இல்லார் பெயரைச் சொல்லி!

இல்லார் பெயரைச் சொல்லி!

நற்செய்தி: யோவான் 12: 4-6.

4. அப்பொழுது அவருடைய சீஷரில் ஒருவனும் அவரைக் காட்டிக்கொடுக்கப்போகிறவனுமாகிய சீமோனுடைய குமாரனான யூதாஸ்காரியோத்து:5. இந்தத் தைலத்தை முந்நூறு பணத்துக்கு விற்று, தரித்திரருக்குக் கொடாமல் போனதென்ன என்றான்.6. அவன் தரித்திரரைக்குறித்துக் கவலைப்பட்டு இப்படிச் சொல்லாமல், அவன் திருடனானபடியினாலும், பணப்பையை வைத்துக்கொண்டு அதிலே போடப்பட்டதைச் சுமக்கிறவனானபடியினாலும் இப்படிச் சொன்னான்.

நல்வாழ்வு:

இல்லார் அடைய வழங்குவதற்கு,

இங்கே பலரும் வாங்கினார்.

நல்லாராகக் காட்டிய பிறகு,

நன்கொடைமேல் தூங்கினார்.

எல்லாரையும் அறிந்த இறையோ,

இவரைத் திருத்த ஏங்கினார்.

பொல்லாராகத் தொடரின் அழிவார்;

புரிந்தால், இறையே தாங்குவார்!

ஆமென்.

-கெர்சோம் செல்லையா.

புனித வெள்ளிச் செய்தி!

புனித வெள்ளிச் செய்தி!

வீட்டின் வளமென எண்ண வைத்து,

விரும்பார் ஒழித்து, வெல்கிறார்.

நாட்டின் நலமென நம்ப வைத்து,

நல்லூர் அழிக்கச் சொல்கிறார்.

ஏட்டில் மட்டும் கற்றார் இவரும்,

இறையறிவின்றிச் செல்கிறார்.

கேட்டை விரும்பின் கெட்டு விழுவார்;

கிறித்துவை இன்றும் கொல்கிறார்!

– கெர்சோம் செல்லையா.

நாலடி நற்செய்தி!

நாலடி நற்செய்தி!
நல்வாழ்க்கை எது?

அன்பில் தொடங்கும் வாழ்க்கை,

அன்பாய் நடப்பதே  நன்மை. 

நன்மைப் புரியட்டும்  வாழ்க்கை – இது 

நல்லிறையின் தன்மை!


-கெர்சோம் செல்லையா.

நன்றி!

நன்றி!

இறைவாக்கு: யோவான் 12:1-3.  

1. பஸ்காபண்டிகை வர ஆறுநாளைக்குமுன்னே இயேசு தாம் மரணத்திலிருந்து எழுப்பின லாசரு இருந்த பெத்தானியாவுக்கு வந்தார்.

2. அங்கே அவருக்கு இராவிருந்து பண்ணினார்கள்; மார்த்தாள் பணிவிடை செய்தாள்; லாசருவும் அவருடனேகூடப் பந்தியிருந்தவர்களில் ஒருவனாயிருந்தான்.

3. அப்பொழுது மரியாள் விலையேறப்பெற்ற களங்கமில்லாத நளதம் என்னும் தைலத்தில் ஒரு இராத்தல் கொண்டுவந்து, அதை இயேசுவின் பாதங்களில் பூசி, தன் தலைமயிரால் அவருடைய பாதங்களைத் துடைத்தாள்; அந்த வீடு முழுவதும் தைலத்தின் பரிமளத்தினால் நிறைந்தது.  

இறைவாழ்வு:

விருந்து சமைத்து, படைப்பதும் நன்றி;
விரும்பி நளதம் உடைப்பதும் நன்றி. 
அருந்த தண்ணீர் கொடுப்பதும் நன்றி.
அன்புச் சொற்கள் தொடுப்பதும் நன்றி. 
திருந்துபவரில் தெரியட்டும் நன்றி. 
தீப்பந்தமாக எரியட்டும் நன்றி. 
புரிந்த நெஞ்சில் பெருகட்டும் நன்றி.
புரிய வைத்து, உருகட்டும் நன்றி!

ஆமென். 

