அடித்துத் துப்பி அவமதிப்பார்…
நற்செய்தி: மத்தேயு 27:27-31.
படைவீரர்கள் இயேசுவை ஏளனம் செய்தல்:
“ஆளுநனின் படைவீரர் இயேசுவை ஆளுநன் மாளிகைக்குக் கூட்டிச் சென்று அங்கிருந்த படைப்பிரிவினர் அனைவரையும் அவர்முன் ஒன்று கூட்டினர்; அவருடைய ஆடைகளை உரிந்து, கருஞ்சிவப்பு நிறமுள்ள தளர் அங்கியை அவருக்கு அணிவித்தனர். அவர்கள் ஒரு முள்முடி பின்னி அவரது தலையின்மேல் வைத்து, அவருடைய வலக்கையில் ஒரு கோலைக் கொடுத்து அவர்முன் முழந்தாள்படியிட்டு, ‘ யூதரின் அரசரே, வாழ்க! ‘ என்று சொல்லி ஏளனம் செய்தனர்; …
பாவமும் வேண்டாம், பழியும் வேண்டாம்!
நற்செய்தி: மத்தேயு 27:25-26.
“அதற்கு மக்கள் அனைவரும், ‘ இவனுடைய இரத்தப்பழி எங்கள்மேலும் எங்கள் பிள்ளைகள் மேலும் விழட்டும் ‘ என்று பதில் கூறினர். அப்போது அவர் பரபாவை அவர்கள் விருப்பத்திற்கிணங்க விடுதலை செய்தான்; இயேசுவைக் கசையால் அடித்துச் சிலுவையில் அறையுமாறு ஒப்புவித்தான்.”
நல்வாழ்வு:
இப்படிச் சொல்லி பழியை ஏற்ற
தப்பித மக்களை நீரறிவீர்.
முப்பது ஆண்டுகள் முடிந்த பின்னர்,
எப்படி அழிந்தார் எனத்தெரிவீர்.
அற்புதமாக நமைத் திருத்த
பொற்பரன் காலடி வந்திடுவீர்.
சொற்படி தீர்ப்பு வழங்கும் இறையுள்
நிற்பவராக வாழ்ந்திடுவீர்!
ஆமென்.
பழிக்கு அஞ்சிடுவார்….
பழிக்கு அஞ்சிடுவார்….
நற்செய்தி: மத்தேயு 27:23-24.
“அதற்கு அவன், ‘ இவன் செய்த குற்றம் என்ன? ‘ என்று கேட்டான். அவர்களோ, ‘ சிலுவையில் அறையும் ‘ என்று இன்னும் உரக்கக் கத்தினார்கள். பிலாத்து தன் முயற்சியால் பயனேதும் ஏற்படவில்லை, மாறாகக் கலகமே உருவாகிறது என்று கண்டு, கூட்டத்தினரின் முன்னிலையில் தண்ணீரை எடுத்து, ‘ இவனது இரத்தப்பழியில் எனக்குப் பங்கில்லை. நீங்களே பார்த்துக்கொள்ளுங்கள் ‘ என்று கூறித் தன் கைகளைக் கழுவினான்.”
நல்வாழ்வு;
பழிக்கு அஞ்சிடுவார்,
பாவத்திலோ மிஞ்சிடுவார்.
வழிக்கு வரமாட்டார்;
வாழ்வையும் பெறமாட்டார்.
அழிக்கும் பண்புடையார்
ஆளுநராய் இருந்தாலும்,
செழிக்கும் நிலை விடுவார்;
செய்தவற்றில் வீழ்ந்திடுவார்!
ஆமென்.
மற்றவர் விருப்பே தீர்ப்பு!
மற்றவர் விருப்பைத் தீர்ப்பென்று…
நல்வாக்கு: மத்தேயு 27:20-22.
“ஆனால் தலைமைக் குருக்களும் மூப்பர்களும் பரபாவை விடுதலை செய்யக் கேட்கவும் இயேசுவைத் தீர்த்துக்கட்டவும் கூட்டத்தினரைத் தூண்டி விட்டார்கள். ஆளுநன் அவர்களைப் பார்த்து, ‘ இவ்விருவரில் யாரை விடுதலை செய்யவேண்டும்? உங்கள் விருப்பம் என்ன? ‘ எனக் கேட்டான். அதற்கு அவர்கள் ‘ பரபாவை ‘ என்றார்கள். பிலாத்து அவர்களிடம், ‘ அப்படியானால் மெசியா என்னும் இயேசுவை நான் என்ன செய்ய வேண்டும்? ‘ என்று கேட்டான். அனைவரும், ‘ சிலுவையில் அறையும் ‘ என்று பதிலளித்தனர்.”
நல்வாழ்வு:
குற்றம் புரிந்தவராயென்று,
குறுமதியாளர் பார்ப்பதில்லை.
மற்றவர் விருப்பைத் தீர்ப்பென்று,
மதித்துக் கூறத் தயங்கவில்லை.
கற்றவர் என்று கதைத்தாலும்,
கண்ணில் நேர்மை காணவில்லை.
சுற்றும் உலகே இப்படித்தான்;
சொல்லி அழுவதால் பயனில்லை!
ஆமென்.
அழகோ அழகு!
இறைவனின் படைப்பு பேரழகு;
இதனை வளர்க்க நீ பழகு!
அறைக்கு வெளியே வந்தமர்ந்து,
அதனில் மகிழ நீ முந்து!
-கெர்சோம் செல்லையா.
கனவிலும் உண்மை வெளிப்படுமே!
கனவிலும் உண்மை வெளிப்படுமே!
