
The Truth Will Make You Free

பொறுமையின் சின்னம்!
நற்செய்தி மாலை: மாற்கு 11-1-3.
“இயேசு தம் சீடரோடு ஒலிவமலை அருகிலுள்ள பெத்பகு, பெத்தானியா என்னும் ஊர்களுக்கு வந்து, எருசலேமை நெருங்கியபொழுது இரு சீடர்களை அனுப்பி, ″ உங்களுக்கு எதிரே இருக்கும் ஊருக்குள் போங்கள்; அதில் நுழைந்தவுடன், இதுவரை யாரும் அமராத ஒரு கழுதைக்குட்டி கட்டி வைக்கப்பட்டிருப்பதைக் காண்பீர்கள். அதை அவிழ்த்துக் கொண்டு வாருங்கள். யாராவது உங்களிடம், ‘ ஏன் இப்படிச் செய்கிறீர்கள்? ‘ என்று கேட்டால், ‘ இது ஆண்டவருக்குத் தேவை, இதை அவர் உடனே திருப்பி இங்கு அனுப்பிவிடுவார் ‘ எனச் சொல்லுங்கள் ″ என்றார்.”
நற்செய்தி மலர்:
பொறுமையின் சின்னம் கழுதையாகும்.
போர் வெறி கொள்வதோ குதிரையாகும்.
வெறுமையில் உழலும் எளியோர்க்குதவும்.
வேண்டாம் நம்மில் வெறித்தனம் எதுவும்.
அருமையாய் இதை எடுத்துக் கூறும்,
ஆண்டவர் செயல்கள் மாதிரியாகும்.
பெருமைகள் விட்டு உழைப்பவர் எவரும்,
பேரரசருக்கோ, பாதிரியாகும்!
ஆமென்.

உருவில் அழகு குறையும்போது….
நற்செய்தி மாலை: மாற்கு 10:49-52.
“இயேசு நின்று, ‘ அவரைக் கூப்பிடுங்கள் ‘ என்று கூறினார். அவர்கள் பார்வையற்ற அவரைக் கூப்பிட்டு, ‘ துணிவுடன் எழுந்து வாரும், இயேசு உம்மைக் கூப்பிடுகிறார் ‘ என்றார்கள். அவரும் தம் மேலுடையை எறிந்து விட்டு, குதித்தெழுந்து இயேசுவிடம் வந்தார். இயேசு அவரைப் பார்த்து, ‘ உமக்கு நான் என்ன செய்ய வேண்டும் என விரும்புகிறீர்? ‘ என்று கேட்டார். பார்வையற்றவர் அவரிடம், ‘ ரபூனி, நான் மீண்டும் பார்வை பெறவேண்டும் ‘ என்றார். இயேசு அவரிடம், ‘ நீர் போகலாம்; உமது நம்பிக்கை உம்மை நலமாக்கிற்று ‘ என்றார். உடனே அவர் மீண்டும் பார்வை பெற்று, அவரைப் பின்பற்றி அவருடன் வழி நடந்தார்.”
நற்செய்தி மலர்:
உருவில் அழகு குறையுமானால்,
ஒப்பனை செய்ய ஓடுகிறோம்!
தெருவில் அழுக்கு நிறையுமானால்,
தென்படுவோரைச் சாடுகிறோம்!
எருவில்லாத பயிரைப் பார்த்து,
ஏங்கலும் கொண்டு வாடுகிறோம்.
கருவிலிருந்தே பார்வை இல்லார்,
களிப்புடன் வாழ பாடுவோமா?
ஆமென

