அன்பர்களே,
வணக்கம்.
கொரோனா மூன்றாம் அலை கொடிதாய் வீசும் இந்நாளில், கொஞ்ச நேரம் மனம் விட்டுப் பேச இதை எழுதுகிறேன். முதலிரண்டு அலைகளால், இழந்து நிற்பாரையும், மூன்றாம் அலையால் சோர்ந்து நிற்பாரையும், முக்காலம் அறிந்த இறைவன் ஆற்றித் தேற்ற, முதற்கண் வேண்டி, எழுதத் தொடங்குகிறேன்.
இந்த முறை நமது பகுதியிலும் சிலர் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இருப்பினும், யாவரையும் காக்கும் பணியில், இந்திய-தமிழக அரசுகளும், மருத்துவத்துறையினரும், மாநகர் மன்றக் களப்பணியாளர்களும், காவல்துறை நண்பர்களும், மிகுந்த விழிப்புணர்வோடு இரவு பகலாக, உழைப்பதும், ஒத்துழைப்பதும் நமக்கு நம்பிக்கை தருகிறது. இவர்களை வாழ்த்துவோம்; இவர்களின் நற்பணிக்கு, நன்றி கூறுவோம்.
இந்நாட்களில் பாதிப்பிற்குள்ளானோர் தனிமைப் படுத்தப்பட்டுள்ளதால், அவர்கள் இல்லம் செல்வதும், அவர்களைச் சந்தித்துப் பேசுவதும் தவிர்க்கப்பட வேண்டியவைகளே. ஆயினும் அவர்கள் நலமடைய எண்ணலாம், இறையிடம் வேண்டலாம்; இயன்றவரை உதவலாம். இதை விட்டுவிட்டு, பாதிக்கப்பட்டோர் பாவம் செய்தோர் என்று அவரைத் தூற்றவும் வேண்டாம்; பாதிக்கப்படாத நாம் நன்மை செய்வோர் என்று நம்மைப் போற்றவும் வேண்டாம்.
தொற்றுக்கு, சாதி இல்லை, சமயம் இல்லை; மொழி இல்லை, இனம் இல்லை. வீடும் இல்லை, நாடும் இல்லை. இந்நோய் யாருக்கு வரும் என்று, தெரியவும் இல்லை. எப்படிப் பரவும் என்று புரியவும் இல்லை. எனவே, வீண் பேச்சு பேசி வருத்தப்படுத்த வேண்டாம் என்று வேண்டுகிறேன்.
இந்த இக்கட்டு நாட்களில் யாரேனும் வழிகாட்டு அறிவுரை வேண்டின், இயன்ற அளவு உதவ நாங்கள் இருக்கிறோம் என்று கூறி, உதவுவோம். இப்படி உதவிகள் புரிவோரையும் ஊக்குவிப்போம்.
இந்தத் தொற்றும் கடந்து போகும். வந்த அனைவருக்கும் நலம் ஆகும்.
நன்றி, நல்வாழ்த்துகள்.
-கெர்சோம் செல்லையா,செக்ரெட்டேரியட் காலனி,சென்னை-600099.
அரசனின் விருப்பு!
அரசனாக விரும்பா அரசன்!
நற்செய்தி: யோவான் 6:14-15.
நல்வழி:
அப்பமும் மீனும் யார் தருவாரோ,
அவரே அரசன் எனப் பார்க்கும்,
இப்புவி மாந்தர் இயலா நிலையில்,
இறைமகன் செய்ததை எண்ணுங்கள்.
எப்படிப் பிறரை அடக்குவதென்ற,
எகிறும் ஆணவம் கொள்ளாமல்,
ஒப்புமை இல்லா மேன்மையான,
உதவும் பணியே பண்ணுங்கள்!
ஆமென்.
-கெர்சோம் செல்லையா.
எனக்கு மாத்திரம் என்னாமல்!
நல்வழி:
பாத்திரம் நிரம்பி வழிகிறதே.
பசியும் அடங்கித் தெளிகிறதே.
மாத்திரம் எனக்கு என்னாமல்,
மழையாய் ஈவோம், நண்பர்களே.
ஆத்திரத்தோடு பதுக்கிடுவார்,
அழியும்படிக்கே ஒதுக்கிடுவார்.
கூத்தினையொத்த இவ்வாழ்வில்,
கொடையாய் ஆவோம் அன்பர்களே!
ஆமென்.
-கெர்சோம் செல்லையா.
பற்றால் வரும் நிறைவு!
பற்றால் வரும் நிறைவு!
நற்செய்தி: யோவான் 6:10-11.
நல்வழி:
இருக்கும் உணவு குறைந்திருந்தும்,
யாவரும் உண்ணப் பகிருகையில்,
விருப்பம் தந்த இறை மகனார்,
விருந்தாய் மாற்றிக் காட்டுகிறார்.
