அரசை மதித்துக் கொடுப்போம்!
நற்செய்தி மாலை: மாற்கு 12:13-17.
“பரிசேயர் இயேசுவை அவருடைய பேச்சில் சிக்கவைக்க ஏரோதியர் சிலரை அவரிடம் அனுப்பி வைத்தனர். அவர்கள் அவரிடம் வந்து, ‘ போதகரே, நீர் உண்மையுள்ளவர்; ஆள் பார்த்துச் செயல்படாதவர்; எவரையும் பொருட்படுத்தாமல் கடவுளின் நெறியை உண்மைக்கு ஏற்பக் கற்பிப்பவர் என்பது எங்களுக்குத் தெரியும். சீசருக்கு வரிசெலுத்துவது முறையா, இல்லையா? நாங்கள் செலுத்தவா, வேண்டாமா? ‘ என்று கேட்டார்கள். அவர் அவர்களுடைய வெளிவேடத்தைப் புரிந்து கொண்டு, ‘ஏன் என்னைச் சோதிக்கிறீர்கள்? என்னிடம் ஒரு தெனாரியம் கொண்டுவாருங்கள். நான் பார்க்க வேண்டும்’ என்றார்.அவர்கள் அதைக் கொண்டு வந்தார்கள். இயேசு அவர்களிடம், ‘ இதில் பொறிக்கப்பட்டுள்ள உருவமும் எழுத்தும் யாருடையவை? ‘ என்று கேட்டார். அவர்கள் அவரிடம், ‘ சீசருடையவை ‘ என்றார்கள். அதற்கு இயேசு அவர்களை நோக்கி, ‘ சீசருக்கு உரியவற்றைச் சீசருக்கும் கடவுளுக்கு உரியவற்றைக் கடவுளுக்கும் கொடுங்கள் ‘ என்றார். அவர்கள் அவரைக் குறித்து வியப்படைந்தார்கள்.”
நற்செய்தி மலர்:
எடுக்கும் எண்ணம் பெருத்த நாட்டில்,
இறைவன் வாக்கை எடு என்பேன்.
கொடுக்கும் பண்பு குறையும் வீட்டில்,
குவியும் பொருளைக் கெடு என்பேன்.
அடுக்கும் காசில் ஆயம் கேட்கும்,
அரசை மதித்துக் கொடு என்பேன்.
படுக்கும் முன்பே யாவையுமெடுத்து,
படைத்தவர் காலடி விடு என்பேன்.
ஆமென்.









