காவிரியை மறக்க வழியென்ன?
சம்மதிக்காததால் கொலையைச் செய்தார்;
நிம்மதியிழப்பால் தற்கொலை செய்தார்.
இம்மாதிரியில் கதைகள் புனைந்தார்;
நம் நாட்டவரோ காவிரி மறந்தார்!
-கெர்சோம் செல்லையா.

The Truth Will Make You Free
காவிரியை மறக்க வழியென்ன?
சம்மதிக்காததால் கொலையைச் செய்தார்;
நிம்மதியிழப்பால் தற்கொலை செய்தார்.
இம்மாதிரியில் கதைகள் புனைந்தார்;
நம் நாட்டவரோ காவிரி மறந்தார்!
-கெர்சோம் செல்லையா.

எதைத் துறந்தேன் இயேசுவிற்காக?
நற்செய்தி மாலை: மாற்கு 10:28-31.
“அப்போது பேதுரு அவரிடம், ‘பாரும், நாங்கள் எல்லாவற்றையும் விட்டுவிட்டு உம்மைப் பின்பற்றியவர்களாயிற்றே’ என்று சொன்னார். அதற்கு இயேசு, ‘ உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்; என் பொருட்டும் நற்செய்தியின் பொருட்டும் வீடுகளையோ, சகோதரர்களையோ, சகோதரிகளையோ, தாயையோ, தந்தையையோ, பிள்ளைகளையோ, நிலபுலன்களையோ விட்டுவிட்ட எவரும் இம்மையில் நூறு மடங்காக வீடுகளையும் சகோதரர்களையும் சகோதரிகளையும் தாயையும் நிலபுலன்களையும், இவற்றோடு கூட இன்னல்களையும் மறுமையில் நிலைவாழ்வையும் பெறாமல் போகார். முதன்மையானோர் பலர் கடைசி ஆவர்; கடைசியானோர் முதன்மை ஆவர் ‘ என்றார்.”
நற்செய்தி மலர்:
எதைத் துறந்தேன் உமக்காய் என்று
இன்று நானும் பார்க்கையிலே,
எதுவும் இல்லை என்றறிந்து,
என்னில் நானே வருந்துகிறேன்.
விதை விழுந்து மறைந்தால்தானே,
விளைச்சலாகும் என்றறிந்து,
விட்டுவிட்டேன் தன்னலத்தை,
விண்ணரசே திருந்துகிறேன்!
ஆமென்.

எப்படி மீட்படைவேன்?
நற்செய்தி மாலை: மாற்கு 10:26-27.
“சீடர்கள் மிகவும் வியப்பில் ஆழ்ந்தவர்களாய், ‘ பின் யார்தாம் மீட்புப்பெற முடியும்? ‘ என்று தங்களிடையே பேசிக்கொண்டார்கள். இயேசு அவர்களைக் கூர்ந்து நோக்கி, ‘ மனிதரால் இது இயலாது. ஆனால் கடவுளுக்கு அப்படியல்ல, கடவுளால் எல்லாம் இயலும் ‘ என்றார். ”
நற்செய்தி மலர்:
இனிய மீட்பைப் பெற்றுக்கொள்ள,
இயலாதவன் நான் விழுகின்றேன்.
புனிதம் என்னில் சிறிதும் இல்லை;
புரிந்து நெஞ்சில் அழுகின்றேன்.
மனிதர் மீள மண்ணில் வந்த
மா அருளாளனைத் தொழுகின்றேன்.
எனினும் என்ற ஐயமேயில்லை;
இயேசு மீட்பார் எழுகின்றேன்.
ஆமென்.

உடலைக் காட்டி ஊரை விழுங்கும்,
உயர்தரக் கூத்து ஆடிகளே,
கடலில் இறங்கும் மன்னரின் பண்பில்
கால் பங்காவது தேடுங்களே!

மக்களுடன் மக்களாய் எந்த ஒரு பாதுகாப்பும் இல்லாமல்,இன்று உலகமே திரும்பி பார்க்கும் ஒரு சாம்ராஜ்யத்தின் அதிபர் என்ற கர்வம் இல்லாமல்சாதாரணமாய் துபாய் அதிபர்.மாண்புமிகு.சேக் முகமது பின் ராசித் அல் மக்தும் அவர்கள்.கடலில் குளிக்கும் காட்சி

இறைவனுக்குக் கடன் கொடுப்போம்!
நற்செய்தி மாலை: மாற்கு 10:20-21.
“அவர் இயேசுவிடம், ‘ போதகரே, இவை அனைத்தையும் நான் என் இளமையிலிருந்தே கடைப்பிடித்து வந்துள்ளேன் ‘ என்று கூறினார். அப்போது இயேசு அன்பொழுக அவரைக் கூர்ந்து நோக்கி, ‘ உமக்கு இன்னும் ஒன்று குறைபடுகிறது. நீர் போய் உமக்கு உள்ளவற்றை விற்று ஏழைகளுக்குக் கொடும். அப்போது விண்ணகத்தில் நீர் செல்வராய் இருப்பீர். பின்பு வந்து என்னைப் பின்பற்றும் ‘ என்று அவரிடம் கூறினார்.”
நற்செய்தி மலர்:
கண்முன் காணும் எளியோர் வாழ,
கனிந்து உதவி புரிபவர் யார்?
விண்ணின் அரசர் இவருரு எடுத்து,
வேண்டி நிற்பதைத் தெரிபவர் யார்?
எண்ணும் காசை ஏழைக்கு ஈந்தால்,
இறைவன் கடனாய் எண்ணுகிறார்.
மண்ணில் செய்யும் நன்மை கண்டு,
விண் வீட்டறையைப் பண்ணுகிறார்!
ஆமென்.

