முகநூற் படங்களைப் பார்க்கும்போது…..
Category: நற்செய்தி
உங்கள் வாழ்வில், ஒளி பரவ வாழ்த்துகள்!
உங்கள் வாழ்வில், ஒளி பரவ வாழ்த்துகள்!
——————————————————-
இறையாய் இருப்போன் ஒளிர்கின்றான்;
இருளை எங்கும் ஒழிக்கின்றான்.
நிறைவாய் வெளிச்சம் பகிர்வதற்கு,
நமையும் விளக்காய் அழைக்கின்றான்.
பறையாய் வெடிக்கும் கரிமருந்தால்,
பறவையும் அஞ்சுதல் காண்கின்றான்.
சிறையாய்ப் பிடிக்கும் தீச்செயலைச்
சீக்கிரம் கைவிடக் கேட்கின்றான்!
-கெர்சோம் செல்லையா.

இறந்தவரை எழுப்பிவிடும்….
“அவர் தொடர்ந்து பேசிக்கொண்டிருந்தபோது, தொழுகைக் கூடத் தலைவருடைய வீட்டிலிருந்து ஆள்கள் வந்து, அவரிடம், ‘ உம்முடைய மகள் இறந்துவிட்டாள். போதகரை ஏன் இன்னும் தொந்தரவு செய்கிறீர்? ‘ என்றார்கள். அவர்கள் சொன்னது இயேசுவின் காதில் விழுந்ததும், அவர் தொழுகைக்கூடத் தலைவரிடம், ‘ அஞ்சாதீர், நம்பிக்கையை மட்டும் விடாதீர் ‘ என்று கூறினார். அவர் பேதுரு, யாக்கோபு, யாக்கோபின் சகோதரரான யோவான் ஆகியோரைத் தவிர வேறொருவரையும் தம்முடன் வரவிடவில்லை. அவர்கள் தொழுகைக் கூடத் தலைவரின் வீட்டிற்குச் சென்றார்கள். அங்கே அமளியையும் மக்கள் அழுது ஓலமிட்டுப் புலம்புவதையும் இயேசு கண்டார். அவர் உள்ளே சென்று, ‘ ஏன் இந்த அமளி? ஏன் இந்த அழுகை? சிறுமி இறக்கவில்லை, உறங்குகிறாள் ‘ என்றார்.”
நற்செய்தி மலர்:
இறந்தவரை எழுப்பிவிடும் வலுமிக்க,
இறைமகனார் நெஞ்சுள்ளே இருப்பதனால்,
மறந்தவர்கள் கொண்டுவரும் துன்புகளும்,
மண்ணாகி மறைந்துவிடும்; நம்பி வாரிர்.
சிறந்தவர்கள் எனும் பதவி உயர்வுபெற,
சீரான பற்றுறுதி வேண்டுவதால்,
திறனின்றி அழுவதனை நிறுத்திவிட்டு,
தெய்வத்தின் காலடியில் அமர வாரீர்!
ஆமென்.

பற்றுறுதி சற்றுமற்ற …
பற்றுறுதி சற்றுமற்ற …
உம் உடை தொடுவேன்!
உம் உடை தொடுவேன்…
உம் கையாலே தொட்டால் போதும்!
உம்கையாலே தொட்டால் போதும்!
நற்செய்தி மாலை: மாற்கு 5:21-24
“இயேசு படகேறி, கடலைக் கடந்து மீண்டும் மறு கரையை அடைந்ததும் பெருந்திரளான மக்கள் அவரிடம் வந்து கூடினர். அவர் கடற்கரையில் இருந்தார். தொழுகைக் கூடத் தலைவர்களுள் ஒருவரான யாயிர் என்பவர் வந்து, அவரைக் கண்டு அவரது காலில் விழுந்து, “என் மகள் சாகுந்தறுவாயில் இருக்கிறாள். நீர் வந்து அவள்மீது உம் கைகளை வையும். அப்போது அவள் நலம் பெற்றுப் பிழைத்துக்கொள்வாள்” என்று அவரை வருந்தி வேண்டினார். இயேசுவும் அவருடன் சென்றார். பெருந்திரளான மக்கள் அவரை நெருக்கிக் கொண்டே பின்தொடர்ந்தனர்.”
நற்செய்தி மலர்:
எம் கையாலே எது செய்தாலும்,
எமக்கு வருதல் நோவு ஆகும்.
உம் கையாலே தொட்டால் போதும்,
ஒவ்வொருநோயும், ஓடிப் போகும்.
இம்மாப் பெரிய நோய் என்றாலும்
இலாது போகும், மருந்தைக் கூறும்.
நம்பாமலே நடப்போர்களுக்கும்,
நற்செய்தியாம் விருந்தைத் தாரும்!
ஆமென்.

