இறைவனின் மக்கள்

​நற்செய்தி மாலை: மாற்கு 3: 32-35

“அவரைச் சூழ்ந்து மக்கள் கூட்டம் அமர்ந்திருந்தது. ‘ அதோ, உம் தாயும் சகோதரர்களும் சகோதரிகளும் வெளியே நின்று கொண்டு உம்மைத் தேடுகிறார்கள் ‘ என்று அவரிடம் சொன்னார்கள். அவர் அவர்களைப் பார்த்து, ‘ என்தாயும் என் சகோதரர்களும் யார்? என்று கேட்டு, தம்மைச் சூழ்ந்து அமர்ந்திருந்தவர்களைச் சுற்றிலும் பார்த்து, ‘ இதோ! என் தாயும் என் சகோதரர்களும் இவர்களே. கடவுளின் திருவுளத்தை நிறைவேற்றுபவரே என் சகோதரரும் சகோதரியும் தாயும் ஆவார் ‘ என்றார்.”
நற்செய்தி மலர்:
குறைகள் கூறும் குடும்பத்தவர்கள் 
கூட இருந்து கெடுத்திடுவார்கள்.
சிறைபோல் வாழ்வை மாற்றியமைத்துச் 
செய்யும் நன்மையைத் தடுத்திடுவார்கள்.
இறைவன் விருப்பை விரும்புபவர்கள்,
இறைவனின் மக்கள் என்றாவார்கள்.
உறவுகளாகி, நன்மை செய்து,
ஒழுகும் அருளில் நன்றாவார்கள்!
ஆமென்.

உள்ளே வராத உறவுகள்!

உள்ளே வராத உறவுகள்!
நற்செய்தி மாலை: மாற்கு 3:31
“அப்பொழுது அவருடைய தாயும் சகோதரர்களும் வந்து வெளியே நின்று கொண்டு அவரை வரச் சொல்லி ஆள் அனுப்பினார்கள்.”
நற்செய்தி மலர்:
உயர்ந்த நிலையில் இருப்பாரென்றால்,
உறவுகள் யாவும் வீட்டுள் வரும்.
ஊழியன் என்று ஊரில் அலைந்தால்,
உடன் பிறப்பும் வெளியேறும்!
அயர்ந்து துவண்டு போக வேண்டாம்;
ஆண்டவர் நிலையைப் பார்த்திடுவோம்.
அதுதான் நமக்கும் என்றறிந்து,
அவரது பணியைத் தொடர்ந்திடுவோம்!
ஆமென்.

நற்செய்தி மாலை's photo.

செயல்களை நம்புவோமே!

பார்ப்பதைப் புரிந்து நம்புவோமே!
நற்செய்தி மாலை: மாற்கு 3:28-30.
“உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். தூய ஆவியாரைப் பழித்து உரைப்பவர் எவரும் எக்காலத்திலும் மன்னிப்புப்பெறார்; அவர் என்றென்றும் தீராத பாவத்திற்கு ஆளாவார். ஆனால் மக்களுடைய மற்றப் பாவங்கள், அவர்கள் கூறும் பழிப்புரைகள் அனைத்தும் அவர்களுக்கு மன்னிக்கப்படும். ‘ ‘ இவனைத் தீய ஆவி பிடித்திருக்கிறது ‘ என்று தம்மைப் பற்றி அவர்கள் சொல்லி வந்ததால் இயேசு இவ்வாறு கூறினார்.”
நற்செய்தி மலர்:
நற்செய்தி நாங்கள் கொடுக்கையிலே,
நம்ப மறுக்கும் நண்பர்களே,
அற்புதச் செயல்களின் வடிவினிலே,
ஆண்டவர் வாக்கு ஒலிக்கிறதே!
பொற்பரன் ஆவியர் பணிகளிலே,
புரிவோம் இறைவன் அன்பினையே!
பற்பல விளக்கங்கள் தேவையில்லை;
பார்ப்பதைப் புரிந்து நம்புவமே!
ஆமென்.

நற்செய்தி மாலை's photo.

யார் முதலில் வணங்கவேண்டும்?

​வணக்கம், வாழ்த்துகள்!

சிறியோர்தான் பெரியோரை முதலில் வணங்க வேண்டும் என்ற ‘சிந்தை’ கொண்ட நாடு, நம்நாடு. ஆனால், வருபவர்தான் முதலில் வணங்க வேண்டுமென்று, அரேபியப் பண்பு எனக்குக் கற்றுத் தந்தது. கிறித்தவத் திருமறையோ, “கனம் பண்ணுவதில், முந்திக் கொள்ளுங்கள்” என்றுகூறி, சிறியவர்-பெரியவர் வேறுபாடு எண்ணாது,முதலில் வணங்கச் சொல்கிறது. கிறித்துவும் தமது அடியாரை முந்திக்கொண்டு வாழ்த்தியதை யோவான் நற்செய்தியில் (20-ஆம் அதிகாரத்தில்) பார்க்கிறோம். இப்படி வாழ்த்தி வணங்குபவர்கள் இன்றும் உண்டு. இருப்பினும், இந்தப் பண்பு, இயேசுவின் அடியாரிடம் இன்னாளில் குறைந்தே வருகிறது!
நன்றி, நல்வாழ்த்துகள்.

நம்மை விடவும் வலியோன்!


​நம்மை விடவும் வலியோன்!

