அறிவு!

நாலடி நற்செய்தி…2.

அறிவு!

அன்பின் செயலே அறிவின் சிறப்பு.

அதை அடைய உழைப்போமே.

நன்மை செய்யா வாழ்வும் இறப்பு.

நம்பி, வாழ்ந்து, தழைப்போமே!

-செல்லையா.

இறையின் தீர்ப்பு!

இறையின் தீர்ப்பு!
நற்செய்தி: யோவான் 8:15-16.  

நல்வழி:  

ஆண்டிக்கும் தீர்ப்பு, அரசிற்கும் தீர்ப்பு,

ஆண்டவர் தீர்ப்பு ஒன்றேயாம்.

வேண்டிடும் நேர்மை, விரைவில் வருது.

விண்ணின் முடிவு நன்றேயாம்.

கூண்டில் அடைக்கும் முன்பே பார்த்து,

குற்றம் தவிர்ப்பது என்றேயாம்? 

மாண்டபின் பேசிப் பயனேயில்லை.

மனிதா திருந்து, இன்றேயாம்!


ஆமென். 

-கெர்சோம் செல்லையா.  

அறிய விரும்புவோம்!

அறிய விரும்புவோம்!


நற்செய்தி: யோவான் 8:13-14.

13. அப்பொழுது பரிசேயர் அவரை நோக்கி: உன்னைக்குறித்து நீயே சாட்சிகொடுக்கிறாய்; உன்னுடைய சாட்சி உண்மையானதல்ல என்றார்கள்.
14. இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: என்னைக்குறித்து நானே சாட்சிகொடுத்தாலும், என் சாட்சி உண்மையாயிருக்கிறது; ஏனெனில் நான் எங்கேயிருந்து வந்தேனென்றும், எங்கே போகிறேனென்றும் அறிந்திருக்கிறேன்; நீங்களோ நான் எங்கேயிருந்து வருகிறேனென்றும், எங்கே போகிறேனென்றும் அறியீர்கள்.

நல்வழி:

அன்று அவர்கள் அறியவில்லை;

அறிந்து கொள்ள விரும்பவில்லை.

இன்று பலபேர் விரும்பவில்லை.

இதனால் அறிவும் புரியவில்லை.

ஒன்று மட்டும் தெரிந்திடுவோம்.

உண்மை அறிய விரும்பிடுவோம்.

சென்று இயேசுவை நோக்கிடுவோம்;

சிதைக்கும் மடமும் நீக்கிடுவோம்!

ஆமென்.

-கெர்சோம் செல்லையா.

ஒளி!

ஒளி!

நற்செய்தி: யோவான் 8:12. 

12. மறுபடியும் இயேசு ஜனங்களை நோக்கி: நான் உலகத்திற்கு ஒளியாயிருக்கிறேன், என்னைப் பின்பற்றுகிறவன் இருளிலே நடவாமல் ஜீவஒளியை அடைந்திருப்பான் என்றார்.  

நல்வழி:

ஒருவரும் சேரக் கூடா ஒளியாய்,

ஒளிர்கிற தெய்வம் இயேசு. 

திருவருள் தருகிற, தேடா வழியாய்,

தெரிகிற மனிதனும் இயேசு.

இருளாய் இருந்த எனது வாழ்வில்,

ஒளியாய் வருபவர் இயேசு. 

பொருளால் அல்ல, தனது உயிரால்,

புனிதம் தருபவர் இயேசு!


 ஆமென். 

-கெர்சோம் செல்லையா.  

பொறுத்தல்!

பொறுத்தல்!
நற்செய்தி: யோவான் 8:11.

நல்வழி:


பொறுத்துக் கொள்ளல் இறையின் அன்பு; 

பொல்லார் நமையும் பொறுக்கிறார்.

வெறுத்துத் தள்ளல் குறையின் பண்பு. 

வெளிச்சம் இல்லார் வெறுக்கிறார்.