இறைவாக்கு: மத்தேயு 27:19.
“பிலாத்து நடுவர் இருக்கைமீது அமர்த்திருந்தபொழுது அவனுடைய மனைவி அவனிடம் ஆளனுப்பி, ‘ அந்த நேர்மையாளரின் வழக்கில் நீர் தலையிட வேண்டாம். ஏனெனில் அவர்பொருட்டு இன்று கனவில் மிகவும் துன்புற்றேன் ‘ என்று கூறினார்.”
இறைவாழ்வு:
கனவிலும் உண்மை வெளிப்படுதே;
கடவுளின் பிள்ளையர் கணித்திடவே.
இன, மொழிப் பிரிவுகள் இல்லாமல்
யாவரும் புரிந்திட அருள் வருதே.
நினைவினில் இதனை உணர்பவர் யார்?
நேர்மையைத் தூக்கிப் பிடிப்பவர் யார்?
வினை பொறுத்தருளும் விண்ணரசின்
விருப்பங்கூட வேண்டும் பார்!
ஆமென்.
யாரை விடுவிப்பீர்?
யாரை விடுவிப்பீர்?
அருள்வாக்கு: மத்தேயு 27:17-18.
“மக்கள் ஒன்றுகூடி வந்திருந்தபோது பிலாத்து அவர்களிடம், ‘நான் யாரை விடுதலை செய்யவேண்டும் என விரும்புகிறீர்கள்? பரபாவையா? அல்லது மெசியா என்னும் இயேசுவையா?’ என்று கேட்டான். ஏனெனில் அவர்கள் பொறாமையால்தான் இயேசுவைத் தன்னிடம் ஒப்புவித்திருந்தார்கள் என்பது அவனுக்குத் தெரியும்.”
திருவாழ்வு:
இருவரில் ஒருவர் விடுதலை என்றால்,
எவரை விடுதலை செய்வாரோ?
ஒருவர் செல்வர், மற்றவர் ஏழை,
யார்தான் வெளியில் வருவாரோ?
திருடரும், பொய்யரும் தீர்ப்பு அளித்தால்,
தெய்வமும் விடுதலை ஆவாரோ?
இருமுறையல்ல, பலமுறை எண்ணி,
ஏழைக்கு நீதி தாரீரோ?
ஆமென்.
பரபா என்று இன்னொரு இயேசு!
பரபா என்று இன்னொரு இயேசு!
இறைவாக்கு: மத்தேயு 27:15-16.
இயேசுவுக்கு மரணதண்டனை விதித்தல்:
“மக்கள் விரும்பிக் கேட்கும் ஒரு கைதியை அவர்களுக்காக, விழாவின் போது ஆளுநன் விடுதலை செய்வது வழக்கம். அந்நாளில் பரபா என்னும் பேர்போன கைதி ஒருவன் இருந்தான்.”
இனியவாழ்வு:
பரபா என்றொரு இயேசிருந்தான்;
பாழாய் வாழ்க்கை வாழ்ந்திருந்தான்.
அரவாய் நஞ்சை அவன் வைத்து,
அடிக்கடி கொள்ளை கொலைசெய்தான்.
இரவாய் பகலாய் இவன் செய்த
இரக்கம் இல்லாச் செயல்களினால்,
திறவாதிருந்த சிறைக்கதவு,
திடுமெனத் திறக்க, பிடிபட்டான்!
ஆமென்.
சொந்தங்களை மீட்பீர்!
சுவையான வாக்கருள்வீர்!
இறைவாக்கு: மத்தேயு 27:12-14.
“மேலும் தலைமைக் குருக்களும் மூப்பர்களும் அவர்மீது குற்றம் சுமத்தியபோது அவர் மறுமொழி எதுவும் கூறவில்லை. பின்பு பிலாத்து அவரிடம், ‘ உனக்கு எதிராக எத்தனையோ சான்றுகள் கூறுகிறார்களே, உனக்குக் கேட்கவில்லையா? ‘ என்றான். அவரோ ஒரு சொல்கூட அவனுக்கு மறுமொழியாகக் கூறவில்லை. ஆகவே ஆளுநன் மிகவும் வியப்புற்றான்.”
இறைவாழ்வு:
பொய்க் குற்றம் சாட்டுகையில்
பொறுமையுடன் நின்றீர்.
பொறுப்பாளர் நிலைகண்டு,
பேசாமல் வென்றீர்.
செய்க் குற்றம் சூழ்வதனால்
சொல்லிழக்கும் என்னில்
சுவையான வாக்கருளி,
சொந்தத்தை மீட்பீர்!
ஆமென்.
அரசனைப் பணிவோம்!
இயேசுவைப் பிலாத்து விசாரணை செய்தல்”இயேசு ஆளுநன் பிலாத்து முன்னிலையில் நின்று கொண்டிருந்தார். ஆளுநன் அவரை நோக்கி, ‘ நீ யூதரின் அரசனா? ‘ என்று கேட்டான். அதற்கு இயேசு, ‘ அவ்வாறு நீர் சொல்கிறீர் ‘ என்று கூறினார்.”
நல்வாழ்வு:
நாட்டைப் பிடித்து ஆட்டிப் படைக்கும்,
நன்மை யற்றோர் அரசரெனில்,
கேட்டை ஒழித்து, கூட்டை ஆளும்
கிறித்து நமக்கு வேந்தனன்றோ?
கோட்டை கொத்தளம் ஏறி இறங்கி,
கிறித்து அரசரைத் தேடாதீர்.
ஏட்டில் இறைவன் எழுதிய உண்மை
என்றும் ஆள இடங்கொடுப்பீர்!
ஆமென்.