திருப்பம் காண விரும்பிடுவார்,
தெய்வப் பற்றால் நிறையுகையில்,
கருப்பை தொடங்கி கடைசி வரை,
காக்கும் இறையே ஊட்டுகிறார்!
ஆமென்.
-கெர்சோம் செல்லையா.
சிறு உதவி!
சிறு உதவி!
நற்செய்தி: யோவான் 6:8-9.
நல் வாழ்வு:
மற்றவர் செய்கிற உதவி சிறிதோ?
மமதையில் தாழ்வாய் எண்ணாதீர்.
குற்றமுரைப்போர் கொடுப்பது பெரிதோ?
கொடாமல் எதுவும் உண்ணாதீர்.
பெற்றவர் அளப்பது பத்தில் ஒன்றாம்;
பேதையாய் கணக்கு பண்ணாதீர்.
அற்றவரளிக்கும் ஒன்றும் நூறாம்;
அவ்வித அன்புக் கண்ணாவீர்!
ஆமென்.
-கெர்சோம் செல்லையா.
புத்தாண்டு 2022 வாழ்த்து!
புத்தாண்டு 2022 வாழ்த்து!
ஆயிரம் ஆண்டுகள் ஒரு நாளாயின்,
ஆண்டவர் புத்தாண்டெந்நாள்?
பாயிரம் பாடி வாழ்த்தி அவரின்,
பதிலைக் கேட்போம் இந்நாள்.
தாயினும் சிறந்த அன்பு பெருகின்,
தரணிக்கந்நாள் நன்னாள்.
வாயிலும் வயிற்றிலும் இல்லார்க்கீவின்,
வரும் நாளனைத்தும் பொன்னாள்!
-கெர்சோம் செல்லையா.
‘இறையன்பு இல்லம்’,
24, செயலக குடியிருப்பு,
சென்னை- 600099.
அலைபேசி: 9444628400
கிறித்து பிறப்பின் வாழ்த்து!
கிறித்து பிறப்பின் வாழ்த்து!
எத்தனை எத்தனை பண்டிகை வந்தும்,
ஏன் மறந்தோம் இறை நயம்?
அத்தனை முறையும் உண்டுடுத்தோம்;
அதனால் மறைந்ததா உளக் கயம்?
இத்தனை ஆண்டுகள் இழந்தது போதும்.
இனி கேட்போமா கிறித்தியம்?
வித்தென ஈந்து விளைச்சலறுப்போம்;
விண் மகன் தருவார் நம் வயம்!
-கெர்சோம் செல்லையா.
இரங்கும் வாக்கு!
இரங்கும் வாக்கு!
நற்செய்தி: யோவான் 6:7.
7. பிலிப்பு அவருக்குப் பிரதியுத்தரமாக: இவர்களில் ஒவ்வொருவன் கொஞ்சங்கொஞ்சம் எடுத்துக்கொண்டாலும், இருநூறு பணத்து அப்பங்களும் இவர்களுக்குப் போதாதே என்றான்.
நல்வழி:
உண்டு, தூங்கி, ஊரில் சுற்றி,
உழைத்தோம் என்று கூறும் நாம்,
கண்டு, வாங்கிச் சேர்த்தது பற்றி,
கதை கட்டுரைகள் சொன்னோமே.
பண்டு நாமும் பசியால் வற்றி,
படுத்து ஏங்கிக் கிடந்தது போல்,
ஒண்டு மனிதர் இருப்பது மாற்றி,
உதவி புரியச் சொன்னோமா?
ஆமென்.
-கெர்சோம் செல்லையா.
பசி!
பண்டிகை நாளிலும் பசியே!
நற்செய்தி: யோவான் 6:3-6.
நல்வழி:
பண்டிகை நாளிலும் பலபேர்,
பசியில் துடிக்கிறார், பாரீர்.
உண்டிட ஒன்றும் இல்லார்,
உறங்கி முடிக்கிறார், பாரீர்.
கண்டிடும் இயேசு நெஞ்சோ,
கனிந்து கொடுப்பதும், பாரீர்.
கொண்டதாய்க் கூறும் நாமோ,
கொடுக்காதெடுப்பதும், பாரீர்!
ஆமென்.
-செல்லையா.
மருத்துவர்!
மருத்துவர்!
நற்செய்தி: யோவான் 6:1-2.
நல்வழி:
அணியாய் மருத்துவர் பெருகக் கண்டு,
அகம் மகிழார் யார் உண்டு?
பிணியால் வாடும் மக்கள் முன்பு,
பேசும் இவர்தான் இறையன்பு.
பணியாய்ச் செய்யும் மருத்துவ நெஞ்சு,
பரிவில் வளர நிதம் கெஞ்சு.
கனிவாய்த் தொட்டு, காயம் கட்டு.
கடவுள் அருளை நீ கூட்டு!
ஆமென்.
-கெர்சோம் செல்லையா.