வரலாற்றை மறப்பவர்கள் மதியற்ற மக்கள்;
வரலாற்றை மறைப்பவர்கள், மாகொடிய மாக்கள்.
அரசாட்சி எனும் பெயரில் அறத்தையும் புதைப்பார்கள்;
அடுத்தத் தலைமுறைக்கு இனி எதை வைப்பார்கள்?
-கெர்சோம் செல்லையா.

The Truth Will Make You Free
வரலாற்றை மறப்பவர்கள் மதியற்ற மக்கள்;
வரலாற்றை மறைப்பவர்கள், மாகொடிய மாக்கள்.
அரசாட்சி எனும் பெயரில் அறத்தையும் புதைப்பார்கள்;
அடுத்தத் தலைமுறைக்கு இனி எதை வைப்பார்கள்?
-கெர்சோம் செல்லையா.

இறையின் அன்பை எடுத்துரைப்போம்!
நற்செய்தி மாலை: மாற்கு 16:15-18.
” இயேசு அவர்களை நோக்கி, ‘ உலகெங்கும் சென்று படைப்பிற்கெல்லாம் நற்செய்தியைப் பறைசாற்றுங்கள். நம்பிக்கைகொண்டு திருமுழுக்குப் பெறுவோர் மீட்புப் பெறுவர்; நம்பிக்கையற்றவரோ தண்டனைத் தீர்ப்புப் பெறுவர். நம்பிக்கை கொண்டோர் பின்வரும் அரும் அடையாளங்களைச் செய்வர்; அவர்கள் என் பெயரால் பேய்களை ஓட்டுவர்; புதிய மொழிகளைப் பேசுவர்;பாம்புகளைத் தம் கையால் பிடிப்பர். கொல்லும் நஞ்சைக் குடித்தாலும் அது அவர்களுக்குத் தீங்கு இழைக்காது. அவர்கள் உடல் நலமற்றோர்மீது கைகளை வைக்க, அவர்கள் குணமடைவர் ‘ என்று கூறினார்.”
நற்செய்தி மலர்:
எட்டுத் திக்கிலும் எல்லா இடத்திலும்,
இறையின் அன்பை எடுத்துரைப்போம்.
கெட்டுப் போனோர் மீட்கப்படுவார்;
கிறித்துவின் அருளைக் கொடுத்துரைப்போம்.
திட்டும் மனிதரும் தீமை விடுவார்;
தெய்வ ஆவியில் அடுத்துரைப்போம்.
விட்டுப் போகாதிருக்கும் தெய்வம்
விரும்பா வினையும் விடுத்துரைப்போம்!
ஆமென்.

எதையெதையோ நம்பிடுவார்!
நற்செய்தி மாலை: மாற்கு 16:12-14.
“அதன்பிறகு அவர்களுள் இருவர் வயல்வெளிக்கு நடந்து சென்றபோது இயேசு அவர்களுக்கு வேற்று உருவில் தோன்றினார். அவர்கள் சென்று அதனை மற்றவர்களுக்கு அறிவித்தார்கள்; அவர்கள் சொன்னதையும் சீடர்கள் நம்பவில்லை. இறுதியாகப் பதினொருவரும் பந்தியில் அமர்ந்திருந்தபொழுது அவர்களுக்கு இயேசு தோன்றினார். உயிருடன் எழுப்பப்பட்ட தம்மைக் கண்டவர்கள் சொன்னதை நம்பாமல் அவர்கள் கடின உள்ளத்தோடு இருந்தமையால் அவர் அவர்களுடைய நம்பிக்கையின்மையைக் கண்டித்தார்.”
நற்செய்தி மலர்:
எதையெதையோ நம்பிடுவார்;
ஏமாந்தும் விழுந்திடுவார்.
கதை கதையாய்ச் சொன்னவற்றை,
கடவுளெனத் தொழுதிடுவார்.
சிதை நெருப்பு அண்டுமுன்னர்,
சீரறிவு பெறுபவர் யார்?
விதைமணியாய் விழுந்தெழுந்த
விண்ணரசின் பிள்ளைகளார்!
ஆமென்.

