நாற்பது நாட்கள் உண்ணாதிருந்த, நன் மகன் பசியில் வாடினார். தோற்பது காணும் எண்ணமிருந்த, துயர் தரு அலகை நாடினான். ஏற்பது என்றும் இறைவிருப்பென்ற, இயேசுவோ வாக்கால் சாடினார். பார்ப்பது போதும் என நாம் போனால், பகைவன் விழுங்கத் தேடுவான்! (மத்தேயு 4:1-11).
கரை ஏறி வந்தவர் காட்டுள் சென்றார்; காணாக் காலம் நோன்பு என்றார். அரை குறையல்ல, முழுதாயிருந்தார். அதனால் வறுமை நன்கு தெரிந்தார். விரை வுணவுண்ண விரும்பித் துடிப்பார், வேண்டா நோன்பு எப்படி எடுப்பார்? திரை மறை சென்று உண்டு வருவார்; தெய்வ வழிக்கு நிந்தை தருவார்! (லூக்கா 4:1-2)
தன்னைக் கொடுத்து எழுந்தவர் தலையில் தாழ்ந்து இறங்கிய புறாவின் வடிவில், முன்னம் படைத்த மும்மையின் ஆவியர், முறையாய் ஊற்றக் கால் ஊன்றினார். பின்னர் கேட்ட விண்ணொலி விளைவில், பேசும் யோவான் வாக்கியப்படியில், நன்னிலம் மீட்க அடிக்கப் பட்டிடும், நல்லாடென்று ஏசு தோன்றினார்! (மத்தேயு 3:16-17 & யோவான் 1:15-34).
திரள் கூட்டமாய் மனிதர் அன்று, தேவை முழுக்கு என்றது போல், அருள் ஊட்டிடும் இயேசுவும் நின்று, அப்படி முழுக வேண்டுமோ? மருள் போக்கிடும் பணிக்கென வந்து, மனுவில் ஒன்றி நின்றது போல், இருள் நீக்குவார் எவரும் இல்லை; இதை அறிய வேண்டுமே! (மத்தேயு 3:13-15)
பாறைகள் உடையட்டும்! அடி பட்டிறக்கும் மனிதரைப் பார்த்து, அவர் செயல் முடிவு என்கிறோம். பிடி பட்டிராத நம் வினை சேர்த்து, பெருமை பேசித் தின்கிறோம். தடி கொண்டிறைவன் தடுத்தாலன்றி, தம் பிழை திருத்த மறுக்கிறோம். வெடி வைத்துடைத்துக் கொடுப்பாரின்றி, வெளி வரா நீராய் இருக்கிறோம்! -கெர்சோம் செல்லையா. www.thetruthintamil.com
விபத்து! வான் பறக்க முயன்ற ஊர்தி, வந்து வீழ்ந்தது அதிர்ச்சி. தான் சிறக்க வாழ எண்ணி, தரை முட்டிய முயற்சி. ஏன் இழந்தோம் என்று கேட்க, ஏற்ற பதில் இலையே. நான் இருக்க இவர் பறக்க, நடைபயணம் வலியே ! www.thetruthintamil.com -கெர்சோம் செல்லையா.
திரண்டு வந்த பெருங் கூட்டத்தார், திருந்தி வாழ விரும்புகிறார். முரண்டு நிற்பது வேண்டாமென்று, முழுகி யெழுந்து, திருந்துகிறார். இரண்டு உள்ளோர் ஒன்று கொடுத்தார்; ஏழைக்கிரங்க முன் வந்தார். புரண்டு தூங்கும் புரியாதினத்தார், போக்குரைத்து, பின் நொந்தார்! (லூக்கா 3:1-18)
மொத்தப் பொருளும் தமக்கெனக் கண்டு, மோதித் திரிகிற உலகிடம், பத்தில் ஒன்றை இறைமுன் கொண்டு, படைக்கக் கேட்டது முதலுரை. அத்துடன் நிறுத்தும் திருந்தார் கண்டு, அவரை அழைக்க நல்லிடம், சத்துணவளிக்கும் காடெனக் கொண்டு, சரிபாதி கேட்குது நடுவுரை! (லூக்கா 3:1-18)
தேனூறு வாக்குகள் தெய்வம் தந்தும், திருந்தாதிருந்தார் அந்நாட்டார். வானூறு மேகம் பொழிந்து ஈந்தும், வறண்டிருந்தார் இறை வீட்டார். நானூறு ஆண்டுகள் மௌனம் காத்தும், நல்லிறையோ கை விட மாட்டார். பானூறு பாடி, அவர் புகழ் சாத்தும், பாலைக் காட்டில் உரைத்திட்டார்! (லூக்கா 3:2)
பதினெட்டாண்டு காலச் செய்தி, படிக்கக் கிடைக்காததால், விதிகள் கற்க வேறு நாடுகள் விரைந்தாரென்றும் எண்ணுவர். மதிநிறை இயேசு எங்கிருந்தாலும், மாபெரும் அறிவு வல்லுநர். இது கண்டறிய இறைநூல் கற்போம்; ஏற்பாருள்ளிலும் பண்ணுவர்! (லூக்கா 2).