யார் விளித்தாலும் இயேசு சென்று,

இறையிடம் திரும்ப அழைக்கிறார்.

தார் மணி மாலை தற்புகழ் என்று,

தம்பட்டமின்றி உழைக்கிறார்.

பேர் புகழ் பெருமை ஈட்ட இன்று,

பிழைப்போர் திருந்த அழைக்கிறார்.

போர் முகில் அன்று, பொறுமை நன்று;

புரிந்தோர் நன்கு உழைக்கிறார்!

(மத்தேயு 10 & 11). 

கரூர்!

கண்ணீர் வடிக்கும் கரூர் துயரம்!

தனி மனித வழிபாட்டை, இழுக்கென்றுரைப்பாய்;
இனியாவது, கூட்டங்களை ஒழுங்கு படுத்துவாய்.
பிணியாகி விட்டனரே, பிழைக்கும் அரசியலார்.
அணி அன்று, அறம் நின்று, தழைக்க வழி பார்!

-கெர்சோம் செல்லையா.

ஈராறு அடியரும் எழுபது தொண்டரும்,

ஏழை, செல்வரில் ஏற்ற பெண்டிரும்,

ஊராகத் திரிந்து ஒட்டிக் கொண்டனர்;

ஓய்வும் இன்றி ஊழியம் கண்டனர்.

சீராகத் திருப்பணி செய்ய விரும்புவர்,

செவ்வழி காண நெஞ்சிலரும்புவர்,

நேராக இயேசுவைப் பின் தொடரும்;

நேர்மையாலே உளம் படரும்!

( லூக்கா 9 & 10)

பல் சொல்லும் பாடம்!

என் பல்லெல்லாம் ஆடுவதேன்?

இதனால் அழுக்கு கூடுவதேன்?

முன் நிற்போர்க்கு நாறுவதேன்?

முகரா நான் எதிர் கூறுவதேன்?

தன் நிலை அறியா மனிதர் நாம்;

தவறிலை என்கிற புனிதர் நாம்.

இந்நிலை அகலப் பணிதல் தாம்,  

இறைவனிடத்து இணைவதாம்!

-கெர்சோம் செல்லையா. 

75 வருகிறது!

எழுபத்து நான்கு செல்கிறது!

எழுபத்து ஐந்து வருகிறது!!

இத்தனை ஆண்டுகள் எளியன் இருப்பது,

இறையருளன்றி வேறில்லை.

நித்தமும் அவரை நினைப்பதே யன்றி,

நெஞ்சுக்கு வேறு பேறில்லை.

பத்திரமாகக் காப்பவர் உரைக்கும்,

பணியும் எனக்கு நூறில்லை.

சித்தம் ஒன்றே, செயலில் அன்பே.

செய்யிறை வற்றும் ஆறில்லை!

-கெர்சோம் செல்லையா.

பன்னிரு அடியரும் பார்க்க வறியவர்;

பயிற்சி பட்டம் பெறாதுமிருந்தவர்.

அந்நில மக்களில்  குறைந்த அறிவர்;

ஆனால் இறைக்கு அருமையானவர். 

நன்னிலச் செலவிற்கு மீன் பிடிப்பவர்;

நம்பி வந்து தம்மைக் கொடுத்தவர்.

என்னருள் இயேசு செயலைப் பார்ப்பவர்,

இவரைச் சொல்வர், பெருமையானவர்!

(மத்தேயு 10)

எந்தப் பணியும் தொடர விரும்பின்,

இருக்க வேண்டும் அடியார்கள்.

அந்தப்படியே ஊழியம் புரிந்தால், 

ஆற்றல் பெருக, மடியார்கள்.

தந்தைப் பணிக்கு இயேசு தெரிந்த,

தன்னலம் அற்ற அடியார்கள்,

சொந்தத் தொழிலைக் கை விட்டாலும்,

துயர் அழைப்பில் மடியார்கள்!

(மத்தேயு 10)

திருமறை சொல்லா இன்னொரு பிரிவு,

தேடிப் பார்க்க வரலாறுரைக்கும்.

பெருமைகள் துறந்து நோன்புமிருந்து,

பெயரில்  எசேனி என்றுமிருக்கும்.

மறுமுறை உயிர்ப்பு நம்பாப் பிரிவு,

மறைந்து ஒடுங்கி தனை மறக்கும்.

ஒருமுறை இறக்க, இருமுறை பிறப்பு;

இறைமகன் சொல்லே சிறக்கும்!

வெறித்தனம் கொண்டது இன்னொரு கூட்டம்;

வீணாய்ப் போனது செலோத்தே கூட்டம்.

பறித்திடும் உரிமை மீட்பதற்கென்று,

பட்டயம் எடுத்து வீழ்ந்த கூட்டம். 

நரித்தனம் கொண்டு ஆடிடும் ஆட்டம், 

நல் முடிவடைய சொல் ஓர் ஆட்டம்?

விரித்திடும் தீமை அழிப்பதற்கென்று, 

விண் அளிக்கும் அன்பின் ஆட்டம்!

நல்ல கல்வி கற்றிருந்தாலும்,

நம்ப மறுக்கும் ஒரு கூட்டம்.

இல்லை உயிர்ப்பு, தூதர் என்று,

எதிர்க்கும் இந்த சிறு கூட்டம்.

வல்ல எதிரி உற்றிருந்தாலும்,

வாழ்த்தி நிற்கும் இக்கூட்டம்.

சல்லடையாக வடித்திழக்கும்,

சதுசேயரே அக்கூட்டம்!