அந்நாள் வந்த பஞ்சம் தவிர்க்க அயல் நாடுற்ற தாயார் பின், எந்நாள் ஆயினும் புகழ் தழைக்க, எழுந்த பெண்ணே ரூதாவார். பின்னாள் இவளே தாயாராகி, பிறக்க வைத்த அரசர்களை, இந்நாள் கண்டு இறையுமறிவார், ஏழ்மை நீக்கும் தூதாவார்! (ரூத்து 1-4).
எப்படி மனிதர் செயல் புரிந்தாரோ, யார் யாருக்குத் தீங்கிழைத்தாரோ, அப்படி அவரும் அடைந்தது காட்டும், அறிவுத் திருமறை வாசிப்பீரே. இப்படி நம்மைத் திருத்தியமைக்கும், இதுவே வாழ்வு என்றும் உணர்த்தும், செப்பிட இயலா ஆசிகள் நிறைந்த, செயல்வழி நூலிதை நேசிப்பீரே! (நீதித் தலைவர்கள்: 1:1-7;8:30-9:57)
அடுத்த முந்நூற்றைம்பது ஆண்டில், அரசர் என்பவர் இல்லா நாளில், தடுத்து ஆளும் இறையைப் பிரிந்தார். தமக்குச் சரியென்பதும் புரிந்தார். கெடுப்பதும் கெடுவதுமாகத் திரிந்தார்; கேட்டின் வேரும் பாராதிருந்தார். இடுக்கணில் மட்டும் இறைவா என்றார். இழிநிலைக்கே இப்படிச் சென்றார்! (நீதித் தலைவர்கள் (21:25)
நானூறு ஆண்டுகள் ஆயினும், நல்லிறை வாக்கு பலித்ததே. தேனூறு நாட்டை வழங்கினும், திருந்தி வாழவும் விளித்ததே. ஆனாலும் இசரயெல் மறந்ததால், யோசுவா எழுதி எழுகிறார். தானும் தன் வீட்டார் அனைவரும், தாழ் பணியத் தொழுகிறார்! (யோசுவா 24).
உன்னை விட்டு, விலகவும் மாட்டேன், ஒருபோதும் கை, விடவும் மாட்டேன் என்றும் எங்கும், உன்னோடிருப்பேன். இவ்வாக்காலே, இறை அழைத்தார். அன்றதை நம்பி, யோசுவா சென்றார். ஆண்டவராலே, தலைவருமானார். இன்றிதைக் கேட்டு, நடப்பவர் யாரோ? எங்கள் தலைவரோ, பிழைத்தார்! (யோசுவா 1:1-9)
ஐந்து நூற்களை முதற்கண் அருளி, ஆண்டவர் நேர்மை காட்டுகிறார். அந்த நூற்களைத் தோரா என்று, அழைத்து நன்மை நாட்டுகிறார். தந்த நூற்களின் உண்மை கண்டு, தாழ்வோர் பேரருள் கூட்டுகிறார். இந்த வாழ்க்கைப் பயணம் காக்க, இறையே தம் கை நீட்டுகிறார்!
நாற்பது ஆண்டுகள் நடத்திய தலைவர், நல்லறிவாற்றல் நிறைந்த கலைஞர், யோர்தான் வருமுன் கடமை முடித்தார். யோசுவாவிடம் பொறுப்பும் கொடுத்தார். போர்த்திறம் கொண்டவர் என்பதால் அல்ல, புகழ்ந்து காலடி கிடந்ததால் அல்ல; நேர்மைப் பற்றில் அவர் பணி புரிந்தார். நிரப்புமிறையே யோசுவா தெரிந்தார்! (இணைச் சட்டம் 34)
இப்படி இவர்கள் நடக்கும் நாளில், இன்னொரு வறட்சி காண்கையில், தப்பாய்ப் பேசித் தன் பற்றிழந்து, தண்ணீர்ப் பாறையை அடிக்கிறார். அப்படி மோசே ஆற்றிய தவற்றால், அடையும் கானான் இழக்கவே, ஒப்பரு இறையும், உள்ளம் கண்டு, ஊழியர் கை பிடிக்கிறார்! (எண்ணிக்கை 20:1-13 & இணைச்சட்டம் 34)
காட்டுள் மோசே நடந்தாலும், கடுந்துயர்கள் அடைந்தாலும், ஏட்டில் எழுத மறக்கவில்லை; இறையாலன்றி பிறக்கவில்லை. நாட்டில் சட்டங்கள் பின் வந்தும், நற் காப்புறுதிகள் அவை தந்தும், வாட்டம் இதுபோல் தீர்க்கவில்லை; வறியரும் வேறு பார்க்கவில்லை! (லேவியர் 19:9-18).
தூற்றும் மாந்தர் நிறைந்துள்ள, தூய்மை குன்றிய தேர்தலிலும், மாற்றம் இறையால் வருமென்று, மா நம்பிக்கை கொள்கிறேன். ஆற்றல் மிகுந்தும் அன்பில்லார், ஆளுமையிழந்து தோற்பதும், போற்றும் தெய்வத் தீர்ப்பென்று, பொய்யாமொழி சொல்கிறேன்! -கெர்சோம் செல்லையா.