நன்றியாய் வாழ்தல்


​இல்லாமையிலும் நன்றி!

நற்செய்தி மாலை: மாற்கு 8:4-6.

“அதற்கு அவருடைய சீடர்கள், ‘ இப்பாலைநிலத்தில் இவர்களுக்குப் போதுமான உணவு அளிப்பது எப்படி? ‘ என்று கேட்டார்கள். அப்போது அவர் அவர்களைப் பார்த்து, ‘ உங்களிடம் எத்தனை அப்பங்கள் உள்ளன? ‘ என்று கேட்டார். அவர்கள் ‘ ஏழு ‘ என்றார்கள். தரையில் அமர மக்களுக்கு அவர் கட்டளையிட்டார்; பின்பு அந்த ஏழு அப்பங்களையும் எடுத்து, கடவுளுக்கு நன்றி செலுத்தி, பிட்டு, பரிமாறும்படி தம் சீடர்களிடம் கொடுக்க, அவர்களும் மக்களுக்கு அளித்தார்கள்.”
நற்செய்தி மலர்:
இல்லாமையிலும் நன்றி;
எடுத்துக் காட்டு இயேசு.
எல்லாமிருந்தும் குன்றி,
இழந்த நெஞ்சே பேசு!
நல்லோர் உயர்வின் ஏது
நன்றி நிறைந்த நெஞ்சு.
கல்லாதிருப்பது தீது;
கயமை அகலக் கெஞ்சு!
ஆமென்.

நலிந்தோர் உண்ணக் கொடுத்திடுவோம்


​நலிந்தோர் உண்ணக் கொடுத்திடுவோம்!

நற்செய்தி மாலை: மாற்கு 8:1-3.
“அந்நாள்களில் மீண்டும் பெருந்திரளான மக்கள் கூடியிருந்தார்கள். உண்பதற்கு அவர்களிடம் ஒன்றுமில்லை. இயேசு தம் சீடரை வரவழைத்து அவர்களிடம், ‘ நான் இம்மக்கள் கூட்டத்தின் மீது பரிவுகொள்கிறேன். ஏற்கெனவே மூன்று நாள்களாக இவர்கள் என்னுடன் இருக்கிறார்கள். உண்பதற்கும் இவர்களிடம் எதுவுமில்லை. நான் இவர்களைப் பட்டினியாக வீட்டிற்கு அனுப்பிவிட்டால் வழியில் தளர்ச்சி அடைவார்கள். இவர்களுள் சிலர் நெடுந்தொலையிலிருந்து வந்துள்ளனர் ‘ என்று கூறினார்.”

நற்செய்தி மலர்:
ஏட்டை விரித்துக் கதை விளம்பி,
இறைவன் வாக்கைத் தொடுக்கின்றோம்.
கேட்பவர் நிலையும் புரியாமல்,
கிடையாக்  காசை எடுக்கின்றோம்.
வேட்டை என்றே வந்துவிட்டோம்;
வேண்டாம், இனி இதைத் தடுத்திடுவோம்.
நாட்படப் பட்டினியாயிருக்கும்,
நலிந்தோர் உண்ணக் கொடுத்திடுவோம்!
ஆமென்.

நன்மையே வரட்டும்!

நன்மை வரட்டும்!

இம்மா பெரிய மாநிலம் ஆள,
எம்மா வலிய முதல்வர் வேண்டும்?
சும்மா அவர் இவர் என்றில்லாமல்,
அம்மாவேதான் ஆளவேண்டும்,
என்றார் நமது நாட்டின் மக்கள்;
நன்றாய் எடுத்த முடிவாகட்டும்.
வென்றார் வீழ்ந்தார் என்றில்லாமல்,
ஒன்றாய் உழைப்பீர், நன்மை வரட்டும்!
-கெர்சோம் செல்லையா.
Gershom Chelliah's photo.

அமுதாம் தேர்தல்!

நஞ்சு கலந்த அமுதே தேர்தல்;

நாமும் விரும்பி கையளித்தோம்.
கொஞ்சு மொழிக் கூற்றே அரசியல்;
கொள்ளை அடிக்க பை அளித்தோம்!
பிஞ்சு குழந்தையும் புரியும் அறிவை,
போட்டி நாளில் நாம் மறந்தோம்.
மிஞ்சுகின்ற தெதுவுமில்லை;
மானம் ஒன்றே, அதைத் துறந்தோம்!
-கெர்சோம் செல்லையா.

