திரும்பி வருவான் தன்  மகனென்று,

தேடும் தந்தை காத்திருந்தார்.

இருந்த வீட்டில் நிலை கொள்ளாது,

ஏங்கி எங்கும் பார்த்திருந்தார்.

வருந்தி வருகிற மகனை அணைக்க,

வயது முதிர்விலும் ஓடுகிறார்.

தெரிந்து கொள்வீர் இறையின் அன்பை;

தெய்வம் நம்மைத் தேடுகிறார்!

(லூக்கா 15:11-32).

இரு மைந்தரும் ஒரு தந்தையும் 

இணைந்து வாழ்கையில் இன்பம்.

சிறு மைந்தனோ சொத்தைப் பிரித்து,

சென்று விட்டதால் துன்பம்.

குறு மதியால் அனைத்தையும் இழக்க,

குடல் சுருங்கினான் இளையான்.

வறுமையில்தான் அறிவு பிறக்கும்;

வருத்தும் தீமை களைவான்!

(லூக்கா 15;11-32)

இழப்பின் வலியும் மீட்பின் ஒலியும்,

இயம்பும்  ஆட்டின் உவமை,

உழைக்கும் ஆயர் ஒவ்வொருவருக்கும்,

உணர்த்தப்படுகிற உண்மை.

விளக்கைக் கொளுத்தி வீட்டில் தேடும், 

விழுந்த காசின் உவமை, 

அழைப்பைப் பெற்ற ஊழியர் களத்தில்,

ஆய வேண்டிய உண்மை!

(லூக்கா 15:1-10)

இன்னும் பற்பல உவமைகள் கண்டேன்.

இறையரசு ஒரு முத்தெனக் கண்டேன்.

முன்னோர் காத்த புதையலைக் கண்டேன்.

முழுதும் கொணரும் வலையும் கண்டேன்.

என்னுள் வளர்ந்திடும் புளியும் கண்டேன்.

எழுகிற மா மரம் வெளியிலும் கண்டேன்.

சொன்னால் புரிகிற எளிமையும் கண்டேன்.

சொல்லும் இயேசுவில் தெளிவே கண்டேன்!

(மத்தேயு 13: 1-52)