பார்வையற்றோர் படுந்துயர்…
நற்செய்தி மாலை: மாற்கு 10:46-48.
“இயேசுவும் அவருடைய சீடரும் எரிகோவுக்கு வந்தனர். அவர்களும் திரளான மக்கள் கூட்டமும் எரிகோவைவிட்டு வெளியே சென்றபோது, திமேயுவின் மகன் பர்த்திமேயு வழியோரம் அமர்ந்திருந்தார். பார்வையற்ற அவர் பிச்சை எடுத்துக்கொண்டிருந்தார். நாசரேத்து இயேசுதாம் போகிறார் என்று அவர் கேள்விப்பட்டு, ‘ இயேசுவே, தாவீதின் மகனே, எனக்கு இரங்கும் ‘ என்று கத்தத் தொடங்கினார். பேசாதிருக்குமாறு பலர் அவரை அதட்டினர்; ஆனால் அவர், ‘ தாவீதின் மகனே, எனக்கு இரங்கும் ‘ என்று இன்னும் உரக்கக் கத்தினார்.”
நற்செய்தி மலர்:
பார்வை அற்றோர் படுந்துயரைப்
பார்வை யுற்றோர் பாராமல்,
நேர்மை யுற்றோர் எனவுரைத்தால்,
நேரில் தெய்வம் காணாரோ?
கூர்மையுற்ற அறிவுத் திறனைக்
கொடுத்துதவும் நல்லிறைவன்,
ஆர்வத்தோடே அவர்க்குதவ,
அன்பில் வந்து பேணாரோ?
ஆமென்.
(இப்படத்தில் இருப்பவர் எனது அக்காளின் இசைப்பயிற்சி ஆசிரியர் திருவட்டாறு ஆறுமுகம் பிள்ளை அவர்களாவார். கர்நாடக இசையில் பல பாடல்கள் எழுதி, கற்றுக்கொடுத்த இவர், சில ஆண்டுகள் எங்கள் திருவட்டாறு கிறித்து இல்லத்திலும் தனித்து வந்து, கற்றுக் கொடுத்தது, எங்கள் பேறாகும்.)

தொண்டின் மறுபெயர் கிறித்து!
நற்செய்தி மாலை: மாற்கு 10:43-45.
“ஆனால் உங்களிடையே அப்படி இருக்கக் கூடாது. உங்களுள் பெரியவராக இருக்க விரும்புகிறவர் உங்கள் தொண்டராய் இருக்கட்டும். உங்களுள் முதன்மையானவராக இருக்க விரும்புகிறவர், அனைவருக்கும் பணியாளராக இருக்கட்டும். ஏனெனில் மானிடமகன் தொண்டு ஏற்பதற்கு அல்ல, மாறாகத் தொண்டு ஆற்றுவதற்கும் பலருடைய மீட்புக்கு ஈடாகத் தம் உயிரைக் கொடுப்பதற்கும் வந்தார்’ என்று கூறினார்.”
நற்செய்தி மலர்:
குண்டுகள் தோண்டி, குழிகள் பறிக்கும்,
கொடியோர் தலைவராம், அக்காலம்.
குண்டுகள் வீசி, கொளுத்திக் கொல்லும்,
கொடுமைத் தலைமையே, இக்காலம்.
தொண்டுகள் புரிந்து, தூய்மையில் நடந்து,
துயரைத் துடைப்பது எக்காலம்?
தொண்டின் மறுபெயர் கிறித்து என்று,
தெளிவாய்க் கண்டால், திருக்கோலம்!
ஆமென்.

காவேரி நீரும், கைவிரிக்கும் அரசும்!
பாதி வாழ்நாள் படிகள் ஏறி,
பண்பாய்ப் பேசிக் கெஞ்சினோம்.
நீதி அரசர் ஆணைகள் மீறி,
நீர் தர மறுத்தார், அஞ்சினோம்.
ஆதி கால மனிதர் நிலைக்கு,
அழைத்த அரசைக் கொஞ்சினோம்.
மீதியாக இருப்பது மானம்;
மீட்பரை நம்பின் மிஞ்சுவோம்!
– வருந்தும்,
கெர்சோம் செல்லையா.

நமது எதிரி!
நற்செய்தி மாலை: மாற்கு 10:41-42. “இதைக் கேட்டுக்கொண்டிருந்த பத்துப் பேரும் யாக்கோபுமீதும் யோவான்மீதும் கோபங்கொள்ளத் தொடங்கினர். இயேசு அவர்களை வரவழைத்து அவர்களிடம், ‘ பிற இனத்தவரிடையே தலைவர்கள் எனக் கருதப்படுகிறவர்கள் மக்களை அடக்கி ஆளுகிறார்கள். அவர்களுள் பெரியவர்கள் அவர்கள் மீது தங்கள் அதிகாரத்தைக் காட்டுகிறார்கள்.” நற்செய்தி மலர்: ஆட்டிப் படைப்பதை ஆட்சி என்றார்; அதையே மனிதர் மாட்சி என்றார். காட்டிக் கொடுப்பதை அறிவு என்றார்; கயமைத் தன்மையோ திறமை என்றார். வீட்டில் தொடங்கிய ஊழல் என்பேன்; வெளியிலும் படர்ந்த சூழல் என்பேன். நாட்டின் எதிரி யார் என்பேன்? நமது மேட்டிமை, பார் என்பேன்! ஆமென்.

