தெற்கிலிருந்து வடக்கே சென்று, தெய்வ உரை மொழிந்தவர் அற்பர்களாலே ஆயன் என்று அருவருக்கப்படுகிறார். நற்குலம் பிறந்த ஆமொசு அன்று நல்கிய நூலால் தெளிந்தவர், நேர்மை ஆற்றில் நீந்துவர் இன்று; நினைப்பூட்டப்படுகிறார்! (ஆமொசு)
எதிர் வரும் இயற்கை அழிவது கண்டு, யோயெல் இறைவாக்குரைக்கிறார். புதிர் என்றவைகள் இருந்து கொண்டு, புரிந்ததை யார்தான் நினைக்கிறார்? அதி விரைவாக ஆவியர் வழங்கும், அருட் கொடைகளும் உரைக்கிறார். மதி நிறை மக்கள் மனமும் துலங்கும்; மாயிறை நம்மை நினைக்கிறார்! (யோவேல் 2:28-29).
துணையாய் வந்தவள் தூய்மையிழந்தும், துரத்த மறுக்கும் கணவனாய், மனையாள் ஒத்த இசரயெல்லரை, மன்னிக்கிறார் ஓசியா. இணையாள் இணைப்பு நிலைப்பு என்று, இன்று கூட நினைப்பூட்டி, அணையா விளக்கு ஏற்றுகின்றார், ஆண்டவராகிய மேசியா! (ஓசேயா 3:19-20).
பன்னிரு அடியர் ஆவியில் பொங்கி, பற்பல நாளில் வாக்குரைத்தார். அன்னிறை வாக்கை யூதரும் வாங்கி, அக்கரையற்றே அவ மதித்தார். பின்னொரு நாளில் மீட்பர் பிறப்பார்; பேசியபடியே எழுதி வைத்தார். சொன்னவர் மறவார் சொல்லும் துறவார்; சொற்படி நிகழக் காத்திருந்தார்!
ஏசேயா எரேமியா எசேக்கியெல், இவர்கள் பின்னால் தானியெல், மேசியா இயேசுவைக் காட்டுதல் மெய்யென அறிந்தார் ஆய்தலில். ஓசையாய் உரைக்கும் வாக்கினில், ஒளிரும் இறையின் தீர்ப்புகள், நேசியார் உண்டோ நாட்டினில், நேர்மை மீது சாய்கையில்?
இறைத் தேன்….. இறைத்தேன்! இறைத்தேன் இன் சொல் கேட்பவருக்கு, எளியனும் கொஞ்சம் இறைத்தேன். நிறைத்தேன் நெடு நாள் இனிமை வாக்கு; நெஞ்சம் மகிழ நிறைத்தேன். கரைத்தேன் எந்தன் தீவினை அழுக்கு; கடவுள் அருளில் கரைத்தேன். உரைத்தேன் கேட்கும் ஒரு சிலருக்கு; உண்மை, அன்பை உரைத்தேன்! -கெர்சோம் செல்லையா.
ஒவ்வொரு வரியும் உண்மை என்று, உரைக்கும் நூலே தானியெல். அவ்வரு நூலை எழுதிய அவர்க்கு, அளித்தார் பரிசு அரிக் குகை. எவ்விதம் இவரால் இப்படி எழுத இயன்றது என்று பார்க்கையில், கவ்விடும் தெய்வ ஆவி அறிவு; களைவோம் நம் வெறிப் பகை! (தானியேல்)
விழுகிற காட்சியை, முன்னர் கண்டு, விழாதிருக்க எச்சரித்தார். எழுகிற காட்சியைப் பின்னர் கண்டு எசேக்கி யெல் உச்சரித்தார். தொழுகிற அடியர் துவளாதிருந்து, தூய அறிவை வேண்டிடுவார். அழுகிற எலும்புகள் ஆவியிலெலுழுந்து அந்நாள் அரசாண்டிடுவார்! (எசேக்கியேல்)
கேடு வருவது கண்டுரைத்தும், கெடுவார் அதை ஏற்கவில்லை. ஏடு எழுதி எரேமியா தந்தும், யூதேயாவும் பார்க்கவில்லை. நாடு அழியும் நிலைக்கு வந்தும், நம்பாதாரை வெறுத்ததில்லை. தேடுகின்ற இறை வாக்கினரும், திருக்கண்ணீர் நிறுத்தவில்லை! (எரேமியா & புலம்பல்)
ஒருவரை ஒருவர் வெறுக்கும் குடியை, ஓருள அன்பினில் சேர்ப்பதற்கு, பெரு நூலெழுதி இறை வாக்குரைத்த, பெரியரில் ஐசையா முதல்வர். வருமெதிர் கால நற்செய்தி வடிவை, வழங்கும் ஐசையாவின் எழுத்து, திருடரை மீட்கும் இறைவாக்காகும்; திருந்தின் இறை புதல்வர்! (ஏசாயா)