நோக்கறிவோம்!

உணர்ச்சிப் பேச்சு!

இறை வாக்கு: யோவான் 13:36-38.

  1. சீமோன்பேதுரு அவரை நோக்கி: ஆண்டவரே, நீர் எங்கே போகிறீர் என்றான். இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக: நான் போகிற இடத்துக்கு இப்பொழுது நீ என் பின்னே வரக்கூடாது, பிற்பாடு என் பின்னே வருவாய் என்றார்.
  2. பேதுரு அவரை நோக்கி: ஆண்டவரே, நான் இப்பொழுது உமக்குப் பின்னே ஏன் வரக்கூடாது? உமக்காக என் ஜீவனையும் கொடுப்பேன் என்றான்.
  3. இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக: எனக்காக உன் ஜீவனைக் கொடுப்பாயோ? சேவல் கூவுகிறதற்கு முன்னே நீ என்னை மூன்றுதரம் மறுதலிப்பாயென்று, மெய்யாகவே மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன் என்றார்.

இறை வாழ்வு;

உணர்ச்சி பொங்கப் பேசும் வாக்கு
உயிர் தரும் ஆவியர் வாக்காமோ?
கணத்தில் தன்னை மறந்த நாக்கு,
கடவுள் மகிழ்கிற நாக்காமோ?
மனத்தை அடக்கி வாழாப் போக்கு,
மன்னர் விரும்பும் போக்காமோ?
நினைத்து வாழ்வோர் நிலையும் நோக்கு,
நிலைவாழ்வு நல் நோக்காமே!

ஆமென்.

-கெர்சோம் செல்லையா.

எது ஆன்மீகம்?

எது ஆன்மிகம்?

ஏழைக்கிரங்குதல் ஆன்மீகம்.
எவரையும் ஏற்கும் ஆன்மீகம்.
வாளைத் துறப்பதும் ஆன்மீகம்.
வாழ வைப்பதும் ஆன்மீகம்.
தாழ்மையின் உருவம் ஆன்மீகம்;
தன்னலம் இழப்பதும் ஆன்மீகம்.
கோழைத்தனமா ஆன்மீகம்?
கொடாது தீமை, ஆன்மீகம்!

-கெர்சோம் செல்லையா.

அன்பு ஒன்றே வழியாகும்!

அன்பு ஒன்றே வழி!

முன்னொரு காலத்து மூடம் இல்லை;
முடிவு கட்ட நீ கேளு.
இனொரு பிறவி என்பதும் இல்லை;
இதையுமறிந்து, வாழு.
பன்வகை வழிகள் சேர்ப்பதும் இல்லை;
பரன் வழி அன்பை நாடு.
சொன்னவர் இயேசு, பிழையே இல்லை;
சொந்தமாக்கு, இறை வீடு!

-கெர்சோம் செல்லையா.

இறை வாக்கும், இறையன்பும்!

இறை வாக்கும் இறையன்பும்!

இறை வாக்கு: யோவான் 13:34-35.

  1. நீங்கள் ஒருவரிலொருவர் அன்பாயிருங்கள்; நான் உங்களில் அன்பாயிருந்ததுபோல நீங்களும் ஒருவரிலொருவர் அன்பாயிருங்கள் என்கிற புதிதான கட்டளையை உங்களுக்குக் கொடுக்கிறேன்.
  2. நீங்கள் ஒருவரிலொருவர் அன்புள்ளவர்களாயிருந்தால், அதினால் நீங்கள் என்னுடைய சீஷர்களென்று எல்லாரும் அறிந்துகொள்வார்கள் என்றார்.

இறையன்பு:

இறையடியானெனச் சொல்கிற என்னில்

இறை அன்புண்டோ, அளக்கிறேன்.

குறை நிறைவாக அளக்கும் முன்னில்,

கொடுமை செய்து பிளக்கிறேன்.

உறையிலொளிக்கும் கத்தியை உருக்கும்;

உள்ளன்பில்லை, வெறுக்கிறேன்.

அறைய வேண்டாம், அன்பைப் பெருக்கும்;

அழிக்கும் வெறுப்பை நொறுக்கிறேன்!

ஆமென்.

-கெர்சோம் செல்லையா.

இப்போது வரயியலாது!

இப்போது வரயியலாது!

இறைவாக்கு: யோவான் 13: 33.

  1. பிள்ளைகளே, இன்னும் கொஞ்சக்காலம் நான் உங்களுடனேகூட இருப்பேன்; நீங்கள் என்னைத் தேடுவீர்கள்; ஆனாலும் நான் போகிற இடத்துக்கு நீங்கள் வரக்கூடாதென்று நான் யூதரோடே சொன்னதுபோல இப்பொழுது உங்களோடும் சொல்லுகிறேன்.

இறையறிவு:

இப்போது வர இயலாவிடினும்,
இன்னொரு நாள் வருவனே.
அப்போது உம்மிடம் வந்ததும்
ஆவியை பாவி தருவனே.
எப்போது ஆயினும் ஆயத்தம்
என்று கூறுதல் அருமையே.
தற்போது உம் திரு வாக்கருளும்;
தரணிக்கதுதான் பெருமையே!

ஆமென்.

-கெர்சோம் செல்லையா.

ஆன்மீகம் என்பது என்ன?

இறை மாட்சியுறுதலே ஆன்மிகம்!

இறைவாக்கு: யோவான் 13: 31-32.