நீர் காண்பதுபோல் நான் காண ….
ஊர் முழுதும் சொத்தும் கேளேன்;
உணவு, உடை, வீடும் கேளேன்.
பார் புகழும் பேரும் கேளேன்;
பரிசு, பொருள் என்றும் கேளேன்.
நீர் காணும் காட்சியைத்தான்,
நான் காண விரும்புகின்றேன்.
நேர்மையாய் பார்க்கும் இறையே,
நெஞ்சில் உம் ஆவி கேட்டேன்.
-கெர்சோம் செல்லையா.

நிலை வாழ்வா? தண்டனையா?
நற்செய்தி மாலை: மாற்கு 10:17-19.
“இயேசு புறப்பட்டுச் சென்று கொண்டிருந்தபோது வழியில் ஒருவர் அவரிடம் ஓடிவந்து முழந்தாள்படியிட்டு, ‘ நல்ல போதகரே, நிலை வாழ்வை உரிமையாக்கிக்கொள்ள நான் என்ன செய்ய வேண்டும்? ‘ என்று அவரைக் கேட்டார். அதற்கு இயேசு அவரிடம், ‘ நான் நல்லவன் என ஏன் சொல்கிறீர்? கடவுள் ஒருவரைத் தவிர நல்லவர் எவருமில்லையே. உமக்குக் கட்டளைகள் தெரியும் அல்லவா? ″ கொலைசெய்யாதே; விபசாரம் செய்யாதே; களவு செய்யாதே; பொய்ச்சான்று சொல்லாதே; வஞ்சித்துப் பறிக்காதே; உன் தாய் தந்தையை மதித்து நட ″ ‘ என்றார்.”
நற்செய்தி மலர்:
கொலை, கொள்ளை, பொய்ச் சான்று,
கொடுமை, வஞ்சம் தவறென்று,
மலைச் சட்டம் எச்சரித்தும்,
மனிதர் மீறி நடக்கின்றார்.
குலை நடுங்கும் கொடுமைகளைக்
குறித்துக் கணக்கு கொடுக்கையிலே,
நிலை வாழ்வா, தண்டனையா?
நீவிர் சொல்வீர், எது பெறுவார்?
ஆமென்.

அருமையான உணவு!
அவியல், கூட்டு, பொரியல் என்று,
அருமை உணவு சமைக்கின்றோம்.
துவையலில்கூட பல வகை செய்து,
தின்னும் பட்டியல் அமைக்கின்றோம்
எவைகள் நம்மில் இல்லையென்று,
இழந்த பண்பைப் பார்த்தோமா?
விவிலியம் கற்று, விளக்கம் பெற்று,
விண்ணின் தன்மை சேர்ப்போமா?
– கெர்சோம் செல்லையா.

அன்புச் சினத்தில் தீங்கில்லை.
நற்செய்தி மாலை: மாற்கு 10:13-16.
“சிறு பிள்ளைகளை இயேசு தொட வேண்டுமென்று அவர்களைச் சிலர் அவரிடம் கொண்டுவந்தனர். சீடரோ அவர்களை அதட்டினர். இயேசு இதைக் கண்டு, கோபம் கொண்டு, ‘ சிறு பிள்ளைகளை என்னிடம் வர விடுங்கள். அவர்களைத் தடுக்காதீர்கள். ஏனெனில் இறையாட்சி இத்தகையோருக்கே உரியது. இறையாட்சியைச் சிறு பிள்ளையைப்போல் ஏற்றுக் கொள்ளாதோர் அதற்கு உட்படமாட்டார் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்’ என்றார். பிறகு அவர் அவர்களை அரவணைத்து, தம் கைகளை அவர்கள்மீது வைத்து ஆசி வழங்கினார்.”
நற்செய்தி மலர்:
இயேசுவின் சினத்தைப் பாருங்கள்;
எதற்கென நினைவு கூருங்கள்.
பேசும் இறையிலும் சினம் உண்டு.
புரிவீர் நீங்கள் இது கண்டு.
ஆசு நீக்கும் அருள் நெஞ்சின்
அன்புச் சினத்தில் தீங்கில்லை.
ஏசும் மனிதர் நெஞ்சத்தில்
இருக்கும் வெறுப்பும் ஈங்கில்லை!
ஆமென்.

