நலம் தரும் இயேசு!

The Truth Will Make You Free
நலம் தரும் இயேசு!



தீயோன் ஓடுதல் பார்!

நற்செய்தி மாலை: மாற்கு: 1:23-24.
“அப்போது அவர்களுடைய தொழுகைக்கூடத்தில் தீய ஆவி பிடித்திருந்த ஒருவர் இருந்தார். அவரைப் பிடித்திருந்த ஆவி, ‘ நாசரேத்து இயேசுவே, உமக்கு இங்கு என்ன வேலை? எங்களை ஒழித்துவிடவா வந்தீர்? நீர் யார் என எனக்குத் தெரியும். நீர் கடவுளுக்கு அர்ப்பணமானவர் ‘ என்று கத்தியது”.
நற்செய்தி மலர்:
தீயோன் அறிவான், திருடனும் அறிவான்,
தெய்வ மைந்தன் இயேசென்று.
நீ யார் என்று நம்மவர் கேட்கும்,
நிலையை இங்கு பாரின்று!
பேயோன் பிடியில் இருப்பவர் மீள,
பிழை உணர்வாய், இது நன்று.
சேயாய் நாமும் வாழ்ந்தால்தானே,
சிறக்கும் தெய்வப் பணி வென்று!
ஆமென்.

நற்செய்தி மாலை: மாற்கு 1:21-22.

எதை விட்டோம், இயேசுவிற்காக?
நற்செய்தி மாலை: மாற்கு: 1:19-20.
“பின்னர், சற்று அப்பால் சென்றபோது செபதேயுவின் மகன் யாக்கோபையும் அவர் சகோதரரான யோவானையும் இயேசு கண்டார். அவர்கள் படகில் வலைகளைப் பழுது பார்த்துக் கொண்டிருந்தார்கள். உடனே இயேசு அவர்களையும் அழைத்தார். அவர்களும் தங்கள் தந்தை செபதேயுவைக் கூலியாள்களோடு படகில் விட்டுவிட்டு அவர் பின் சென்றார்கள்.”
நற்செய்தி மலர்:
தந்தையை விட்டார், தம் பணி விட்டார்;
தகப்பன் வீட்டுச் செல்வமும் விட்டார்.
மைந்தனாய் இறைவன் வந்து அழைத்தார்;
மண்ணின் பெருமை யாவும் விட்டார்.
அந்த நாள் மீனவர் அப்படியிருந்தார்.
அதனால் அவரும் அடியார் ஆனார்.
இந்த நாள் இதனை எடுத்துரைப்பார்,
எதனை விட்டார்? இறைவன் அறிவார்!
ஆமென்.

முதல் சீடர்களை அழைத்தல்:
“அவர் கலிலேயக் கடலோரமாய்ச் சென்றபோது சீமோனையும் அவர் சகோதரரான அந்திரேயாவையும் கண்டார். மீனவர்களான அவர்கள் கடலில் வலை வீசிக்கொண்டிருந்தார்கள். இயேசு அவர்களைப் பார்த்து, ‘ என் பின்னே வாருங்கள்; நான் உங்களை மனிதரைப் பிடிப்பவர் ஆக்குவேன் ‘ என்றார். உடனே அவர்கள் வலைகளை விட்டுவிட்டு அவரைப் பின்பற்றினார்கள்.”
நற்செய்தி மலர்:
தூய்மை அற்றோர் எனக் கருதித்
தூரம் விலகிய மீனவரை
வாய்மை வேந்தன் விளிக்கின்றார்;
வாழ்வுப் பணியை அளிக்கின்றார்.
தாய்மை அன்பினும் மேலான,
தன்மை நிறைந்த இறைப்பணியால்,
மகிழ்ந்து பிடிக்க அழைக்கின்றார்!
ஆமென்.

மாலை:மாற்கு 1:14-15.
இயேசு கலிலேயாவில் பணி தொடங்குதல்:
“யோவான் கைதுசெய்யப்பட்டபின், கடவுளின் நற்செய்தியைப் பறைசாற்றிக் கொண்டே இயேசு கலிலேயாவிற்கு வந்தார். ‘ காலம் நிறைவேறிவிட்டது. இறையாட்சி நெருங்கி வந்து விட்டது; மனம் மாறி நற்செய்தியை நம்புங்கள் ‘ என்று அவர் கூறினார்.”
மலர்:
திருந்தத் தேவை இல்லை என்று,
துணிவாய்ச் சொல்வோர் யாரிங்கே?
தூய்மை தவிர, மற்றது செய்யா
தெய்வம் மட்டும் தானிங்கே!
வருந்தத் தேவை இல்லை என்று,
வழி திரும்பார் நிலை எங்கே?
வாழ்வின் முடிவு கண்ணீராகி
வதங்கும் காட்சி பாரிங்கே!
ஆமென்.

நற்செய்தி மாலை: மாற்கு 1:12-13.
இயேசு சோதிக்கப்படுதல்:
“உடனே தூய ஆவியால் அவர் பாலைநிலத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டார். பாலை நிலத்தில் அவர் நாற்பது நாள் இருந்தார்; அப்போது சாத்தானால் சோதிக்கப்பட்டார்; அங்குக் காட்டு விலங்குகளிடையே இருந்தார். வானதூதர் அவருக்குப் பணிவிடை செய்தனர்.”
நற்செய்தி மலர்:
எவ்வழி நடத்தல் ஏற்றதென்று
எண்ணும் பண்பு நம்மிலுண்டு.
செவ்வழி நடக்க முடிவெடுப்பின்,
சோதனைப் பாடும் வருவதுண்டு.
இவ்வழி வந்து நமை மீட்கும்
இறைமகன் துணையும் இன்றுண்டு.
கவ்விடும் சூது ஒழிந்துவிடும்;
கடவுளின் வாக்கை நம்பிவிடு!
ஆமென்.