அறுத்துச் செல்லும் அழிவு தடுப்பார்,


அன்புப் பொறுத்தல் பெருக்கிறார். 

மறுத்துத் திரிவின், மாண்பு கெடுப்பார்;


மத வெறியாலே சிறுக்கிறார்.   


ஆமென்.  

-கெர்சோம் செல்லையா. 

குற்றம் சாட்டுதல்!

யோவான் 8:10.

நல்வழி:


உளச்சான்று வேலை செய்தால்,

ஒருவரையும் கல்லெறியோம். 

கிளைச்சான்றும் நாம் தேடோம்;

கேடு கெட்ட  சொல்லெறியோம்.

பழச்சாற்றின்  இனிமையெனும்,

பண்புகளால் நாம் நிறைவோம்.

இழக்காமல் இவை வளர்ப்போம்;

இன்னொருவர் குறைகூறோம்!

ஆமென்.  


-கெர்சோம் செல்லையா. 

தவறே செய்யாதொருவர்!

தவறே செய்யாதொருவர்!
நற்செய்தி: யோவான் 8:9.


9. அவர்கள் அதைக் கேட்டு, தங்கள் மனச்சாட்சியினால் கடிந்துகொள்ளப்பட்டு, பெரியோர்முதல் சிறியோர்வரைக்கும் ஒவ்வொருவராய்ப் போய்விட்டார்கள். இயேசு தனித்திருந்தார், அந்த ஸ்திரீ நடுவே நின்றாள்.


நல்வழி:


தவறே செய்யாதொருவர் வந்து,

தன் கையாலே கல்லெறிவீர்.

அவரே பிறரைத் தண்டிப்பதற்கு,

அருகதையுள்ளார்; சொல்லறிவீர்.

எவரே உரைப்பார் இவ்வருந்தீர்ப்பு?

இயேசுவின் திருமொழி என்றறிவீர்.

இவரே நடுவர், இனிமேல் நமக்கு;

இவர் வழி தூய்மை நன்கறிவீர்!


ஆமென்.


-கெர்சோம் செல்லையா.

இயேசு எழுதியது!

இயேசுவின் எழுத்து!

நற்செய்தி: யோவான் 8:7-8. 7. அவர்கள் ஓயாமல் அவரைக் கேட்டுக்கொண்டிருக்கையில், அவர் நிமிர்ந்து பார்த்து: உங்களில் பாவமில்லாதவன் இவள்மேல் முதலாவது கல்லெறியக்கடவன் என்று சொல்லி,8. அவர் மறுபடியும் குனிந்து, தரையிலே எழுதினார்.

நல்வழி:

தரையில் எழுதிய இயேசு தீர்ப்பு,

தவற்றைச் சுட்டிக் காட்டலையா?

உரைநூல் வடிவில் வராத சேர்ப்பு,

ஊரை உணர்த்தி ஓட்டலையா?

திரையில் தோன்றா ஊழியர் உண்டு;

தெய்வ வாக்கைப் பரப்பலையா?

விரைவில் வருகிற நடுவர் கண்டு,

விரும்பும் தூய்மை நிரப்பலையா?

ஆமென்.

-கெர்சோம் செல்லையா.

நற்பதில்!

மௌனந்தானே நற்பதில்!

நற்செய்தி: யோவான் 8:6.

நல்வழி:


நம்மைக் குற்றப்படுத்தும் நோக்கில்,

நயவஞ்சகத்தைச் சொல்பவர்கள்,

தம்மைத் திருத்திக் கொள்வதற்கு,

தருவது எது நற்பதில்?

பொம்மை போன்று பேசாதிருத்தல்,


போதும் போதும் என்பவர்கள்,

மும்மை தெய்வச் செயலைக் காண்பர்;

மௌனந்தானே நல் மதில்!


ஆமென். 

-கெர்சோம் செல்லையா.