விலைக்கு போவார் தம்முடன் இருப்பதை,
விண்மகன் இயேசு அறியலையா?
தலைக்கு வருகிற ஏதம் உணர்கிற,
தகுந்த அறிவும் பெறவிலையா?
மலைத்து நின்றிட்ட அவரது அடியரும்,
மாறும் சூழலைப் புரியலையா?
நிலைத்து நிற்கும் திருமறை கற்போம்;
நேயன் முன்னுரை தெரியலையா?
(மத்தேயு 16)
The Truth Will Make You Free
விலைக்கு போவார் தம்முடன் இருப்பதை,
விண்மகன் இயேசு அறியலையா?
தலைக்கு வருகிற ஏதம் உணர்கிற,
தகுந்த அறிவும் பெறவிலையா?
மலைத்து நின்றிட்ட அவரது அடியரும்,
மாறும் சூழலைப் புரியலையா?
நிலைத்து நிற்கும் திருமறை கற்போம்;
நேயன் முன்னுரை தெரியலையா?
(மத்தேயு 16)
இன்றைய தலைவர்கள் சூழ்ச்சிகள் புரிந்து,
ஏய்த்தலை இறைப்பணி என்பதுபோல்,
அன்றைய கயவர்கள் காசுகள் சொரிந்து,
அடியரில் ஒருவனை வாங்கிட்டார்.
நன்றியை மறந்து, நல் வழி துறந்து,
நாமும் பணத்தின் பின் சென்றால்,
பன்றிகள் கூட்டம் என்றே அழைப்பார்;
பரிவில் இயேசு ஏங்கிட்டார்!
(லூக்கா 22:1-6)
கல்லை, தெய்வம் என்பார் நெஞ்சம்,
கல்லாய்ப் போகையில் அழுகிறோம்.
தொல்லை விற்று, தொல்லை வாங்கும்,
துயரம் தீர்க்கவும் எழுகிறோம்.
சொல்லை, தெய்வம் என்பார் வஞ்சம்,
துடிக்க வைக்கையில் விழுகிறோம்.
எல்லை இல்லா இறைவனின் திட்டம்;
இச்சிலுவை முன் தொழுகிறோம்!
(யோவான் 11: 45-57)
நாடும் மனிதன் வாழ்க்கை சொல்ல,
நன்னூல் நமக்கு பலவுண்டு.
தேடும் இறையின் தன்மை உரைக்க,
தேர்வுற்றாரும் சிலருண்டு .
வாடும் மனுக்குல மீட்பிற்கென்று,
வடித்த உவமையை நாமுண்டு,
ஆடும் மகிழ்ச்சி அடைய இன்று,
அழைப்பதுதான், என் தொண்டு!
தன் மகன் திருந்தி வந்தது கண்டு,
தந்தை விருந்து அளிக்கிறார்.
நன் மகன் அண்ணனோ சினம் மூண்டு,
நடுவில் வராது பழிக்கிறார்.
அன்பினின் உருவாம் அப்பா அறிந்து,
அவனை வருந்தி விளிக்கிறார்.
என் மகன் இறந்தான், எழுந்து வந்தான்;
இன்புறவேயென அழைக்கிறார்!
(லூக்கா 15:11-32)
வந்த மகனை வாரி அணைத்தார்.
வாய் மணக்க முத்தி இணைத்தார்.
நிந்தை அகற்ற, புத்துடை கொடுத்தார்.
நேர்மை வழிக்கு, காலணி தொடுத்தார்.
நொந்த அவனுக்கு மோதிரம் இட்டார்;
நீயும் மகனே, உடன்படி போட்டார்.
எந்த தந்தை இப்படி மகிழ்வான்?
எனக் கேட்பான், இறை புகழ்வான்!
(லூக்கா 15:11:32)
திரும்பி வருவான் தன் மகனென்று,
தேடும் தந்தை காத்திருந்தார்.
இருந்த வீட்டில் நிலை கொள்ளாது,
ஏங்கி எங்கும் பார்த்திருந்தார்.
வருந்தி வருகிற மகனை அணைக்க,
வயது முதிர்விலும் ஓடுகிறார்.
தெரிந்து கொள்வீர் இறையின் அன்பை;
தெய்வம் நம்மைத் தேடுகிறார்!
(லூக்கா 15:11-32).
இரு மைந்தரும் ஒரு தந்தையும்
இணைந்து வாழ்கையில் இன்பம்.
சிறு மைந்தனோ சொத்தைப் பிரித்து,
சென்று விட்டதால் துன்பம்.
குறு மதியால் அனைத்தையும் இழக்க,
குடல் சுருங்கினான் இளையான்.
வறுமையில்தான் அறிவு பிறக்கும்;
வருத்தும் தீமை களைவான்!
(லூக்கா 15;11-32)
இழப்பின் வலியும் மீட்பின் ஒலியும்,
இயம்பும் ஆட்டின் உவமை,
உழைக்கும் ஆயர் ஒவ்வொருவருக்கும்,
உணர்த்தப்படுகிற உண்மை.
விளக்கைக் கொளுத்தி வீட்டில் தேடும்,
விழுந்த காசின் உவமை,
அழைப்பைப் பெற்ற ஊழியர் களத்தில்,
ஆய வேண்டிய உண்மை!
(லூக்கா 15:1-10)