கோடி அருள்!

கோடி அருள்!

சினத்தால் அழிந்தோர் சில கோடி.

சிந்தியாதழிவோர் பல கோடி.

நினைத்தால் அழிக்கும் வெறி தேடி,

நீக்கார் விழுவார் வலு வாடி.

பிணத்தின் அமைதி போல் நாடி,

பேசாதிருப்பின் நல் நாடி.

மனத்தால் நாளும் இறை கூடி,

மன்னிப்பதாலே அருள் கோடி!

-கெர்சோம் செல்லையா.

சிதறடிக்கப்பட்டோர்!

சிதறடிக்கப்பட்டோர் சேர்க்கப்படுவார்!
நற்செய்தி: யோவான் 7:35.
35. அப்பொழுது யூதர்கள்: இவரை நாம் காணாதபடிக்கு எங்கே போவார், கிரேக்கருக்குள்ளே சிதறியிருக்கிறவர்களிடத்திற்குப் போய், கிரேக்கருக்கு உபதேசம்பண்ணுவாரோ?


நல்வழி:

சிதறிக் கிடந்த யூதரைப் போல்,

சிறைப்பட்டிருந்த என் இனமும்,

உதறிக் கொண்டு எழுவதற்கு,

உதவிகள் செய்தது யாராகும்?

கதறிக் கொண்டு முறையிட்டும்,

கண்ணீர் துடைக்க வரார் கண்டு, 

பதறித் துடித்து இறை தந்தார்

;பாடினேன், இயேசு பேராகும்!


ஆமென். 


-கெர்சோம் செல்லையா. 

திருவட்டாறு!

திருவட்டாறு நோக்கி….


பிறந்த ஊரைப் பிரிந்த நெஞ்சம்,

பித்தாய் மாறாதிருப்பதற்கு,

திறந்த கையுள் அணைத்துத் தஞ்சம் 

தந்த சென்னை ஏதாகும்.

மறந்த  என்னை புதுக்கக் கெஞ்சும்,

மனதை மகிழ்விப்பதற்கு,

பறந்து நானும் ஊரைக் கொஞ்சம், 

பாரேன் எனில்  தீதாகும்!


-கெர்சோம் செல்லையா.  

யோவான் 7:32-34.

முறுமுறுப்பார்!


நற்செய்தி: யோவான் 7:32-34. 

நல்வழி:  

அறவழி கூறும் இடங்களில் இன்று,

அறியார் பலரும்  முறுமுறுப்பார்.

திறமிகு மாந்தர் அவரேயென்று, 

தெய்வ வாக்கும்  மறுதலிப்பார். 

குறை அறிவாரோ உணர்ந்து நின்று,

கிறித்துவை நோக்கி வேண்டிடுவார்.

நிறை வாழ்வளிக்கும் தெய்வம் ஒன்று, 


நேர்மையில் நடத்தி ஆண்டிடுவார்!


ஆமென். 


-கெர்சோம் செல்லையா. 

செப்படி வித்தை!

செப்படி வித்தை!
நற்செய்தி: யோவான் 7: 31.

நல்வழி:


செப்படி வித்தை செய்வோர் என்றால்,

செல்வார் திரண்டு பெருங்கூட்டம்.

எப்படி வாழ்தல் நலமென்றுரைத்தால்,

இவர்கள் கலைவார் குரங்காட்டம். 

இப்படி நம்மவர் இருப்பதனால்தான்,

இல்லை அவையில் இறையூட்டம். 

சொற்படி வாழ ஒப்புக்கொடுப்போம்.

சிலுவைப் பாதையே, நம் ஓட்டம்!


ஆமென்.


-கெர்சோம் செல்லையா. 

யோவான் 7:30.

வேளை வரவில்லை!

நல்வழி:


எத்தனையோ பேர் முயன்றிருந்தாலும்,

இயேசுவின் வேளை வரவில்லை. 

அத்தனைத் துன்பம் அடைந்திருந்தாலும்,

ஆண்டவரும் பிடி தரவில்லை. 

பித்தராய் நம்மைப் பார்த்திருந்தாலும்,

பிசாசின் வேலை எளிதில்லை. 

இத்தனைக் கூறியும் ஏனினி அச்சம்?

இயேசு தருகிறார் தெளிவுநிலை!


ஆமென். 


-கெர்சோம் செல்லையா.

இயேசுவும் நாமும்!

இயேசுவும் நாமும்!
நற்செய்தி: யோவான் 7:27-29.

நல்வழி:


தந்தை மகனாய் இயேசு வந்தார்;

தன் விருப்பில் வரவில்லை. 

வந்தார் தன்னை முழுதும் தந்தார். 

வைதும், தீது தரவில்லை. 

விந்தை உறவாய் நாமும் வந்தோம்;

விண் விருப்பில் வரவு இல்லை.

எந்தக் கணக்கில் நன்மை தந்தோம்?


எண்ண நமக்கும் தரவு இல்லை!


ஆமென்.


-கெர்சோம் செல்லையா.

கேட்போம் கிறித்துவின் அறிவு!

கேட்போம் கிறித்துவின் அறிவு!

நற்செய்தி: யோவான்: 7:25-26.25.

அப்பொழுது எருசலேம் நகரத்தாரில் சிலர்: இவனையல்லவா கொலைசெய்யத்தேடுகிறார்கள்?26. இதோ, இவன் தாராளமாய்ப் பேசுகிறானே, ஒருவரும் இவனுக்கு ஒன்றும் சொல்லுகிறதில்லையே, மெய்யாய் இவன் கிறிஸ்துதான் என்று அதிகாரிகள் நிச்சயமாக அறிந்திருக்கிறார்களோ?

நல்வழி:

கேட்டவர் வியக்கப் பதில் உரைக்கும்,

கிறித்துவின் அறிவு கேட்டிடுவோம்.

நாட்டவர் கொண்ட ஐயம் போக்கும்,

நல்லுரை கூறவும் கேட்டிடுவோம்.

ஏட்டினில் கற்கும் அறிவுகள் யாவும்,

யாவரும் விளங்கக் கேட்டிடுவோம்.

பாட்டினைப் பாடிச் செல்லா வண்ணம்,

பண்பு வளரவும் கேட்டிடுவோம்!

ஆமென்.

-கெர்சோம் செல்லையா.

யோவான் 7:21-24.

நல்வழி!

முகத்தைப் பார்த்து முடிவைக் கூறும், 

மூடர் பழக்கம் முடித்திடுவோம். 

நகத்தைக் காட்டி விரல் என்றெழுதும்,

நடைமுறையினையும் பொடித்திடுவோம்.

இகத்தில் இல்லா நேர்மை அருளும், 

ஈசன் வாக்கு படித்திடுவோம்.

அகத்தின் அழுக்கு, கரைதல் காணும்; 

ஆண்டவரை நாம் பிடித்திடுவோம்.  

ஆமென். 


-கெர்சோம் செல்லையா.     

வாய் மூடல் நன்று!

  1. யோவான் 7:20.

நல்வழி:


நம்மைத் திட்டும் கூட்டம் முன்பு,

நம்பதில் என்ன சொல்கிறோம்? 

எம்மால் தாங்க இயலாதென்று, 

இரட்டிப்பாகச் சொல்கிறோம்.

இம்மாதிரியில் வீழ்ச்சி கண்டு.


இனிமேல் என்ன சொல்கிறோம்?

தம்வாய் மூடல் மேன்மையென்று 

தாழ்வில் உயரச் சொல்கிறோம்!


ஆமென்.


-கெர்சோம் செல்லையா.