அன்று மரியாள் கண்டுரைத்தும்….
நற்செய்தி மாலை: மாற்கு 16:9-11.
“வாரத்தின் முதல் நாள் காலையில் இயேசு உயிர்த்தெழுந்தபின்பு அவர் முதலில் மகதலா மரியாவுக்குத் தோன்றினார். அவரிடமிருந்துதான் அவர் ஏழு பேய்களை ஓட்டியிருந்தார். மரியா புறப்பட்டுச் சென்று இயேசுவோடு இருந்தவர்களிடம் இதை அறிவித்தார். அவர்கள் துயருற்று அழுதுகொண்டிருந்தார்கள். அவர் உயிரோடு இருக்கிறார் என்றும் மரியா அவரைக் கண்டார் என்றும் கேட்டபோது அவர்கள் நம்பவில்லை.”
நற்செய்தி மலர்:
அன்று மரியாள் கண்டுரைக்க,
அடியாரோ அதை நம்பவில்லை.
இன்று நாங்கள் நம்பியுரைக்க,
எதிரி தருவதோ அம்பு வில்லை!
சென்று போன நாட்களின் தவற்றைச்
சீர்செய்தாலோ வம்பு இல்லை.
என்று ஒருவர் நம்பவிலையோ,
அங்கு மெய்யும் அன்புமில்லை!
ஆமென்.

உயிர்த்தெழுந்தார், உயிர்த்தெழுவோம்!
நற்செய்தி மாலை: மாற்கு 16:5-8.
“பிறகு அவர்கள் கல்லறைக்குள் சென்றபோது வெண்தொங்கல் ஆடை அணிந்த இளைஞர் ஒருவர் வலப்புறம் அமர்ந்திருக்கக் கண்டு திகிலுற்றார்கள். அவர் அவர்களிடம், ‘ திகிலுற வேண்டாம்; சிலுவையில் அறையப்பட்ட நாசரேத்து இயேசுவைத் தேடுகிறீர்கள்; அவர் உயிருடன் எழுப்பப்பட்டார்; அவர் இங்கே இல்லை; இதோ, அவரை வைத்த இடம். நீங்கள் புறப்பட்டுச் செல்லுங்கள், பேதுருவிடமும் மற்றச் சீடரிடமும், ‘ உங்களுக்கு முன்பாக அவர் கலிலேயாவுக்குப் போய்க் கொண்டிருக்கிறார்; அவர் உங்களுக்குச் சொன்னது போலவே அவரை அங்கே காண்பீர்கள் ‘ எனச் சொல்லுங்கள் ‘ என்றார். அவர்கள் கல்லறையைவிட்டு வெளியே வந்து ஓட்டம் பிடித்தார்கள்; நடுக்கமுற்று மெய் மறந்தவர்களாய் யாரிடமும் எதுவும் கூறவில்லை. ஏனெனில் அவர்கள் அச்சம் கொண்டிருந்தார்கள்.”
நற்செய்தி மலர்:
பிறந்தவர் எவரும் இறந்திடுவார்;
பிறவி முடிந்ததும் பறந்திடுவார்.
இறந்தவர் பின்னர் என்னாவார்?
இதற்கு விடையை யார் சொல்வார்?
திறந்து பார்ப்போம் இறைநூலை;
தெய்வ மைந்தன் உயிர்த்தெழுந்தார்.
உறக்கம் போன்றதே நம் இறப்பும்.
ஒருநாள் நமையும் எழுப்பிடுவார்!
ஆமென்.

உடம்பின் அழகை தொப்பை குறைக்கும்.
ஊரின் அழகை குப்பை மறைக்கும்!
தொப்பையும் குறைப்போம்!
குப்பையும் மறைப்போம்!
-கெர்சோம் செல்லையா.