அன்பே ஆளும்!

​கக்கனுமில்லை, காமராசில்லை,
கள்வரே தேர்தலில் நிற்கின்றார்.
மக்களை நினையா மக்குகள் ஆள,
மாநில வாக்கைச் சேர்க்கின்றார்.
எக்குறையில்லா ஆட்சியைக் கேட்டு,
இறை வா என்று நான் விழுந்தேன்.
அக்கறையோடு அவரும் சொன்னார்;
அன்பே ஆளும்; நான் எழுந்தேன்!
-கெர்சோம் செல்லையா.

விளம்பரம் செய்யா இறைவன்!


​விளம்பரம் வேண்டாம்!

நற்செய்தி மாலை: மாற்கு :7:36-37.
“இதை எவருக்கும் சொல்ல வேண்டாமென்று அவர்களுக்கு அவர் கட்டளையிட்டார். அவரது கட்டளைக்கு நேர்மாறாக இன்னும் மிகுதியாய் அவர்கள் அதை அறிவித்து வந்தார்கள். அவர்கள் அளவு கடந்த வியப்பில் ஆழ்ந்தவர்களாய், ‘ இவர் எத்துணை நன்றாக யாவற்றையும் செய்து வருகிறார்! காதுகேளாதோர் கேட்கவும் பேச்சற்றோர் பேசவும் செய்கிறாரே! ‘ என்று பேசிக்கொண்டார்கள்.”
நற்செய்தி மலர்:
நன்றாய்ச் செய்யும் நமது தெய்வம் 
நடுவில் விளம்பரம் செய்வதில்லை!
என்றறியாதோர் எதையோ செய்தும்,
எவரும் இன்று உய்ததில்லை!
அன்றைய அடியார் செய்தது பார்ப்போம்;
அவரில் தன்னலம் தெரியவில்லை.
இன்றைய விளம்பர ஊழியர் பார்ப்போம்;
ஏன் வந்தார் எனப் புரியவில்லை!
ஆமென்.

வேண்டாம் கூச்சல்!


​வேண்டாம் கூச்சல்!

நற்செய்தி மாலை: மாற்கு 7:31-35.
“மீண்டும் இயேசு தீர் பகுதியை விட்டு, சீதோன் வழியாகச் சென்று தெக்கப்பொலி பகுதி நடுவே வந்து, கலிலேயக் கடலை அடைந்தார். காது கேளாதவரும் திக்கிப்பேசுபவருமான ஒருவரைச் சிலர் அவரிடம் கொண்டு வந்து, அவர்மீது கைவைத்துக் குணமாக்குமாறு அவரை வேண்டிக் கொண்டனர். இயேசு அவரைக் கூட்டத்திலிருந்து தனியே அழைத்துச் சென்று, தம் விரல்களை அவர் காதுகளில் இட்டு, உமிழ்நீரால் அவர் நாவைத் தொட்டார். பிறகு வானத்தை அண்ணாந்து பார்த்து, பெருமூச்சு விட்டு, அவரை நோக்கி ‘ எப்பத்தா ‘ அதாவது ‘ திறக்கப்படு ‘ என்றார். உடனே அவருடைய காதுகள் திறக்கப்பட்டன; நாவும் கட்டவிழ்ந்தது. அவர் தெளிவாகப் பேசினார்.”
நற்செய்தி மலர்:
ஏக்கப் பெருமூச்சுகூட 
இறையின் அடியை எட்டிடுதே.
ஏன் போடுகின்றீர் கூச்சல்?
இதனால் அடியும் கிட்டிடுதே!
ஊக்கத்துடன் ஊழியம் என்றால்,
உள்ளம் திருந்தி வந்திடுமே.
உதவாத ஓசை வேண்டாம்;
ஊரில் அமைதி தந்திடுமே!
ஆமென்

மாற்று இனத்தவரும் மனிதரே!


​நாய்களாய்ப் பார்த்த காலம் அது!

நற்செய்தி மாலை: மாற்கு 7:27-30.

