மண்மேல் காணும் மரஞ்செடி வேறே;
மடிந்து பிறக்கும் வைரம் வேறே.
உண்மை என்று உரைத்தல் வேறே;
உள்ளில் உறையும் மெய்யும் வேறே.
எண்ணிப் பார்க்கும் அறிஞர் வேறே;
ஏற்க மறுக்கும் இழிஞரும் வேறே.
கண்ணில் காட்டும் இறையுள் நீரே,
காண வாரீர், களித்திடுவீரே!
ஆமென்.
The Truth Will Make You Free
நல்வாழ்வு:
மகனைத் தந்தை கைவிடுவாரோ?
மாட்டார் என்பதை அறிவீரே.
இகத்தின் மனிதர் செய்யும் பாவம்
இயேசு சுமக்க, விட்டாரே.
அகத்தின் அழுக்கை உணரும்போது
ஆண்டவர் வாக்கைப் புரிவீரே.
நுகத்தை உடைத்து விடுதலை வாங்க
நேராய்ச் சிலுவை வருவீரே!
ஆமென்.
நல்வாக்கு: மத்தேயு 27:39-44.
“அவ்வழியே சென்றவர்கள் தங்கள் தலைகளை அசைத்து, ‘ கோவிலை இடித்து மூன்று நாளில் கட்டி எழுப்புகிறவனே, உன்னையே விடுவித்துக்கொள். நீ இறைமகன் என்றால் சிலுவையிலிருந்து இறங்கி வா ‘ என்று அவரைப் பழித்துரைத்தார்கள். அவ்வாறே தலைமைக் குருக்கள், மறைநூல் அறிஞர்களுடனும் மூப்பர்களுடனும் சேர்ந்து அவரை ஏளனம் செய்தனர். அவர்கள், ‘ பிறரை விடுவித்தான்; தன்னையே விடுவிக்க இயலவில்லை. இவன் இஸ்ரயேலுக்கு அரசனாம்! இப்பொழுது சிலுவையிலிருந்து இறங்கி வரட்டும். அப்பொழுது நாங்கள் இவனை நம்புவோம். கடவுளிடம் இவன் உறுதியான நம்பிக்கை கொண்டிருந்தானாம்! அவர் விரும்பினால் இப்போது இவனை விடுவிக்கட்டும். ‘ நான் இறைமகன் ‘ என்றானே! ‘ என்று கூறினார்கள். அவ்வாறே, அவரோடு சிலுவையில் அறையப்பட்டிருந்த கள்வர்களும் அவரை இகழ்ந்தார்கள்.”
நல்வாழ்வு:
இயேசுவை இகழும் ஏளனக் கூட்டம்
எண்ணிக்கையைக் கூட்டிடுதே.
காசும் பொருளும் தெய்வம் என்று,
காலத்தை வீணாய்க் கழித்திடுதே.
தூசும் ஒருநாள் சான்றினைக் கூறும்;
துன்பம் தொலைய வகுத்திடுமே.
பேசும் இறைவன் வாக்கினைக் கேட்டு,
பேரின்பத்தைப் பெருக்கிடுமே!
ஆமென்.
இரண்டு கள்வரிடையே இயேசு!
நற்செய்தி: மத்தேயு 27:38.
“அதன்பின் அவருடைய வலப்புறம் ஒருவனும் இடப்புறம் ஒருவனுமாக இரு கள்வர்களை அவருடன் சிலுவைகளில் அறைந்தார்கள்.”
நல்வாழ்வு:
திரண்டு தூயர் பின்வந்தாலும்,
தெய்வ மகனின் பக்கம் யார்?
இரண்டு கள்வர் தொங்குதல்கண்டு,
இன்று நமையும் எண்ணிப் பார்?
புரண்டு போகும் உலக வாழ்வில்,
பொய்யர் சூழ்ந் திருந்தாலும்,
மிரண்டு அஞ்சிக் கலங்கவேண்டாம்;
மீட்பர் தொங்கிக் காட்டுகிறார்!
ஆமென்.
இழந்து கொடுத்தல்!
நல்வாக்கு; மத்தேயு 27:35
“அவர்கள் அவரைச் சிலுவையில் அறைந்த பின்பு குலுக்கல் முறையில் அவருடைய ஆடைகளைப் பங்கிட்டுக்கொண்டார்கள்;”
நல்வாழ்வு:
மடைதிறந்த வெள்ளம் போன்று,
மகிழ்ந்தே வழங்கும் மன்னவா,
உடை கொடுத்துத் தொங்கும் உம்மை
உலகும் நோக்கிப் பார்க்காதா?
அடையயியலா மீட்பு வழங்க
ஆடையும் கூட இழந்தவா,
விடைதெரியா அம்மண மனிதர்
விடுதலையடைய உடுத்த, வா!
ஆமென்.
இழந்து கொடுத்தல்!
நல்வாக்கு; மத்தேயு 27:35
“அவர்கள் அவரைச் சிலுவையில் அறைந்த பின்பு குலுக்கல் முறையில் அவருடைய ஆடைகளைப் பங்கிட்டுக்கொண்டார்கள்;”
நல்வாழ்வு:
மடைதிறந்த வெள்ளம் போன்று,
மகிழ்ந்தே வழங்கும் மன்னவா,
உடை கொடுத்துத் தொங்கும் உம்மை
உலகும் நோக்கிப் பார்க்காதா?
அடையயியலா மீட்பு வழங்க
ஆடையும் கூட இழந்தவா,
விடைதெரியா அம்மண மனிதர்
விடுதலையடைய உடுத்த, வா!
ஆமென்
குடிக்கும் எனது நண்பர்களே!
நல்வாக்கு:மத்தேயு 27:33-34.
‘ ‘ மண்டையோட்டு இடம் ‘ என்று பொருள்படும் ‘ கொல்கொதா ‘ வுக்கு வந்தார்கள்; இயேசுவுக்குக் கசப்பு கலந்த திராட்சை இரசத்தைக் குடிக்கக் கொடுத்தார்கள். அவர் அதைச் சுவை பார்த்தபின் குடிக்க விரும்பவில்லை.”
நல்வாழ்வு:
முடிக்கும் இடத்தில் வந்திட்டும்,
முதல்வர் இயேசு குடிக்கவில்லை.
அடிக்கும் வீரர் அளித்திட்டும்,
ஆவலில் ஏற்று பிடிக்கவில்லை.
குடிக்கும் எனது நண்பர்களோ
குவளையில் இருப்பதைப் பார்ப்பதில்லை.
கடிக்கும் பாம்பின் நஞ்சு அது;
கைவிடார்க்கு வாழ்வுமில்லை!
ஆமென்.
இறைவாக்கு: மத்தேயு 27:32.
இயேசுவை சிலுவையில் அறைதல்:
“அவர்கள் வெளியே சென்ற போது சிரேன் ஊரைச் சேர்ந்த சீமோன் என்ற பெயருடைய ஒருவரைக் கண்டார்கள்; இயேசுவின் சிலுவையைச் சுமக்கும்படி அவரைக் கட்டாயப்படுத்தினார்கள்.”
இனிய வாழ்வு:
அங்கே அவரும் ஒருவனைக் கண்டு
அவனது தோளில் சுமை வைத்தார்.
இங்கே இப்படி எத்தனையோ பேர்
இன்றும் சிலுவை சுமக்கின்றார்.
எங்கும் நீதி நேர்மை எல்லாம்
என்றோ சிலுவை ஆனதைப் பார்.
பொங்கும் உணர்வை அடக்கிக்கொண்டு,
புனிதனின் சிலுவை சுமப்பவர் யார்?
ஆமென்.