யார் புரட்டுவார் இந்தக் கல்லை?
நற்செய்தி மாலை: மாற்கு 16:1-4.
” ஓய்வுநாள் முடிந்ததும் மகதலா மரியா, யாக்கோபின் தாய் மரியா, சலோமி ஆகியோர் அவரது உடலில் பூசுவதற்கென்று நறுமணப் பொருள்கள் வாங்கினர். வாரத்தின் முதல் நாள் காலையிலேயே கதிரவன் எழும் வேளையில் அவர்கள் கல்லறைக்குச் சென்றார்கள். ‘ கல்லறை வாயிலிலிருந்து கல்லை நமக்கு யார் புரட்டுவார்? ‘ என்று அவர்கள் ஒருவரோடு ஒருவர் கேட்டுக் கொண்டார்கள். ஆனால் அவர்கள் நிமிர்ந்து உற்று நோக்கியபொழுது கல் புரட்டப்பட்டிருப்பதைக் கண்டார்கள். அது பெரியதொரு கல்.”
நற்செய்தி மலர்:
இந்தக் கல்லை எடுத்துப்போட,
யார்தான் நமக்கு உதவிடுவார்?
எந்த நாட்டு ஏழை என்றாலும்,
இப்படித்தானே கதறுகிறார்.
அந்தக் கவலை இனிமேல் வேண்டாம்;
அடைத்தக் கல்லோ ஆங்கில்லை;
மைந்தனேசு உயிரோடெழுந்தார்;
மனிதா, உனக்கினி தீங்கில்லை!
ஆமென்.

கல்லறை ஓன்று புதிதாய் இருக்கும்….
நற்செய்தி மாலை: மாற்கு 15:46-47.
“யோசேப்பு மெல்லிய துணி ஒன்றை வாங்கி வந்து, இயேசுவின் உடலை இறக்கித் துணியால் சுற்றிப் பாறையில் வெட்டப்பட்டிருந்த கல்லறையில் கொண்டு வைத்தார்; அதன் வாயிலில் ஒரு கல்லை உருட்டி வைத்தார். அவரை எங்கே வைத்தனர் என்பதை மகதலா மரியாவும் யோசேப்பின் தாய் மரியாவும் உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தனர்.”
நற்செய்தி மலர்:
சில்லறை எதுவும் சேர்க்கா இயேசு,
சேரும் இடத்தைப் பாருங்களே.
கல்லறை ஒன்று புதிதாய் இருக்கும்
காட்சியும் காண, வாருங்களே.
நல்லவர் இறப்பும் நன்கு முடியும்;
நன்றியில் நினைவு கூருங்களே.
எல்லோரையும் ஏற்றுக் கொள்ளும்,
இறைவனின் அரசில் சேருங்களே!
ஆமென்.


உவப்பில் வியப்போர்!
நற்செய்தி மாலை: மாற்கு 15:44-45.
“ஏற்கெனவே இயேசு இறந்துவிட்டதைக் குறித்துப் பிலாத்து வியப்படைந்து, நூற்றுவர் தலைவரை அழைத்து, ‘ அவன் இதற்குள் இறந்து விட்டானா? ‘ என்று கேட்டான். நூற்றுவர் தலைவரிடமிருந்து கேட்டு அறிந்ததும் உடலை அவன் யோசேப்பிடம் அளித்தான்.”
நற்செய்தி மலர்:
இறப்பின் செய்தி கேட்டு வருந்தி,
இரக்கம் கொள்வோர் வாழுகிறார்.
உறக்கம்கொண்டு மயங்குதல்போன்று,
உவப்பில் வியப்போர் தாழுகிறார்.
பிறக்கும் விளைவு எப்படியென்று,
புரியாதிவரும் ஆளுகிறார்.
திறக்கும் வாசல் தீமையை வீழ்த்த,
திடீரென்று மாளுகிறார்!
ஆமென்.