  1. அவன் புறப்பட்டுப்போனபின்பு இயேசு: இப்பொழுது மனுஷகுமாரன் மகிமைப்படுகிறார், தேவனும் அவரில் மகிமைப்படுகிறார்.
  2. தேவன் அவரில் மகிமைப்பட்டிருந்தால், தேவன் அவரைத் தம்மில் மகிமைப்படுத்துவார், சீக்கிரமாய் அவரை மகிமைப்படுத்துவார்.

இறையறிவு:

ஆன்மயியல் அறிவறிய,
அலைகின்ற மானிடனே,
மேன்மையுற கிறித்துரைத்த,
மெய்வழி காட்டுகிறேன்.
ஏன் பிறந்தேன் என்பதற்கு,
ஏற்ற பதில் கேட்போனே,
நான் அவர்போல் இறைமாட்சி,
நல்கவே கூட்டுகிறேன்!

ஆமென்.

-கெர்சோம் செல்லையா.

இராக்காலம்!

இராக்காலம்!

இறைவாக்கு: யோவான் 3:30.

  1. அவன் அந்தத் துணிக்கையை வாங்கினவுடனே புறப்பட்டுப்போனான்; அப்பொழுது இராக்காலமாயிருந்தது.

இறையறிவு:

இரவின் கருமை இழுக்கும் வேளை,
இயேசுவை விட்டுப் போனானே.
உறவை முறித்துச் சென்றதனாலே,
உயிர் மீட்பிழந்தவன் ஆனானே.
தரகுக்கென்று தலை தாழ்ந்தாலே,
தவறு இறுக்க, மாள்வாரே.
பரனை நோக்கி, பணவெறி நீக்கி,
பரிந்து உதவின், ஆள்வாரே!

ஆமென்.

-கெர்சோம் செல்லையா.

ஏழைக்கிரங்கு !

மூட நெஞ்சே கேள்!
இறைவாக்கு: யோவான் 13:29.

  1. யூதாஸ் பணப்பையை வைத்துக்கொண்டிருந்தபடியினால், அவன் போய், பண்டிகைக்குத் தேவையானவைகளைக் கொள்ளும்படிக்காவது, தரித்திரருக்கு ஏதாகிலும் கொடுக்கும்படிக்காவது, இயேசு அவனுடனே சொல்லியிருப்பார் என்று சிலர் நினைத்தார்கள்.

இறையறிவு:

இறைப்பணி என்பது பேசுதல் தானா?

இல்லா ஏழை எளியருக்கிரங்கு.

முறைப்படி நானும் செய்கின்றேனா?

மூடநெஞ்சே, பணிந்து கறங்கு.

அறையக் கொடுத்தவன் கையில் அன்று

ஆண்டவர் காசு இருந்ததை எண்ணு.

குறையறத் திருப்பணி செய்வேன் என்று,

கொடுத்து ஏழைக்குதவி பண்ணு!

ஆமென்.

-கெர்சோம் செல்லையா.

எண்ணம் அறிந்தவரே!

எண்ணம் அறிந்தவரே !

இறைவாக்கு: யோவான் 13:26-28.

26. இயேசு பிரதியுத்தரமாக: நான் இந்தத் துணிக்கையைத் தோய்த்து எவனுக்குக் கொடுப்பேனோ, அவன்தான் என்று சொல்லி, துணிக்கையைத் தோய்த்து, சீமோன் குமாரனாகிய யூதாஸ்காரியோத்துக்குக் கொடுத்தார்.

27. அந்தத் துணிக்கையை அவன் வாங்கினபின்பு, சாத்தான் அவனுக்குள் புகுந்தான். அப்பொழுது இயேசு அவனை நோக்கி: நீ செய்கிறதைச் சீக்கிரமாய்ச் செய் என்றார்.

28. அவர் இப்படி அவனுடனே சொன்னதின் கருத்தைப் பந்தியிருந்தவர்களில் ஒருவனும் அறியவில்லை.

இறை வாழ்வு:

மங்கலமாயினும், அமங்கலமாயினும்,

மனதின் எண்ணம் நீர் அறிவீர்.

எங்கள் செயலின் விளைச்சல் பயனும்,

எந்நாளென்றும் நீர் தெரிவீர்.

இங்ஙனம் யாவும் அறிகிற இறையே,

ஏன் நீர் இதனைத் தடுக்கவில்லை?

அங்ஙனமாயினும், நன்மையாய் மாற்றும்,

அருளாயிருப்பதால், கெடுக்கவில்லை!

ஆமென்.

-கெர்சோம் செல்லையா.

கிறித்து மார்பில்!

கிறித்து மார்பில்!

இறைவாக்கு: யோவான் 13: 23-25.

23. அந்தச் சமயத்தில் அவருடைய சீஷரில் இயேசுவுக்கு அன்பானவனாயிருந்த ஒருவன் இயேசுவின் மார்பிலே சாய்ந்துகொண்டிருந்தான்.

24. யாரைக்குறித்துச் சொல்லுகிறாறென்று விசாரிக்கும்படி சீமோன்பேதுரு அவனுக்குச் சைகைகாட்டினான்.

25. அப்பொழுது அவன் இயேசுவின் மார்பிலே சாய்ந்துகொண்டு: ஆண்டவரே, அவன் யார் என்றான்.

இறைவாழ்வு:

பாய்ந்து ஓடும் காட்டாறைப் போல்
பக்குவம் இன்றி ஓடுகிறேன்.
சாய்ந்து மகிழ இடமில்லாமல்,
சகதி சேறும் தேடுகிறேன்.
மேய்ந்து இளைப்பாறும் வீடாய்,
மெய்யடியாரை அணைப்பவரே,
காய்ந்து நானும் கடக்கும் முன்பே,
கழுவி நெஞ்சில் இணைப்பீரே!

ஆமென்.

-கெர்சோம் செல்லையா.