நற்செய்தி மாலை: மாற்கு 3:27

“முதலில் வலியவரைக் கட்டினாலன்றி அவ்வலியவருடைய வீட்டுக்குள் நுழைந்து அவருடைய பொருள்களை எவராலும் கொள்ளையிட முடியாது; அவரைக் கட்டி வைத்த பிறகுதான் அவருடைய வீட்டைக் கொள்ளையிட முடியும்.”
நற்செய்தி மலர்:
நம்மை விடவும் வலியோன் ஒருவன் 
நம்மில் உள்ளான், அறிவீரா?
நன்மை செய்ய தன்னை இழப்பான்; 
நாடும் இறையைத் தெரிவீரா?
பொம்மை போன்றுத் தலையை ஆட்டி,
போக்கு சொல்லல் விடுவீரா?
பொய்மை விட்டு, உண்மை காண, 
புனிதன் இயேசுவைத் தொடுவீரா?
ஆமென்.

வேண்டாம் பிளவு!

வேண்டாம் பிளவு!
நற்செய்தி மாலை: மாற்கு 3:26
“சாத்தான் தன்னையே எதிர்த்து நின்று பிளவுபட்டுப் போனால் அவன் நிலைத்து நிற்க முடியாது. அதுவே அவனது அழிவு.”
நற்செய்தி மலர்:
பிரித்து ஆளும் பிசாசுகூட 
பிளவைத் தன்னில் விரும்பானே.
எரித்துபோடும் நெருப்பும்கூட
இணைப்பால் வந்த பயன்தானே.
சிரித்து மயக்கி பிரிக்க வந்தால்,
செயலைக் கொஞ்சம் நினைப்பீரே.
விரித்து வைக்கும் வாக்கினாலே,
வேண்டும் இணைப்பை அணைப்பீரே!
ஆமென்.

ஒளி பரவட்டும்!

ஒளி பரவுக என்றே உரைத்து,

உலகப் பணியைத் தொடங்கினார் இறையே.
வளி பரவுதல் நாமும் தெரிந்து,
வறியோர்க்கறிவை வழங்குவோம் முறையே.
தெளிவடைவோர் கொஞ்சமே எனினும்,
தேடுவோருக் கில்லை குறைவே..
புளி எடுத்து மாவில் பிசைந்தால்,
புசிக்கும் அப்பம் ருசிக்கும் நிறைவே!
ஆமென்.
-கெர்சோம் செல்லையா.

இணைக்கும் ஆவியர்!

​நற்செய்தி மாலை: மாற்கு 3:23-25.

“ஆகவே அவர் அவர்களைத் தம்மிடம் வரவழைத்து அவர்களுக்கு உவமைகள் வாயிலாகக் கூறியது: ‘ சாத்தான் சாத்தானை எப்படி ஓட்ட முடியும்? தனக்கு எதிராகத் தானே பிளவுபடும் எந்த அரசும் நிலைத்து நிற்க முடியாது. தனக்கு எதிராகத் தானே பிளவுபடும் எந்த வீடும் நிலைத்து நிற்க முடியாது.”
நற்செய்தி மலர்:
பிணக்கம், பிரிவு, பிளவுகளெல்லாம்
பிசாசின் வேலை, புரிந்திடுவீரே.
இணக்கம், உறவு, சேர்த்தலெல்லாம்
இறையின் பணியாம், தெரிந்திடுவீரே.
மணக்கும் கிறித்தவ பணிகளிலெல்லாம்
மனிதரை இணைப்பவர் ஆவியராமே.
உணர்ந்தால் நன்மை; இதுவே உண்மை;
ஒற்றுமை வெறுப்பின் பாவியராமே!
ஆமென்.

பேய்களின் தலைவன்!

​பேய்களின் தலைவன்!
நற்செய்தி மலர்: மாற்கு 3:21-22.
“அவருடைய உறவினர் இதைக் கேள்விப்பட்டு, அவரைப் பிடித்துக்கொண்டுவரச் சென்றார்கள். ஏனெனில் அவர் மதிமயங்கி இருக்கிறார் என்று மக்கள் பேசிக் கொண்டனர். மேலும், எருசலேமிலிருந்து வந்திருந்த மறைநூல் அறிஞர், ‘ இவனைப் பெயல்செபூல் பிடித்திருக்கிறது ‘ என்றும் ‘ பேய்களின் தலைவனைக் கொண்டே இவன் பேய்களை ஓட்டுகிறான் ‘ என்றும் சொல்லிக் கொண்டிருந்தனர்.”
நற்செய்தி மலர்:
பேய்களின் தலைவன் என்றும் விளிப்பார்;
பித்தம் பிடித்தோன் என்றும் பழிப்பார்.
வாய்மொழியாலே வறுத்து எடுப்பார்.
வரம்பினைமீறி வன்முறை தொடுப்பார்.
நாய்களைப் போன்று இவரும் குரைப்பார்;
நன்றியை மட்டும் காட்ட மறுப்பார்.
தாயினும் சிறந்த தந்தையின் மகன்தான், 
தாங்கி நம்மை இவரிடம் மீட்பார்!
ஆமென்.

உண்பதே வாழ்க்கை என்போர் உலகில்…..

உண்ண மறந்த ஊழியர்!
நற்செய்தி மாலை: மாற்கு 3:20.
“அதன்பின் இயேசு வீட்டிற்குச் சென்றார். மீண்டும் மக்கள் கூட்டம் வந்து கூடியதால் அவர்கள் உணவு அருந்தவும் முடியவில்லை.”
நற்செய்தி மாலை:
உண்பதே வாழ்க்கை என்போர் உலகில்,
ஊணினை மறந்து உழைப்பவர் யார்?
விண்ணையும் துறந்து, வீதியில் வந்து,
விருந்து படைக்கும் மறைமகனார்.
பண்பிலார் நடுவில் வாழும் நம்மை,
பரிவாய் விருந்திற்கழைப்பவர் யார்?
எண்ணிட இயலா வகைகளில் ஈந்து,
என்றும் தந்திடும் இறைமகனார்!
ஆமென்.