என்னிலத்தோர்க்கும் இறைவன் ஒருவன்;

இவரது பண்புகள் எப்படியோ?

தன்னையேயறியா மானிடன் கேட்பின்,

தருகிற பதில்கள் செப்படியோ?

விண்ணிலிருந்து வந்தவர் மைந்தன்;

விளக்கும் காட்சி காணலையோ?

மண்ணின் மகனே, இயேசுவைப் பார்ப்பாய்;

மனித வடிவிறை தோணலையோ?

(மத்தேயு: 5-7)

முன்னர் வந்த இறை வாங்கினர்கள்,

மொழிந்த முறையைப் பாருங்கள்.

இன்னிலம் மீட்க, இறைமொழிந்தாரென,

எழுதிய வாக்கியம் சேருங்கள்.

தன்னைத் தாழ்த்தும் மைந்தன் வாக்கின்,

தன்மையை பகுத்துப் பாருங்கள்.

என்னிலத்தார்களும் இதுவரை அறியா,

இயேசுவின் ஆளுமை சேருங்கள்!

(மத்தேயு :5-7)

ஏழை எளியோர் இறைவனுக்குரியோர்;

இவர்களின் தாழ்மை கற்றவராய்,

கோழை என்று புறந் துரத்தாமல்,

கொடுத்து உதவி செய்திடுவீர்.

நாளை எண்ணிக் கவலை உறாதீர்;

நடத்தும் இறையருள் பெற்றவராய்,

வேளை தோறும் வேண்டுதலினால்,

விண்ணின் அரசுள் உய்திடுவீர்!

(மத்தேயு: 5-7)

எந்த மலையென யானும் அறியேன்;

இயேசு அமர்ந்து பொழிகிறார்.

தந்தை இறையின் அரசிற்கழைத்து,

தாழ்மை நாடி மொழிகிறார்.

இந்த நாளிலும் இதுபோற் செய்தி, 

இல்லை என்றே சொல்கிறார்.

நைந்த நெஞ்சும் செம்மையாகும்,

நேர்வழி வந்தோர் வெல்கிறார்!

(மத்தேயு: 5-7)

திருடாதேயெனச் சொல்வோர் இன்று,

திருடும் காட்சி காண்கிறோம்.

அருளாளர் போல் அவரும் நின்று,

அள்ளிச் செல்வதும், காண்கிறோம்.

ஒருவரை ஒருவர் குற்றஞ்சாட்டி,

ஊரை உண்பதும், காண்கிறோம்.

இறைவ னொருவரே மெய் வழி காட்டி;

இயேசுவில் கண்டு, வேண்டுவோம்!

வாக்கால் அலகை வென்றவர் எழுந்து,

வானக அரசைத் தொடங்கினார்.

நோக்காதிருந்த கலிலெயர் விழுந்து,

நொடியில் திருந்தி அடங்கினார்.

சேர்க்காதிருக்க விழைந்தோர் மட்டும்,

செரிக்க விடாது மடங்கினார்.

தீர்க்காதிருக்கும் தீவினை கொட்டும்;

திருந்தாவிடில் அவர் முடங்குவார்!

(மத்தேயு 4:11-17)

நாற்பது நாட்கள் உண்ணாதிருந்த,

நன் மகன் பசியில் வாடினார்.

தோற்பது காணும் எண்ணமிருந்த,

துயர் தரு அலகை நாடினான்.

ஏற்பது என்றும் இறைவிருப்பென்ற,

இயேசுவோ வாக்கால் சாடினார்.

பார்ப்பது போதும் என நாம் போனால்,

பகைவன் விழுங்கத் தேடுவான்!

(மத்தேயு 4:1-11).

May be an illustration

கரை ஏறி வந்தவர் காட்டுள் சென்றார்;

காணாக் காலம் நோன்பு என்றார்.

அரை குறையல்ல, முழுதாயிருந்தார்.

அதனால் வறுமை நன்கு தெரிந்தார்.

விரை வுணவுண்ண விரும்பித் துடிப்பார்,

வேண்டா நோன்பு எப்படி எடுப்பார்?

திரை மறை சென்று உண்டு வருவார்;

தெய்வ வழிக்கு நிந்தை தருவார்!

(லூக்கா 4:1-2)

May be an image of 1 person and text that says 'WHY DID JESUS FAST ?'

தன்னைக் கொடுத்து எழுந்தவர் தலையில்

தாழ்ந்து இறங்கிய புறாவின் வடிவில்,

முன்னம் படைத்த மும்மையின் ஆவியர்,

முறையாய் ஊற்றக் கால் ஊன்றினார்.

பின்னர் கேட்ட விண்ணொலி விளைவில்,

பேசும் யோவான் வாக்கியப்படியில்,

நன்னிலம் மீட்க அடிக்கப் பட்டிடும்,

நல்லாடென்று ஏசு தோன்றினார்!

(மத்தேயு 3:16-17 & யோவான் 1:15-34).

May be an illustration

திரள் கூட்டமாய் மனிதர் அன்று,

தேவை முழுக்கு என்றது போல்,

அருள் ஊட்டிடும் இயேசுவும் நின்று,

அப்படி முழுக வேண்டுமோ?

மருள் போக்கிடும் பணிக்கென வந்து,

மனுவில் ஒன்றி நின்றது போல்,

இருள் நீக்குவார் எவரும் இல்லை;

இதை அறிய வேண்டுமே!

(மத்தேயு 3:13-15)

May be an image of 2 people and body of water