இன்றைய நற்செய்தி!

நற்செய்தி கேட்பது நற்பேறு;

நாமும் பெறுவோம் இப்பேறு!

நல்வாழ்த்து:

அறிவேயில்லா அடியேனை
அழைத்துக் கொடுப்பது உம் அருளே.
வறியோனாக வீழ்த்தாமல்
வாழ வைப்பதும்  உம் பொருளே.
நெறியே இல்லா இவ்வுலகில்
நிம்மதி தருவது உம் வழியே.
கிறித்தோனாக வாழ்ந்து நிதம்
கிறித்துவைப் புகழ்வது என்பணியே!
நல்வாக்கு:
மத்தேயு/ Matthew 24:26-28.
“ஆகையால் எவராவது உங்களிடம் வந்து, ‘ அதோ, பாலைநிலத்தில் இருக்கிறார் ‘ என்றால் அங்கே போகாதீர்கள்; ‘ இதோ, உள்ளறையில் இருக்கிறார் ‘ என்றால் நம்பாதீர்கள். ஏனெனில் மின்னல் கிழக்கில் தோன்றி மேற்குவரை ஒளிர்வது போல மானிட மகனின் வருகையும் இருக்கும். பிணம் எங்கேயோ அங்கே கழுகுகள் கூடும்.”
நல்வாழ்வு:
காட்டிலென்பார், அறை வீட்டிலென்பார்;
கடவுளின் மைந்தனே தாமென்பார்.
ஏட்டில் இறைவன் எழுதியதை
எண்ண மறந்தால் ஏய்த்திடுவார்.
கேட்டில் விழாது நிற்பவர் யார்?
கிறித்துவுக்குள் வாழ்பவரார்.
வேட்டு வைக்கும் கொடியவரால்
விரிக்கும் வலைக்குத் தப்பிடுவார்!
ஆமென்.

நாள்தோறும் நற்செய்தி

கடவுளின் வாக்கைக் கேட்போமா?
கவலை நீங்குதல் காண்போமா?

நல்வாழ்த்து:
தேறுதல் இன்றி அலைந்தவனின்
மீறுதல் யாவையும் மன்னித்து,
ஆறுதல் தந்த அருள்வாக்கைக்
கூறுதலே இந்நல்வாழ்த்து!

நல்வாக்கு;
மத்தேயு/Matthew 24:23-25.
“அப்பொழுது யாராவது உங்களிடம், ‘ இதோ, மெசியா இங்கே இருக்கிறார்! அதோ, அங்கே இருக்கிறார் ‘ எனச் சொன்னால் நீங்கள் நம்ப வேண்டாம். ஏனெனில் போலி மெசியாக்களும், போலி இறைவாக்கினர்களும் தோன்றி, முடியுமானால் தேர்ந்து கொள்ளப்பட்டவர்களையே நெறி தவறச் செய்ய பெரும் அடையாளங்களையும் அருஞ் செயல்களையும் செய்வார்கள். இதை முன்னதாகவே நான் உங்களுக்குச் சொல்லி விட்டேன்.”

நல்வாழ்வு:
கள்ள வாக்கினரும்,
கறையான ஊழியரும்,
அள்ளிச் செல்கின்றார்,
அறியா மந்தையினை.
தெள்ளத் தெளிவு பெற,
திருக்கூட்டம் மீண்டு வர
கொள்ளையானவரைக்
கொணர்வது நம்கடமை!
ஆமென்.

நாள்தோறும் நற்செய்தி

படைத்தவர் வாக்கைக் கேட்போமே,
கிடைத்திடும் பண்பில் மகிழ்வோமே!
நல்வாழ்த்து:
பற்றுறுதி நீதி தரும்.
படைத்தவரைப் பணிவீர்.
பெற்று வரும் தூய்மையினால்,
பெரு நன்மை புரிவீர்.
மற்றவரும் பின் வருவர்;
மறை வழியில் நடப்பீர்.
கற்றறிந்த உண்மையிது;
கடவுளையே புகழ்வீர்!

நல்வாக்கு:
மத்தேயு/Matthew 24:19-22.

“அந்நாள்களில் கருவுற்றிருப்போர் பாலூட்டுவோர் ஆகியோரின் நிலைமை அந்தோ பரிதாபம்! குளிர்காலத்திலோ ஓய்வு நாளிலோ நீங்கள் ஓடவேண்டிய நிலை ஏற்படாதிருக்க இறைவனிடம் வேண்டுங்கள்.ஏனெனில் அப்போது பெரும் வேதனை உண்டாகும். உலகத் தோற்றமுதல் இந்நாள்வரை இத்தகைய துன்பம் உண்டானதில்லை; இனிமேலும் உண்டாகப்போவதில்லை.அந்நாள்கள் குறைக்கப்படாவிட்டால் எவரும் தப்பிப் பிழைக்கமுடியாது. எனவே தாம் தேர்ந்துகொண்டவர்களின் பொருட்டுக் கடவுள் அந்நாள்களைக் குறைப்பார்.”

நல்வாழ்வு:

எரிந்தழிக்கும் இன்னலின்று உரிந்தெடுக்கும் இறையே.
விரிந்திடுதே என் துன்பம், வெறுக்கின்றேன் குறையே.
சரிந்துவிழும் வாழ்க்கையினைச் சரிசெய்தல் முறையே!
புரிந்து கொண்டு கேட்கின்றேன்; அருள் தாரும் நிறைவே!

ஆமென்.