அழிக்கப்பட்ட கோயிலை நினைத்து, அழாதீர் என்கிற ஆண்டவரால், விழிக்கச் செய்கிற தூதன் வந்தார்; வெறொன்றெழுப்பத் தூண்டுகிறார். தெளிக்கப்பட்ட ஆகாய் உரையால், தெம்பைப் பெற்று அடியவர்கள், எழுப்புதலோடு பணியை முடித்தார். எளிய கோயிலில் வேண்டுகிறார்! (ஆகாய்)
பத்து ஏழு ஆண்டுகள் காலம், பாபிலோனின் அடிமையாவீர். பித்து நீங்க தெய்வம் காண்பீர்; பேரருளாலே விடுதலையாவீர். தத்துவத்தால் கோரேசு வந்தார்; தளையறுத்து விடுதலையீந்தார். மெத்த அறிவைத் தேடும் நீவீர், மேதிய பெர்சிய வரலாறறிவீர்! (ஏசாயா 44:26-45:1-6 & எசுரா 1-4)
திருந்தி வாழும் மனிதர் நடுவில், தெய்வம் இருந்து ஆளுவதால், வருந்தி வீழும் தீங்கு வராது; வரைந்தார் தூய செப்பனியா. விருந்து போலிதை ஏற்பாருள்ளில், விண்ணே இறங்கி வாழுவதால், எரிந்து ஒழியும் நிலை இராது; இறையின்றி இரேன் தனியா! (செப்பனியா) Like Comment Share
ஒளி நாள் வாழ்த்து! ஒளி நாள் வாழ்த்து! வகை வகையான மக்களைக் கண்டேன். வாழ்த்தி வாழ் எனக் கட்டளையிட்டார். நகை மிகையாலே நம்பார் கண்டேன். நம்பு நீ எனக் கட்டளையிட்டார். பகை, வெறி, தீமை ஒழிக்கக் கேட்டேன். பார் உன் உள்ளம், கட்டளையிட்டார். புகை தர விரும்பா ஒளி நாள் கேட்டேன். புரியார் நடுவிலே கொண்டுவிட்டார்! -கெர்சோம் செல்லையா.
பொல்லார் தழைத்துப் புவியை ஆள, புழுதியில் அடியர் கிடப்பதேன்? நல்லார் வளர்ந்து நாட்டினில் வாழ, நல்லிறை உதவத் தடுப்பதேன்? எல்லார் உள்ளிலும் எழுகிற வினாயிது; இறைமுன் ஆபகூக் நின்றார். கல்லார் புரிய நேர்மையர் சொன்னார்; கடவுட் பற்றில் வாழ் என்றார்! (ஆபகூக்)
பத்து கோத்திர இசரயெல்லாரை பற்பல திசைக்கு விரட்டிய நாடு; அத்து மீறிடும் அசிரிய இனத்தை, அழைத்தும், குடியமர்த்தும் கேடு; மொத்தமாக அறுவடை செய்யும், முடிவு எழுதும் நாகூம் ஏடு. வித்து முளைத்து மரமாதல் போல், வினை விளையும் என்றும் பாடு! (நாகூம்)
மலையிலிருந்து இறங்கும் ஆறு, மண்ணைக் கழுவுதல் பேறு சிலை முன் நின்றவர் திருந்துமாறு செய்தி சொன்னவர் யாரு? விலை போனவரின் விடுதலைக்கென்று, விண்ணவர் பிறப்பது எங்கு? தலையை உருட்டிய கேள்விக்கன்று, தந்தார் மீக்கா நன்கு! (மீக்கா)
அழியட்டும் அந்த அசிரிய எதிரி; அதனால் மறுத்தார் யோனா. பழி விட்டும், பதிந்த உள் வெறி, பழிவாங்குதற்குத்தானா? விழி தட்டும் வியப்பின் நிகழ்ச்சி, விடுதலை ஈந்திடத்தானே. பொழியட்டும் ஈசனின் புகழ்ச்சி, புரிகிற இரக்கந்தானே! (யோனா)
தம்பியின் தாழ்வில் உதவிட மறுக்கும் தமையன் வாழ்ந்து செழிப்பனோ? வெம்பகை மூச்சுக் குழலை இறுக்கும், வேளையில் எப்படிப் பிழைப்பனோ? நம் பகை விட்டு நன்மையே செய்யும், நலத்துள் ஒபதியா அழைக்கிறார். இம்மையும் தொடரும் மறுமையை உய்யும்; இரக்கம் கொண்டவர் பிழைக்கிறார்! (ஒபதியா)
தெற்கிலிருந்து வடக்கே சென்று, தெய்வ உரை மொழிந்தவர் அற்பர்களாலே ஆயன் என்று அருவருக்கப்படுகிறார். நற்குலம் பிறந்த ஆமொசு அன்று நல்கிய நூலால் தெளிந்தவர், நேர்மை ஆற்றில் நீந்துவர் இன்று; நினைப்பூட்டப்படுகிறார்! (ஆமொசு)