எந்த வழியில் நாம் இனி நடந்தால்,
இறையுள் இணைந்து வாழலாம்?
அந்த வழியை இயேசு திறந்தார்.
அன்பின் வழியில் தாழலாம்.
இந்த அன்பை விட்டவர் கடந்தால்,
எங்கே எப்படி வாழலாம்?
வந்த நோக்கம் மறந்திறந்தார்;
வாழ்வை இழந்து தாழலாம்!
(யோவான் 13:34-35).
The Truth Will Make You Free
எந்த வழியில் நாம் இனி நடந்தால்,
இறையுள் இணைந்து வாழலாம்?
அந்த வழியை இயேசு திறந்தார்.
அன்பின் வழியில் தாழலாம்.
இந்த அன்பை விட்டவர் கடந்தால்,
எங்கே எப்படி வாழலாம்?
வந்த நோக்கம் மறந்திறந்தார்;
வாழ்வை இழந்து தாழலாம்!
(யோவான் 13:34-35).
கழுவித் துடைக்கும் கடவுளின் மைந்தன்,
கருத்தை உணர்த்த மொழிகிறார்.
புழுதிக்கொத்த நம் புவி வாழ்வை,
புனிதம் ஆக்கிடப் பொழிகிறார்.
தொழுகைக்குரிய அவரது அன்பை,
தூயரும் தொடர அழைக்கிறார்.
எழுவாய் மனிதா, இயேசு வழி பார்;
ஏற்பார் வாழ்வில் தழைக்கிறார்!
(யோவான் 13:31-35)
பிறப்பும் தாழ்மை, வளர்ப்பும் தாழ்மை,
பேசிய அறிவும் தாழ்மை, தாழ்மை .
இறப்பும் தாழ்மை, எதிலும் தாழ்மை,
இயேசு வழியோ தாழ்மை, தாழ்மை.
சிறப்பும், மேன்மையும் தருவது தாழ்மை;
சிலுவை சொல்கிற செய்தியும், தாழ்மை.
முறைக்கும் என்னில் இல்லை தாழ்மை;
மும்மை இறையே, தருவீர் தாழ்மை!
(யோவான் 13:13-17)
தாழ்மை வடிவில் வந்த மைந்தன்,
தம் அடியாரின் முன் மாதிரி.
வாழ்வின் முடிவில் நுழையும் மனிதன்,
வளர்த்தெடுப்பின் நன் மாதிரி.
காழ்ப்புணர்வோடு கட்டி முழங்கும்,
கதைகள் யாவும் துற் செய்தி.
ஏழ்மை எனினும், இயேசு வழங்கும்,
இந்த அன்பே நற் செய்தி!
(யோவான் 13:13-17).
உடன்படி முடித்த ஒருசில நொடியில்,
உயர்ந்தோன் யாரென வாதிட்டார்.
கடன் நெறி அறியா அடியர் அன்றும்.
கருத்தை இழந்து மோதிட்டார்.
அடிமையின் வடிவாய் ஆண்டவர் தாழ்ந்து,
அடியரின் கால்கள் கழுவிட்டார்.
பிடிபடா வாழ்வில் பெரியவர் யாரோ?
பிறரிடம் அன்பில் தழுவிட்டார்!
(லூக்கா 22:24-30 & யோவான் 13: 1-20)
இறுதி விருந்தால் இணைக்கும் வழியை,
இயேசு உரைப்பது கேட்டீரா?
உறுதி செய்யும் உடன்படி மொழியை,
உள்ளில் புதிதாய் ஏற்றீரா?
திறுதி செய்யவே பலியாய் மடியும்,
தெய்வ உடலை உண்டீரா?
குருதி ஆறும் சாறென வடியும்,
கிறித்து அன்பைக் கண்டீரா?
(மத்தேயு 26:17-29)
விடுதலை நாளை விழாவாய் எடுத்து,
விருந்து உண்கிற யூதரைப்போல்,
அடியவரோடு ஆண்டவர் அமர்ந்து,
அந்த இரவில் உணவுண்டார்.
கெடுதலை நினைத்த யூதாசிருந்தும்,
கிறித்து பகிர்ந்து கொடுத்ததுபோல்,
மடிகிற மாந்தர் உடன் இருந்தாலும்,
மைந்தனை எண்ணி உண்போமா?
(லூக்கா 22:1-23)
ஏரோது அரசன் கட்டிய கோயில்,
எடுத்துக் காட்டிய அழகு கண்டு,
ஈராறு அடியரும் வாய் பிளந்தார்;
இப்படி மனிதர் இன்றுமுண்டு.
தேறாது போகும் எருசலேம் கோயில்;
தெரிந்துரைத்த இயேசு கண்டு,
வாராதிருப்பார் வாழ்விழப்பார்;
வாக்கை நம்பு, மீட்பு உண்டு!
(மத்தேயு 24:1-2)