-கெர்சோம் செல்லையா. 

இருவேறு வழியினர்

இரு வேறு எண்ணம்!

நற்செய்தி: யோவான் 11: 55-57.55.

யூதருடைய பஸ்காபண்டிகை சமீபமாயிருந்தது. அதற்கு முன்னே அநேகர் தங்களைச் சுத்திகரித்துக்கொள்ளும்பொருட்டு நாட்டிலிருந்து எருசலேமுக்குப் போனார்கள்.56. அங்கே அவர்கள் இயேசுவைத் தேடிக்கொண்டு தேவாலயத்தில் நிற்கையில், ஒருவரையொருவர் நோக்கி: உங்களுக்கு எப்படித் தோன்றுகிறது, அவர் பண்டிகைக்கு வரமாட்டாரோ என்று பேசிக்கொண்டார்கள்.57. பிரதான ஆசாரியரும் பரிசேயரும் அவரைப் பிடிக்கும்படி யோசித்து, அவர் இருக்கிற இடத்தை எவனாவது அறிந்திருந்தால், அதை அறிவிக்கவேண்டுமென்று கட்டளையிட்டிருந்தார்கள்.

நல்வாழ்வு:

இரு வழி முறைகள் கொண்டார்,

இறை அடிவாரம் கண்டார்.

ஒரு சிலர் தூய்மை என்றார்;

உள்ளில் பெற்று நின்றார்.

மறு கரை மனிதரும் வந்தார்;

மனதின் தீதைத் தந்தார்.

திருவருள் தேடின் கொள்வார்;

தேடாவிட்டால் வீழ்வார்!

ஆமென்.

-கெர்சோம் செல்லையா.

காட்டிலும் வாழ்ந்தார்!

காட்டிலும் வாழ்ந்தார்!

நற்செய்தி: யோவான் 11:54.

54. ஆகையால் இயேசு அதன்பின்பு வெளியரங்கமாய் யூதருக்குள்ளே சஞ்சரியாமல், அவ்விடம்விட்டு வனாந்தரத்துக்குச் சமீபமான இடமாகிய எப்பிராயீம் என்னப்பட்ட ஊருக்குப்போய், அங்கே தம்முடைய சீஷருடனேகூடத் தங்கியிருந்தார். 

நல்வாழ்வு: 

காட்டிலும் வாழ்ந்து ஊழியம் செய்தார்,
கடவுளின் மைந்தன் ஏசு. 
நாட்டிலே இன்று நடப்பது என்ன?
நற்பணிப் பெயரில் தூசு. 

கோட்டையும் மேட்டையும் கேட்டவர் யாரோ?

கொணர்ந்தவை யாவும் மாசு.
கேட்டினுள் நுழையும் முன்பே திருந்து;
கிறித்துவாய் எளிமை பேசு!

ஆமென். 

-கெர்சோம் செல்லையா. 

கொடியரின் திட்டம்!

கொடியரின் திட்டம்!

நற்செய்தி: யோவான் 11:51-53.

51. இதை அவன் சுயமாய்ச் சொல்லாமல், அந்த வருஷத்துப் பிரதான ஆசாரியனானபடியினாலே இயேசு யூதஜனங்களுக்காக மரிக்கப்போகிறாரென்றும்,

52. அந்த ஜனங்களுக்காகமாத்திரமல்ல, சிதறியிருக்கிற தேவனுடைய பிள்ளைகளை ஒன்றாகச் சேர்க்கிறதற்காகவும் மரிக்கப்போகிறாரென்றும், தீர்க்கதரிசனமாய்ச் சொன்னான்.

53. அந்நாள்முதல் அவரைக் கொலைசெய்யும்படிக்கு ஆலோசனைபண்ணினார்கள்.

நல்வழி: 

குருதி எடுக்கும் கொடுமைக்கென்று,
கோடி மக்கள் சேர்ந்தாலும்,
அருகு வந்து ஆண்டவர் நின்று,
அடியர் நம்மைக் காத்திடுவார்.
உறுதி கெடுக்கும் ஐயம் சென்று,
உள்ளுடம்பே சோர்ந்தாலும், 
திரிபு இல்லா தெய்வம் இன்று,
தீமை வராது பார்த்திடுவார்!