“இயேசு அவரைப் பார்த்து, ‘ முதலில் பிள்ளைகள் வயிறார உண்ணட்டும். பிள்ளைகளுக்குரிய உணவை எடுத்து நாய்க் குட்டிகளுக்குப் போடுவது முறையல்ல ‘ என்றார். அதற்கு அப்பெண், ‘ ஆம் ஐயா, ஆனாலும் மேசையின் கீழிருக்கும் நாய்க்குட்டிகள் சிறு பிள்ளைகள் சிந்தும் சிறு துண்டுகளைத் தின்னுமே ‘ என்று பதிலளித்தார். அப்பொழுது இயேசு அவரிடம், ‘ நீர் இப்படிச் சொன்னதால் போகலாம்; பேய் உம்மகளை விட்டு நீங்கிற்று’ என்றார். அப்பெண் தம் வீடு திரும்பியதும் தம் பிள்ளை கட்டிலில் படுத்திருக்கிறதையும் பேய் ஓடிவிட்டதையும் கண்டார்.”
நற்செய்தி மலர்:
வேற்று இன மொழி மக்களை நாயாய்
வெறுத்தவர் வாழ்ந்த காலம் அது.
போற்றுதலுக்கு உகந்தவர் தாயாய்
பொறுமையில் உணர்த்திய காட்சி இது.
தோற்று போக வைக்கும் வெறியால்
தொல்லை அன்றி, நன்மை எது?
மாற்றுகின்ற மனிதர் வாழ்வார்;
மடமை ஒழிக்கச் சங்கூது!
ஆமென்.

தீய ஆவியால்…..


​நற்செய்தி மாலை: மாற்கு 7:24-26.

“இயேசு எழுந்து அங்கிருந்து புறப்பட்டுத் தீர் பகுதிக்குள் சென்றார். அங்கே அவர் ஒரு வீட்டிற்குள் போனார்; தாம் அங்கிருப்பது எவருக்கும் தெரியாதிருக்க வேண்டுமென்று விரும்பியும் அதை மறைக்க இயலவில்லை. உடனே பெண் ஒருவர் அவரைப் பற்றிக் கேள்விப்பட்டு உள்ளே வந்து, அவர் காலில் விழுந்தார். அவருடைய மகளைத் தீய ஆவி பிடித்திருந்தது. அவர் ஒரு கிரேக்கப்பெண்; சிரிய பெனிசிய இனத்தைச் சேர்ந்தவர். அவர் தம் மகளிடமிருந்து பேயை ஓட்டிவிடுமாறு அவரை வேண்டினார்.”
நற்செய்தி மலர்:
தீய ஆவியின் அலைக்கழிப்பாலே, 
தெய்வத்தின் பிள்ளையும் விழுந்திடலாம்.
தூய ஆவியர் தூக்கிப் பிடிப்பார்;
தீமையை வென்று எழுந்திடலாம்.
பாயும் ஆற்றின் சுழியில் அமிழ்த்த 
பகைவரும் நம்மை இழுத்திடலாம்.
ஆயும் அன்பா, ஆண்டவரைப் பார்;
அமிழாதிருக்கத் தொழுதிடலாம்!
ஆமென்.

அழுக்கை அகற்றும் வழி!

அழுக்கை அகற்ற வழி என்ன?
நற்செய்தி மாலை: மாற்கு 7:20-23.
“மேலும், ‘ மனிதருக்கு உள்ளேயிருந்து வருவதே அவர்களைத் தீட்டுப்படுத்தும். ஏனெனில் மனித உள்ளத்திலிருந்தே பரத்தைமை, களவு, கொலை, விபசாரம், பேராசை, தீச்செயல், வஞ்சகம், காமவெறி, பொறாமை, பழிப்புரை, செருக்கு, மதிகேடு ஆகியவற்றைச் செய்யத் தூண்டும் தீய எண்ணங்கள் வெளிவருகின்றன. தீயனவாகிய இவை அனைத்தும் உள்ளத்திலிருந்து வந்து மனிதரைத் தீட்டுப் படுத்துகின்றன ‘ என்றார்.”
நற்செய்தி மலர்:
எத்தனை எத்தனை நஞ்சுகளாம்?
அத்தனையும் நம் நெஞ்சினிலாம்!
இத்தனைத் தீமைகள் உள் வைத்து,
சித்தனாய் நடிப்பதில் மிஞ்சினோம் நாம்!
மொத்தமும் ஒழித்திட எது முறையாம்?
சுத்தனாம் இயேசுவின் புது மறையாம்!
பித்தளை பாத்திரக் களிம்பகலும்;
நித்தமும் துலக்குவோம், இது முறையாம்!
ஆமென்.

Gershom Chelliah's photo.