புனையும் கருத்தினை விட்டு,

கடவுளை மட்டும் நம்பிடுவோம்.

இதைச் செய்தால் இறைவன் ஏற்பார். 

ஏழைக்கென்றும் திறந்திடுவோம்!


ஆமென்.

பெரு வாழ்வு!

பெருவாழ்வு!
நற்செய்தி: யோவான் 6:27.

நல்வழி: 


உண்ணும் உணவில் உண்மை உண்டோ?

உழைப்பை இறைவன் மதிக்கிறார்.

பண்ணும் செயலில் நேர்மை உண்டோ?

பணியார் உணரவும் பதிக்கிறார்.

எண்ணம் செயலில் தூய்மைதானே,

இறைமகன் இருப்பின் முத்திரை. 

கண்ணால் காணும் காலம் வரையில்,

கனியாய் இருப்போம் இத்தரை!


ஆமென்.


-கெர்சோம் செல்லையா.

உணவிற்கு ஏக்கம்!

உணவைத் தேடி!


நற்செய்தி: யோவான் 6:23-26.   

நல்வழி:


இல்லா உணவு கிடைக்காதா? 

ஏங்கித் திரியும் மானிடரே,

நல்லாயன்தான் தருகின்றார்.

நம்பி நடந்து பணிவீரே.

எல்லோருக்கும் உணவளித்தல்,

இறையின் திருப்பணி அறிவீரே.

பொல்லா ஐயம் இனி வேண்டாம், 

புரிந்தால் மீட்பு பெறுவீரே! 


ஆமென்.


-கெர்சோம் செல்லையா.

மாற்றம் தேவை!

மாற்றம் தேவை, ஊழியரில் மாற்றம் தேவை!


ஆறுதல் அளிக்கிற ஆவியர்தான்,

அறிவிக்கிறார், தெரிவிக்கிறார்.

மாறுதல் விரும்பும் அவரேதான்;

மாற்றுகிறார், மன மாற்றுகிறார்.

கூறுதல் நம் பணி என்பதில்தான்,

குழம்பி, பலபேர் தவறுகிறார்.

ஏறுதல் எங்கே? குரிசில் தான்;

இவ்வறிவுள்ளோர், மாற்றுகிறார்!


-கெர்சோம் செல்லையா.

கடல் மேல் நடந்தவரே!

கடல் மேல் நடந்தவரே!
நற்செய்தி: யோவான் 6:19-22.  19.

அவர்கள் ஏறக்குறைய மூன்று நாலு மைல்தூரம் தண்டுவலித்துப் போனபொழுது, இயேசு கடலின்மேல் நடந்து, படவுக்குச் சமீபமாய் வருகிறதைக் கண்டு பயந்தார்கள்.
20. அவர்களை அவர் நோக்கி: நான்தான், பயப்படாதிருங்கள் என்றார்.
21. அப்பொழுது அவரைப் படவில் ஏற்றிக்கொள்ள மனதாயிருந்தார்கள்; உடனே படவு அவர்கள் போகிற கரையைப் பிடித்தது.
22. மறுநாளில் கடலின் அக்கரையிலே நின்ற ஜனங்கள் அவருடைய சீஷர் ஏறின அந்த ஒரே படவுதவிர அங்கே வேறொரு படவும் இருந்ததில்லையென்றும், இயேசு தம்முடைய சீஷருடனேகூடப் படவில் ஏறாமல் அவருடைய சீஷர்மாத்திரம் போனார்களென்றும் அறிந்தார்கள்.


நல்வழி:


கடலைப் பிளந்தும், வழி அமைத்தீர்;

கடல்மேல் நடந்தும், கரை அடைந்தீர்.

உடலுக்குயிரைக் கொடுப்பவர் நீர்.

உம்மை விழுங்குமோ கடலின் நீர்? 

விடலைப் பருவத்தில் அஞ்சுகிறார்.

விளங்காதவரும் மிஞ்சுகிறார்.

திடமாய் விடாது பிடிப்பவர் யார்?

தெய்வம் பிடித்தவரே அடியார்! 


ஆமென்.


-கெர்சோம் செல்லையா.