ஆமென். 

-கெர்சோம் செல்லையா. 

ஊருக்காக ஒருவர் இறத்தல்!

ஊருக்காக ஒருவரைக் கொல்லல்!
நற்செய்தி: யோவான் 11:49-50. 

49. அப்பொழுது அவர்களில் ஒருவனும் அந்த வருஷத்துப் பிரதான ஆசாரியனுமாகிய காய்பா என்பவன் அவர்களை நோக்கி: உங்களுக்கு ஒன்றுந் தெரியாது;

50. ஜனங்களெல்லாரும் கெட்டுப்போகாதபடிக்கு ஒரே மனுஷன் ஜனங்களுக்காக மரிப்பது நமக்கு நலமாயிருக்குமென்று நீங்கள் சிந்தியாமலிருக்கிறீர்கள் என்றான்.   

நல்வழி:

ஒருவரைக் கொன்று ஊரைக் காத்தல்,
உயர்ந்த அறிவு ஆகாது. 
தெருமுனை ஏழையும் வாழ வேண்டும்;
தெய்வ விருப்பு நோகாது. 
எருவெனச் செல்லும் இப்புவி வாழ்வில்,
எவரையும் இழக்கல் ஆகாது. 
அருவருப்பான கருத்துப் பருப்பும்,
அறத்தின் நீரில் வேகாது!
ஆமென். 

-கெர்சோம் செல்லையா. 

தலைவர்கள்!

தலைவர்கள்!
நற்செய்தி: யோவான் 11: 46-48. 

46. அவர்களில் சிலர் பரிசேயரிடத்தில் போய், இயேசு செய்தவைகளை அவர்களுக்கு அறிவித்தார்கள்.

47. அப்பொழுது பிரதான ஆசாரியரும் பரிசேயரும் ஆலோசனைச் சங்கத்தைக் கூடிவரச்செய்து: நாம் என்ன செய்கிறது? இந்த மனுஷன் அநேக அற்புதங்களைச் செய்கிறானே.

48. நாம் இவனை இப்படி விட்டுவிட்டால், எல்லாரும் இவனை விசுவாசிப்பார்கள்; அப்பொழுது ரோமர் வந்து நம்முடைய ஸ்தானத்தையும் ஜனத்தையும் அழித்துப்போடுவார்களே என்றார்கள்.

நல்வாழ்வு:

தங்கள் வளத்தை நாடிச் செல்வர்,
தலைவர் என்று வந்துவிடின்,
உங்கள் வளர்ச்சி எண்ண மாட்டார். 
ஊரறிந்த உண்மை.
திங்கள் ஞாயிறு பாடிச் சொல்வர்,
தெரியும் மெய்யே தந்துவிடின்,
எங்கும் மக்கள் வாழ்வடைவார்;
எண்ணுவோமா நன்மை?

ஆமென். 

கெர்சோம் செல்லையா.   

நான்கு நாளான உடல்!

நான்கு நாளான உடல்!

நற்செய்தி: யோவான் 11: 44-45.

44. அப்பொழுது, மரித்தவன் வெளியே வந்தான். அவன் கால்களும் கைகளும் பிரேதச் சீலைகளினால் கட்டப்பட்டிருந்தது, அவன் முகமும் சீலையால் சுற்றப்பட்டிருந்தது. இயேசு அவர்களை நோக்கி: இவனைக் கட்டவிழ்த்துவிடுங்கள் என்றார்.

45. அப்பொழுது மரியாளிடத்தில் வந்திருந்து, இயேசு செய்தவைகளைக் கண்டவர்களாகிய யூதர்களில் அநேகர் அவரிடத்தில் விசுவாசமுள்ளவர்களானார்கள்.

நல்வாழ்வு:

நான்கு நாளாய் அழுகிய உடலும்,
நன்றாய் உயிர் பெறுகிறது.
ஏங்குகின்ற உறவின் முன்பும்,
எழுந்து வந்து நிற்கிறது.
தாங்குகிறவர் இறையென அறியும்,
தகுந்த பற்றே தருகிறது.
தூங்கும் உடல்கள் எழும்பும் காலம்,
துரிதமாகவே வருகிறது!

ஆமென்.

-கெர்சோம் செல்லையா.