




The Truth Will Make You Free
நல்வாழ்வு:
காட்டிக் கொடுக்கும் கயவனையும்
கனிந்து தோழன் என்றாரே.
கூட்டில் குதிக்கும் குருவியெனக்
கொதிக்கும் எனையும் காண்பாரே.
நாட்டின் நடப்பு பார்க்கையிலே
நல்லவர் வடிவில் யூதாசே.
கேட்டின் மக்கள் கெட்டொழிவார்;
கிறித்து போன்று இரு நெஞ்சே!
ஆமென்.
நல்வாக்கு:
மத்தேயு 26:47
இயேசுவைக் காட்டிக் கொடுத்தலும் கைது செய்தலும்:
“இயேசு தொடர்ந்து பேசிக் கொண்டிருந்தபோது பன்னிருவருள் ஒருவனாகிய யூதாசு அங்கு வந்தான். அவனோடு குருக்களும் மக்களின் மூப்பர்களும் அனுப்பிய பெருங்கூட்டம் வாள்களோடும் தடிகளோடும் வந்தது.”
நல்வாழ்வு:
காசிற்காக எதையும் செய்யும்
கயவர் இன்றும் வருகின்றார்.
கத்தி, தடியைக் கையில் வைத்து,
கண்ணீர் ஊற்றித் தருகின்றார்.
பேசிச் செல்லும் உறவுகளாக
பேய் பிடித்தோர் இருக்கின்றார்.
பிழையுள் நானும் விழாதிருக்க,
பெரியவர் இயேசு பிரிக்கின்றார்!
ஆமென்.
நல்வாக்கு:
மத்தேயு 26:45-46.
“பிறகு சீடர்களிடம் வந்து, ‘ இன்னும் உறங்கி ஓய்வெடுக்கிறீர்களா? பாருங்கள், நேரம் நெருங்கி வந்து விட்டது. மானிட மகன் பாவிகளின் கையில் ஒப்புவிக்கப்படுகிறார். எழுந்திருங்கள், போவோம். இதோ! என்னைக் காட்டிக்கொடுப்பவன் நெருங்கி வந்து விட்டான் ‘ என்று கூறினார்.”
நல்வாழ்வு:
முக்காலம் அறிந்தவர் நீர்;
மும்மையு மாயிருந்தீர்.
எக்காலம் அறிந்திருந்தும்
யூதாசைச் சேர்த்திருந்தீர்
இக்காலம் எம் வாழ்வில்
ஏய்ப்பவரைக் காண்கின்றீர்.
அக்கோலம் அறியாத
அடிமையின் கண் திறப்பீர்!
ஆமென்.
நல்வாக்கு:
மத்தேயு 26:43-44.
“அவர் திரும்பவும் வந்தபோது சீடர்கள் உறங்கிக்கொண்டிருப்பதைக் கண்டார். அவர்களுடைய கண்கள் தூக்கக் கலக்கமாய் இருந்தன. அவர் அவர்களை விட்டு மீண்டும் சென்று மறுபடியும் அதே வார்த்தைகளைச் சொல்லி மூன்றாம் முறையாக இறைவனிடம் வேண்டினார்.”
நல்வாழ்வு:
துன்பம் தமக்கென்றால்,
தூங்காது இருப்பவரே,
அன்பர் அடைந்தாலும்,
அயராது உழைப்பவரே,
இன்முக இயேசன்று
யாரை எதிர்பார்த்தார்?
மன்றாடிக் கேட்பவரை
மறுபடியும் தேடுகிறார்!
ஆமென்.
நல்வாக்கு:
மத்தேயு 26:42.
“மீண்டும் சென்று, ‘ என் தந்தையே, நான் குடித்தாலன்றி இத்துன்பக்கிண்ணம் அகல முடியாதென்றால், உமது திருவுளப்படியே ஆகட்டும் ‘ என்று இரண்டாம் முறையாக இறைவனிடம் வேண்டினார்.”
நல்வாழ்வு:
குடித்து முடித்தால்தான்
குவளை அகலுமெனில்,
கொஞ்சமும் வையேன் நான்;
குவளைத் துன்பந்தான்.
மடிந்து போனால்தான்
மணிக்கதிர் பிறக்குமெனில்,
மடிவேன் நெல்லாய் நான்;
மாநிலம் மகிழத்தான்!
ஆமென்.
நல்வாக்கு:
மத்தேயு 26: 40-41.
“அதன் பின்பு அவர் சீடர்களிடம் வந்து அவர்கள் உறங்கிக் கொண்டிருப்பதைக் கண்டு பேதுருவிடம், ‘ ஒரு மணி நேரம்கூட என்னோடு விழித்திருக்க உங்களுக்கு வலுவில்லையா? உங்கள் மனம் ஆர்வமுடையதுதான்; ஆனால் உடல் வலுவற்றது. எனவே சோதனைக்கு உட்படாதிருக்க விழித்திருந்து இறைவனிடம் வேண்டுங்கள் ‘ என்றார்.”
நல்வாழ்வு:
தூய ஆவியரே,
தெய்வத் திருவுருவே,
துவளும் உடல் பாரும்;
துணிவை நீர் தாரும்.
மாய உலகினிலே,
மயங்கி விழுகையிலே,
மடையன் எனை மீட்க,
மன்னா, நீர் வாரும்!
ஆமென்.
நல்வாக்கு:
மத்தேயு 26:38-39.
“அவர், ‘ எனது உள்ளம் சாவு வருமளவுக்கு ஆழ்துயரம் கொண்டுள்ளது. நீங்கள் என்னோடு இங்கேயே தங்கி விழித்திருங்கள் ‘ என்று அவர்களிடம் கூறினார். பிறகு அவர் சற்று அப்பால் சென்று முகங்குப்புற விழுந்து, ‘ என் தந்தையே, முடிந்தால் இத்துன்பக் கிண்ணம் என்னை விட்டு அகலட்டும். ஆனாலும் என் விருப்பப்படி அல்ல, உம் விருப்பப் படியே நிகழட்டும் ‘ என்று கூறி இறைவனிடம் வேண்டினார்.
நல்வாழ்வு:
துன்பக் கடலில் நீந்துகிறேன்;
துயரக் குவளையும் ஏந்துகிறேன்.
இன்பம் மட்டும் போதுமென்று,
இதனை விடவும் விரும்புகிறேன்.
அன்றைய நாளின் உம் வேண்டல்,
அருள் பொழியத் தெளிவுற்றேன்.
ஒன்றுமில்லை என் வலியே;
உணர்ந்து நானும் குடித்திடுவேன்!
ஆமென்.
நல்வாக்கு: மத்தேயு 26:36-37.
“பின்னர் இயேசு சீடர்களுடன் கெத்சமனி என்னும் இடத்திற்கு வந்தார். அவர், ‘ நான் அங்கே போய் இறைவனிடம் வேண்டும்வரை இங்கே அமர்ந்திருங்கள் ‘ என்று அவர்களிடம் கூறி, பேதுருவையும் செபதேயுவின் மக்கள் இருவரையும் தம்முடன் கூட்டிச் சென்றார். அப்போது அவர் துயரமும் மனக்கலக்கமும் அடையத் தொடங்கினார்.”