கடைநிலையோரும் பயன்பெறவே…..
கடைநிலையோரும் பயன்பெறவே….
நற்செய்தி மாலை: மாற்கு 5:18-20.
“அவர் படகில் ஏறியதும் பேய் பிடித்திருந்தவர் தாமும் அவரோடு கூட இருக்க வேண்டும் என்று அவரை வேண்டிக்கொண்டார். ஆனால் அவர் அதற்கு இசையாமல், அவரைப் பார்த்து, “உமது வீட்டிற்குப் போய் ஆண்டவர் உம்மீது இரக்கங் கொண்டு உமக்குச் செய்ததையெல்லாம் உம் உறவினருக்கு அறிவியும்” என்றார். அவர் சென்று, இயேசு தமக்குச் செய்ததையெல்லாம் தெக்கப்பொலி நாட்டில் அறிவித்து வந்தார். அனைவரும் வியப்புற்றனர்.”
நற்செய்தி மலர்:
கற்ற அறிவும் பெற்ற மீட்பும்
கடைநிலையோர்க்கும் பயன்தரவே,
உற்று நோக்கும், ஊரும் உறவும்,
உயர்ந்து ஏற, இரங்கிடுமே.
குற்ற மில்லா வாழ்வு வாழும்
கிறித்து அன்பில் அவர் வரவே,
பற்று கொண்டு தொண்டு ஆற்றும்;
பரிசு மீட்பு இறங்கிடுமே!
ஆமென்.
வேண்டும் செல்வம் அன்பன்றோ!
வேண்டும் செல்வம் அன்பன்றோ!
நற்செய்தி மாலை 5:14-17.
“பன்றிகளை மேய்த்துக்கொண்டிருந்தவர்களோ ஓடிப்போய் நகரிலும் நாட்டுப்புறத்திலும் இதை அறிவித்தார்கள். நடந்தது என்னவென்று பார்க்க மக்கள் வந்தனர் அவர்கள் இயேசுவிடம் வந்தபோது, பேய் பிடித்திருந்தவர், அதாவது இலேகியோன் பிடித்திருந்த அவர், ஆடையணிந்து அறிவுத் தெளிவுடன் அமர்ந்திருப்பதைக் கண்டு அச்சமுற்றார்கள். நடந்ததைப் பார்த்தவர்கள் பேய் பிடித்தவருக்கும் பன்றிகளுக்கும் நேரிட்டதை அவர்களுக்கு எடுத்துரைத்தார்கள். அப்பொழுது அவர்கள் தங்கள் பகுதியை விட்டுப் போய்விடுமாறு இயேசுவை வேண்டிக்கொண்டார்கள்.”
நற்செய்தி மலர்:
மாடு பன்றி ஆட்டைவிட,
மனிதனின் மீட்பு பெரிதன்றோ?
பாடுபடுபவன் பாவியென்று,
பகைத்துத் தள்ளுதல் சரியின்றோ?
கோடுபோடும் இறை முன்னே,
குறைந்திருப்பவர் நாமன்றோ?
வீடுபேறு அடைவதற்கு,
வேண்டும் செல்வம் அன்பன்றோ!
ஆமென்.

ஆயிரம் பன்றி மாட்டைவிட…
ஆயிரம் பன்றி மாட்டைவிட…
நற்செய்தி மாலை: மாற்கு 5:11-13.
“அங்கே மலைப்பகுதியில் பன்றிகள் பெருங் கூட்டமாய் மேய்ந்து கொண்டிருந்தன. “நாங்கள் அப்பன்றிகளுக்குள் புகும்படி எங்களை அங்கே அனுப்பிவிடும்” என்று தீய ஆவிகள் அவரை வேண்டின. அவரும் அவற்றுக்கு அனுமதி கொடுத்தார். பின் தீய ஆவிகள் வெளியேறிப் பன்றிகளுக்குள் புகுந்தன. ஏறக்குறைய இரண்டாயிரம் பன்றிகள் அடங்கிய அந்தக் கூட்டம் செங்குத்துப் பாறையிலிருந்து கடலில் பாய்ந்து வீழ்ந்து மூழ்கியது.”
நற்செய்தி மலர்:
நாயினைக் கொஞ்சும் நல்லவரே,
நடப்புச் செய்தியும் கேட்பவரே,
பாயிரம் என்று உதறாமல்,
படைத்தவர் விருப்பெது அறிவீரே!
ஆயிரம் பன்றி மாட்டை விட
அழியும் ஒருவன் உயர்வாமே.
வாயினை மூடி உறங்காமல்,
வாழ, மனிதனைக் காப்போமே!
ஆமென்.

எண்ணப் பேய் விரட்டல்!
எண்ணப் பேய் விரட்டல்!
நற்செய்தி மாலை: மாற்கு 5:9-10.
“அவர் அம்மனிதரிடம், “உம் பெயர் என்ன?” என்று கேட்க அவர், “என் பெயர் “இலேகியோன் “, ஏனெனில் நாங்கள் பலர்” என்று சொல்லி, அந்தப் பகுதியிலிருந்து தங்களை அனுப்பிவிட வேண்டாமென்று அவரை வருந்தி வேண்டினார்.”
நற்செய்தி மலர்:
ஒன்றல்ல, நம்மைப் பிடித்த
எண்ணப் பேய்கள், ஒன்றல்ல.
என்றல்ல, என்றே உரைத்து
இழந்தோர் புகழ்தல், என்றல்ல.
நன்றல்ல, பேய்கள் பின்னால்
நாமும் செல்லல், நன்றல்ல.
இன்றல்ல, இப்படி நாளும்
எதிர்ப்போம் தீமை, இன்றல்ல!
ஆமென்.