தொடருவேன் இறை நம்பிக்கையில்!
நற்செய்தி மாலை:மாற்கு 10:38-40.
“இயேசுவோ அவர்களிடம், ‘ நீங்கள் என்ன கேட்கிறீர்கள் என உங்களுக்குத் தெரியவில்லை. நான் குடிக்கும் துன்பக் கிண்ணத்தில் உங்களால் குடிக்க இயலுமா? நான் பெறும் திருமுழுக்கை உங்களால் பெற இயலுமா? ‘ என்று கேட்டார். அவர்கள் அவரிடம், ‘ இயலும் ‘ என்று சொல்ல, இயேசு அவர்களை நோக்கி, ‘ நான் குடிக்கும் கிண்ணத்தில் நீங்கள் குடிப்பீர்கள். நான் பெறும் திருமுழுக்கையும் நீங்கள் பெறுவீர்கள். ஆனால் என் வலப்புறத்திலும் இடப்புறத்திலும் அமரும்படி அருளுவது எனது செயல் அல்ல; மாறாக அவ்விடங்கள் யாருக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதோ அவர்களுக்கே அருளப்படும் ‘ என்று கூறினார்.”
நற்செய்தி மலர்:
அன்பின் ஊழியம் என்றாலும்,
அடைகிறேன் ஆயிரம் துன்பங்கள்.
பொன்பொருள் வெறுத்து நின்றாலும்,
பொங்குதே துயரக் கிண்ணங்கள்.
இன்று நான் மூழ்கிச் சென்றாலும்,
எழுப்புவார் இயேசு தம் கைகளில்.
துன்பமே வாழ்கையை வென்றாலும்,
தொடருவேன் இறை நம்பிக்கையில்!
ஆமென்.

ஏறிட இறங்குவோம்!
நற்செய்தி மாலை: மாற்கு 10:35-37.
“செபதேயுவின் மக்கள் யாக்கோபும் யோவானும் அவரை அணுகிச் சென்று அவரிடம், ‘ போதகரே, நாங்கள் கேட்பதை நீர் எங்களுக்குச் செய்ய வேண்டும் என விரும்புகிறோம் ‘ என்றார்கள். அவர் அவர்களிடம், ‘ நான் என்ன செய்ய வேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்கள்? ‘ என்று கேட்டார். அவர்கள் அவரை நோக்கி, நீர் அரியணையில் இருக்கும் போது எங்களுள் ஒருவர் உமது வலப்புறமும் இன்னொருவர் உமது இடப்புறமும் அமர்ந்து கொள்ள எங்களுக்கு அருளும் ‘ என்று வேண்டினர்.”
நற்செய்தி மலர்:
வாழ்வுயர்த்தும் வாஞ்சை கொண்டு;
வரம்பு மீறிக் கூறுகிறார்.
தாழ்நிலையின் மக்கள் கண்டு,
தலை மிதித்து ஏறுகிறார்.
பாழ்நிலமாய்ப் பலபேர் உண்டு;
பதவி வெறியில் மாறுகிறார்.
ஏழ்மையான இயேசு கண்டு,
இறங்கினோரே தேறுகிறார்!
ஆமென்,

இருபத்தியேழு ஆண்டுகள் வெறுத்தேன்;
இல்லை இறைவன், என்று மறுத்தேன்.
பொருளியல் கற்று, பொருளைச் சேர்த்தேன்;
போனபின், இழிந்த நிலையும் பார்த்தேன்.
திருமறை மட்டுமே சொத்தாய் ஏற்றேன்;
தெய்வ அருளால் தெளிவைப் பெற்றேன்.
அறுபத்து ஐந்து ஆண்டுகள் முடித்தேன்.
ஆண்டவர் அரசு அமையவே துடித்தேன்!
-கெர்சோம் செல்லையா.
