இன்னொரு பண்பு பொறுமையாகும்;

இயேசுவின் வாழ்வே சான்று ஆகும். 

முன்னொரு நாளில் யோபுவில் கண்டோம்;

முழுமை காண, இயேசுவேயென்போம்.

என்னிலும் நம்மிலும் வருமா பொறுமை?

இல்லா இடத்தில் யாவுமே வறுமை. 

நன்னெறி என்பது உரைப்பதில் இல்லை;

நாம் நடப்போம், அவரே எல்லை!

(லூக்கா 4:14-44)

இரக்கம் என்பது இறையின் பண்பு;

இயேசு மொழிந்தார் யூதர் முன்பு.

சிறக்கச் செய்வது செல்வம் என்று, 

சிந்தித்தாரைத் திருத்த அன்று.

உரக்கப் பேசிச் செய்யார் கண்டு,

ஊரில் பற்பல கதைகள் உண்டு. 

மறக்க மாட்டா இயேசுவோ வந்து,

மன்னிக்கிறார் தம்மைத் தந்து!

(லூக்கா 6)

நன்மை செய்து நடந்த இயேசு,

நவின்ற செய்தி அன்பாகும்.

பன்மை இனமும் சேர்ந்து வாழ, 

பயிற்றுவிக்கும் பண்பாகும்.

வன்மை செய்து காட்டும் மாசு,

வழங்கும் முடிவு துன்பாகும். 

தன்மை என்ன? விதைப்பதுதான்

தரும் விளைச்சல், பின்பாகும்!

(யோவான் 13)

நல்லவர் யார்? கெட்டவர் யார்?

எல்லோரும் கெட்டவரே, ஏதேனும்  நேரத்திலே.

எண்ணாது விட்டவரே, ஏமாந்தார் வீரத்திலே. 

நல்லோரும் கெட்டவரே, நாம் காணா தூரத்திலே.

நம்புவீர் ஒருவரையே, இறை அதிகாரத்திலே! 

அருஞ்செயல் புரிந்த இடங்களில் கூட,

ஆண்டவர் இயேசுவை எதிர்க்கிறார்.

பெருந்திரள் கூட்டம் அவர் புகழ் பாட,

பெருமைக்காரரோ கொதிக்கிறார்.

வருந்திடும் நாட்கள் வரும் வரை ஆட,

வானிறையும்  அனு மதிக்கிறார். 

திருந்தும் நமக்கோ திருவடி  நாட,

திருச்செயலாலே விதிக்கிறார்!

(யோவான் 12:37-38)

ஆண்டவர் செய்த அருஞ்செயல் யாவும்

அவருக்கில்லை, பிறருக்கே.

மாண்டவர் கூட அவர் குரல் கேட்டு,

மறுபடி வாழ்ந்தது உறவுக்கே.

தோண்டிப் பார்க்கும் நம் நிலை இன்று,

தூய நினைப்பில் யாருக்கே?

வேண்டிடும் நன்மை பகிருவதாலே,

விளையும் நூறாய் ஊருக்கே!

(யோவான் 11).

தன்னிடம் வந்த எளியரைக் கண்டு,

தாங்கும் மைந்தன் உருகுகிறார்.

இன்னிலம் வாழும் உரிமை உண்டு;

இயலார் நிலைக்கு மருகுகிறார்.

எண்ணி முடியா அருஞ்செயல் கொண்டு,

எளியருக்குதவி, பெருகுகிறார்.

நன்மை செய்வதே நமக்கும் தொண்டு;

நடப்பார் மேலும் மெருகுகிறார்!

(மத்தேயு 14).

யார் விளித்தாலும் இயேசு சென்று,

இறையிடம் திரும்ப அழைக்கிறார்.

தார் மணி மாலை தற்புகழ் என்று,

தம்பட்டமின்றி உழைக்கிறார்.

பேர் புகழ் பெருமை ஈட்ட இன்று,

பிழைப்போர் திருந்த அழைக்கிறார்.

போர் முகில் அன்று, பொறுமை நன்று;

புரிந்தோர் நன்கு உழைக்கிறார்!

(மத்தேயு 10 & 11). 

கரூர்!

கண்ணீர் வடிக்கும் கரூர் துயரம்!

தனி மனித வழிபாட்டை, இழுக்கென்றுரைப்பாய்;
இனியாவது, கூட்டங்களை ஒழுங்கு படுத்துவாய்.
பிணியாகி விட்டனரே, பிழைக்கும் அரசியலார்.
அணி அன்று, அறம் நின்று, தழைக்க வழி பார்!

-கெர்சோம் செல்லையா.

ஈராறு அடியரும் எழுபது தொண்டரும்,

ஏழை, செல்வரில் ஏற்ற பெண்டிரும்,

ஊராகத் திரிந்து ஒட்டிக் கொண்டனர்;

ஓய்வும் இன்றி ஊழியம் கண்டனர்.

சீராகத் திருப்பணி செய்ய விரும்புவர்,

செவ்வழி காண நெஞ்சிலரும்புவர்,

நேராக இயேசுவைப் பின் தொடரும்;

நேர்மையாலே உளம் படரும்!

( லூக்கா 9 & 10)